ஆண்டவன் நாமத்தை ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி – ஈஸ்வரபட்டர்

ஆண்டவன் நாமத்தை ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி – ஈஸ்வரபட்டர்

 

அறிவு மார்க்கம் பக்தி மார்க்கம் சித்து மார்க்கம் இப்படி ஒவ்வொரு வழியினரும் ஞானத்தை மனிதனுக்குகந்த மார்க்கமாகத்தான் உணர்த்துகின்றனர்… உணர்கின்றனர்.

ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மிருகங்களுக்கு ஞானம் இல்லை…! என்கிறான் மனிதன். அறிவு மட்டும் மிருகத்திற்குண்டு. பகுத்தறியும் நிலை கொண்ட மனிதனுக்கு ஞானம் உண்டு என்று உணர்த்துகின்றான்.

1.அறிவு-கூர்மை
2.அறிதல்-தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம்
3.அறிவோம்-அறிவின் ஆற்றலைச் செயல்படுத்தச் செல்லும் வழி.

எறும்பு அதற்குகந்த அறிவைக் கொண்டு ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? தனக்கு வேண்டிய ஆகாரத்தை அறிவைக் கொண்டு அறிகின்றது.

தன் செயலைக் கொண்டு அவ்வுணவைச் சேமிக்க மண்ணைப் பறித்து அவ்வுணவை அதில் சேமித்து பிறருக்குத் தெரியாவண்ணம் பாதுகாக்கின்றது.
1.அறிவைக் கொண்டு செயல்படுத்தி
2.தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பாதுகாக்கும் எறும்பிற்கு ஞானமில்லையா…?

ஒவ்வொரு சிறு பிராணியும் தனக்குகந்த அறிவின் ஞானத்தைச் செயல் கொண்டுதான் ஜீவிக்கின்றது. மனிதனைக் காட்டிலும் அறிவும் ஞானமும் சில மிருகங்களிடம் உண்டு.

ஆனால் அதற்குகந்த அங்க அவயங்களும் சொல் வெளிப்படுத்தும் ஒலி பாஷையும் இல்லாததனால் உணர்வின் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தக்கூடிய பகுத்தறியும் ஞானம் இல்லை.

அறிவின் செயல் ஞானமுண்டு. உயர் ஞானத்தை உணர்வின் தன்மையை மாற்றியமைத்துச் சக்தி கொள்ளக்கூடிய ஞானத்தின் வளர்ச்சி அங்கில்லை.

இந்த ஞானத்தைச் செயலாக்கி ஒன்றுடன் ஒன்று சேர்த்து பிறிதொன்றின் கூட்டமைக்க மனிதனின் ஞானத்திற்குச் செயல் திறமை சொல்லாற்றல் இவை உண்டு.

இந்த ஞானத்தின் உயர் ஞானம் கொள்ளத்தான் பக்தி மார்க்கம்… சித்து மார்க்கம்… யோக மார்க்கம்…! என்றெல்லாம் இந்த மனித உடலின் உணர்வை எண்ணத்தால் ஒருநிலைப்படுத்தி ஜெபம் என்று வழிப்படுத்துகிறார்கள்.

ஒவ்வொருவரும் அறிந்த ஒவ்வொரு மந்திரச் சொற்களைச் சொல்லி உயர் ஞானத்தைப் பெற்று ஆண்டவனிடம் முக்தி பெறும் மார்க்கத்தை இவ்யோக சாதனையால் உணர்வைக் கட்டுப்படுத்தி சுவாசத்தை ஒவ்வொருவரும் தான்… தான்… அறிந்த மார்க்கங்களை உணர்த்துகின்றார்கள்.

1.பக்தியினால் ஞானம் கொண்டு
2.சக்தியினால் உணர்வை ஒரு நிலை கொண்டு
3.எண்ணத்தால் உயர் ஞானத்தின் அலையை நாம் செயல்படுத்த
4.நற்குணங்களின் அலைத்தொடரில் இந்த ஞானத்தைச் செலுத்தி அந்த ஞானச் செயலாக நாம் ஒன்றாகலாம்.

இயற்கையின் படைப்பில் உயிரணுத் தோன்றி உருவாய் உருவமாக உருக்கொண்டு இயற்கைச் சுவாச முறையை மாற்றியமைத்துச் சகல சித்து நிலை பெறுவதல்ல…! உயர்ந்த ஞான சக்தியின் வழித் தொடர் பெறுவதற்கு.

இந்த ஞானம் கோபத்தில் உள்ளவனுக்கும் துணை செல்கிறது… திருடனுக்கும் துணை செல்கிறது… வஞ்சகனுக்கும் துணை செல்கிறது.. பெரும் காமுகனுக்கும் துணை செல்கின்றது.

அவரவர்கள் அறியும் அறிவின் செயலைச் செய்விப்பதே ஞானம் தான்.
1.ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி
2.உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”

நற்குணங்களின் படைப்பை ஞானத்தின் சாந்தம் கொண்டு “மனிதனும் தேவனாகலாம்…!” என்று சித்தர்கள் உணர்த்திய முறை இதுவே.

உணர்வின் எண்ணத்தை “ஆண்டவனின் நாமத்தை” ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி…!
1.உணர்வின் எண்ணத்தை நற்குணங்களின் அமிலமாக
2.நாம் வளர்க்கும் செயல் முறை ஞானம் தான் மனிதன் தெய்வமாகும் முறை.

Leave a Reply