“சிவசக்தி” ரூபத்தின் இரகசியம் – ஈஸ்வரபட்டர்

“சிவசக்தி” ரூபத்தின் இரகசியம் – ஈஸ்வரபட்டர்

 

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மனத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடன் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என் பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…! இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!

1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.

Leave a Reply