குருவின் துணை இருந்தால் தான் எதுவுமே நிலைத்து இருக்கும் – ஈஸ்வரபட்டர்

குருவின் துணை இருந்தால் தான் எதுவுமே நிலைத்து இருக்கும் – ஈஸ்வரபட்டர்

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.

1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

இந்தக் கலியில் வந்த பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளையும் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்ட முடியும்.

1.வளரும் முறையிலிருந்து தான் இந்த நிலை எல்லாமே வருகின்றது
2.வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.

1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்ட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

Leave a Reply