விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் இன்றைய உலகம் ஆன்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும் – ஈஸ்வரபட்டர்

விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் இன்றைய உலகம் ஆன்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்… என்றும் ஜோதி தரிசனம்… என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில் “அறிவை அறிவால் அறிவர்…!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய் அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது…?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்… திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா… கொள்…! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்…!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்…
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை…!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்… இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்…!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்…” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா…?

போற்றி…போற்றி…! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.“பூசத்தில் ஜோதி கண்டேன்… பிறவிப்பயன் பெற்று விட்டேன்…!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா…? பெற்றதின் பயனை…! ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலக இயலில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா…?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்…! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே… உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்… சந்திரன்… ஜோதி விளக்கு… அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்…!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் – தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி… “அறிவின் ஒளியப்பா…!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.

அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும் ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

Leave a Reply