
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்
பரிணாம வளர்ச்சியில் ரூபங்கள் மாறி மாறி… இவை அனைத்தும் ஒருக்கச் சேர்த்துத் தான் நாம் இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.
பேரண்டத்தின் சக்தியும் இந்த உடலான பிண்டத்திற்குள் அமைந்துள்ளது என்று நம் குருநாதர் காட்டிய இந்த உண்மைகளை உணர்தல் வேண்டும்.
ஏனென்றால்…
1.பேரண்டத்தில் அணுக்களாக இயங்கிக் கொண்டிருந்தாலும்
2.நமது பூமிக்குள் அணுக்களாக இயங்கிக் கொண்டிருந்தாலும்
3.உயிர் அணுக்களாகத் தோன்றி… ஜீவ அணுக்கள் உருவாகி… அதனின் மலம் உடலாகி…
4.அந்த உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெற்ற நாம்
5.மனிதனாக உருபெற்ற இந்தச் சந்தர்ப்பத்தை எதன் வழியில் பயன்படுத்த வேண்டும்…? என்பதை அறிதல் வேண்டும்.
துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்தும் சக்திகள் அனைத்தையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து
1.நம் பூமியை நோக்கி துருவப் பகுதி வழியாக வந்து கொண்டும்
2.பூமிக்குள் பரவிக் கொண்டும் உள்ளது.
3.அதனை நாம் பருகும் சந்தர்ப்பம்தான் துருவ தியானம்.
அவ்வாறு வந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் மகரிஷிகள் என்பவரும் நம்மைப் பொன்று மனிதனாக உருப் பெற்று வளர்ந்து வந்தவர்கள் தான். மனிதனாக உருவாகி வளர்ச்சி பெற்ற நிலையில்
1.விண்ணின் ஆற்றலைப் பெற்றவர்கள் அனைவருமே வேகா நிலை அடைந்துள்ளார்கள்.
2.அவர்கள் தான் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
3.பேரண்டத்தில் எத்தகைய கடும் விஷங்கள் வந்தாலும் கொடூர நெருப்பானாலும் இவர்கள் மடிவதில்லை… என்றும் அழிவதில்லை.
அதைத்தான் பேரின்பப் பெரு வாழ்வு என்பது.
கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவு கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெற்ற நாம் அதனின் துணை கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறுவோம் என்றால் நாமும் ஏழாவது நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.
இதற்கு முன் நாம் தெரிந்து கொள்ளவில்லை. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நம்முடைய சந்தர்ப்பம் இப்பொழுது அறிய முடிந்தது.
ஆகவே இதைக் கேட்டுணர்ந்தவர் அனைவருக்கும்
1.தன்னை அறிதலும்… விண்ணை அறிதலும்… மண்ணுலகை அறிதலும்… என்ற நிலையில்
2.மெய் ஞானத்தின் உணர்வுகளை வளர்க்கும் சந்தர்ப்பம் வருகிறது.
அதனை அறியும் ஆற்றலும் வளர்க்கும் சந்தர்ப்பமும் நமக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அது நம்முடைய “பூர்வ புண்ணியம்” என்றே சொல்ல வேண்டும்.
“கிடைத்த இந்தப் பாக்கியத்தை நழுவ விடாது” குருநாதர் காட்டிய மெய் வழியை நாம் கடைப்பிடித்தல் வேண்டும். அவருடன் அரவணைப்பாக அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை அடைதல் வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.