சத்ரு…மித்ரு… என்று வந்தாலும் அதிலே காக்கும் திறனாகப் பெற வேண்டிய “உன்னத சக்தி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சத்ரு…மித்ரு… என்று வந்தாலும் அதிலே காக்கும் திறனாகப் பெற வேண்டிய “உன்னத சக்தி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு உயிர் அணுக்களின் (உயிரினங்கள்) உயர் அமில வீரிய குணச் செயலின் தொடர் என்பது சுழல் சக்தி எண்ணமாக… பிரம்மத்தின் பிம்பமாக… சரீரச் செயல் வாழ்க்கையாகப் பூமியின் ஈர்ப்பில் செயல்படுகிறது.

அந்த உயிரினங்கள் தன் வாசனை குணத்திற்கொப்ப ஈர்ப்பின் பக்குவமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு செயல்படும் அனைத்திலுமே
1.இரு குண அமிலங்கள் சந்திக்கும் நேர் தொடரில் கலந்து
2.சத்ரு…மித்ரு… என்ற செயல் நடக்கிறது.

அதனால் அந்த இரு குண அமிலங்களில் எது வீரியத் தன்மையோ அதன் குணத்திற்கொப்ப மற்றொன்று அதனுள் கலந்து மற்றொன்றாக உருவாக்கிடும் செயல் நடக்கின்றது.

இப்படிப்பட்ட எதிர் மோதல்களைத் தன் வாழ்க்கை நடை முறையில் சந்திக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் அந்த எண்ண மோதல்களை
2.அறிந்து… உணர்ந்து செயல் கொண்டிடும் அவகாசக் காலம் ஒரு நொடிப் (நொடிக்குள்) பொழுதின் காலம் தான்.

அந்த நொடிப் பொழுதில் அறிந்ததை உடனே தெளிதலும் தெளிந்ததின் பொருள் விளங்கி எதிர் மோதல் குணங்கள் தன்னைப் (ஆன்மா) பாதித்திடா வண்ணம் காத்துக் கொள்ளும் நிலைக்கு வருகின்றது.

அது மட்டுமல்ல…!

1.அந்த எதிர் மோதல் குணங்களையே மாற்றியமைத்து நற்குண நீர் பாய்ச்சி
2.தன்னுள் எதிர் மோதல் குணங்களையே அமுதமாக உட்கொண்டுவிடும் வல்லமை பொருந்தியவர்கள் தான்
3.”சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்…!”

பிராணிகளில் மான் தன் குட்டிக்குப் பாலைப் புகட்டும் பொழுது அது எடுக்கும் உணர்வின் தன்மை எப்படிப்பட்டது…?

பாலை ஊட்டும் பொழுதே இயற்கையாகச் செயல் கொள்ளும் தொடரில் தன்னைப் புசிக்க வரும் கொடிய விலங்குகளின் உணர்வுகள் காற்றிலே அலைகளாக வரும் பொழுது தன் மீது வந்து மோதியவுடன் அந்த வாசனையை அறிந்து கொள்கிறது.

1.உடனே தன் சுவாசத்தின் ஈர்ப்பினால் எதிர் மோதல் குணங்களை அறிந்து
2.தான் சுரந்திடும் பாலைத் தடைப்படுத்தி நிறுத்தி விடுகிறது.

தன் குட்டிக்கும் அதே உணர்வை ஊட்டி ஒரு நொடிக்குள் நடைபெறும் இயற்கையின் சூட்சம உணர்வில் அது எடுக்கும் அச்ச உணர்வு கொண்டு விரைந்து தப்பி ஓடிவிடும்.

ஏனென்றால் அதற்குள் இருக்கும் குண அமிலச் சுரப்பிகள் இயற்கையின் வழி வரும் (மற்ற கொடிய மிருகங்கள்) அந்த வாசனைக்கொப்ப உணர்வு கொண்டு அந்தச் (மானின்) சரீரத்தைச் செயல்படுத்தச் செய்கிறது.

அதாவது ஒரு கட்டளைக் கேந்திரமாகச் (CONTROLLING STATION) செயல்படும் எண்ணத்தின் பிடர்தல் உந்துவிசை கொண்டு எந்த உணர்வுகள் அச்சத்தை ஊட்டியதோ (ஈர்த்ததோ)
1.அதே உணர்வுகளில் நொடிக்குள் மாறு கொண்ட விநோத செயல்பாட்டை அறிந்து
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் செயல்கள் துரித கதியில் செயல்படுகிறது.

இதே செயல் முறை தான் கௌதம புத்தருக்கும் அன்று ஏற்பட்டது.

புத்தர் தான் பெற்ற அனுபவ ஞானத் தொடரில் சரீர அவஸ்தைகளிலிருந்து மனிதன் விடுபட்டு இந்தச் சரீரத்தைக் காத்திட வேண்டும் என்றால் மனிதன் விடுபட வேண்டிய குணங்களில் “அதி ஆசையை முதன்மையாகக் காட்டினார்…!”

ஆக பிறவித் துன்பங்களுக்குக் காரணமே “ஆசை” என்ற சொல் நாமப்படுத்திச் சூட்சமங்களை உள் மறைத்து உயிரான்ம சக்தியை வலு கொண்டதாக ஆக்கிடும் செயலில் புத்தருக்குப் பரிபூரணத்துவம் உண்டு.

நம் உயிரான்ம சக்தியைக் காத்திடும் பஞ்ச உறுப்புகளில் எதிர் மோதல் தன்மைகளைப் பக்குவமாக விலக்கிடும் உணர்வுகள் கொண்டு அறிந்து செயல்படும் பிடர்தல் செயல்பாட்டின் பொழுது
1.உயிரான்ம சக்தியில் ஏற்கன்வே பதிவு செய்த செயலை வீரியமாக்கிடாமல்
2.ஆன்மாவில் பதிந்த பின் சுவாசத்தின் வழி கொண்ட சரீர உணர்வுகளில் செயலாக்கத்திற்கு
3.ஞான விழிப்பார்வை கொண்டு “நொடி நேரச் செயல்பாடாக…”
4.அருள் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் வலுக் கூட்டிக் கொண்டு
5.அதனைப் பார்வை வழியாச் செயல்படுத்துதல் வேண்டும்
6.ஆனால் அப்பொழுது செயல்படும் செயலின் ஈர்ப்பில் அச்ச உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளக் கூடாது.

காத்திடும் பக்குவமும்… எதிர் மோதல் குணங்களையே தன் ஒளி காந்தத்தால் வசமாக்கி.. அன்பு கொண்டு ஈர்த்திடும் செயலாக… தன் எண்ண அசைவு கொண்டு செயலாற்றிடல் வேண்டும்.

காட்டிலே புத்தரைக் கொல்ல வந்த கள்வன்… அவன் எடுத்த விரக்தியின் உச்சகட்ட ஆவேச உணர்வுகள் “சாது என்றோ… சம்சாரி என்றோ…” அறிந்து கொள்ளாத செயல்பாடாக இருந்தது.

அவனின் அறிவின் மௌடீகம் எவ்வளவு கொடுமையாக வீரியமாக அவனுக்குச் செயல்பட்டாலும்
1.அதை ஒரு நொடிக்குள் மாற்றியமைத்துச் சமப்படுத்திய புத்தனின் செயலாற்றும் திறன்
2.எல்லா ஞானச் செல்வங்களும் (மனிதர்கள்) பெற வேண்டும்.

Leave a Reply