“ஜோதி மரம்… ஜோதிப் புல்…”

“ஜோதி மரம்… ஜோதிப் புல்…”

 

மலைகளில் உள்ள சில மரங்களில் “மெர்க்குரி…” போன்று வெளிச்சம் வரும். அதனின் மரப்பட்டைகளில் எடுத்துக் கொண்டால் மெர்க்குரி போல ஒளி வரும்.

1.அத்தகைய மரங்கள் மின்னலில் இருந்து ஒளிக்கற்றைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும் சக்தி பெற்றது.
2.மிகவும் இருண்டு விட்டால் அந்த ஒளி அலைகளை வெளி பரப்பும்.
3.இதை “ஜோதி மரம்” என்று சொல்வார்கள்.

காட்டிற்குள் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று அந்த இயற்கையின் மணங்களை நீ பார்…! என்று காட்டினார்.

அதே சமயத்தில் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் புல்லைத் தூருடன் எடுத்துக் காட்டச் சொன்னார். பார்த்தால் அதிலிருந்து வெளிச்சங்கள் வருகின்றது. “ஜோதிப் புல்” என்று சொல்வார்கள்.

ஒரு பேட்டரி லைட்டை நாம் உபயோகிப்பது போல அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்து வந்த மனிதன் இதை எல்லாம் பயன்படுத்தித் தனக்கு வேண்டிய வெளிச்சத்தை உருவாக்கிக் கொண்டான். இந்த வெளிச்சத்தில் பல உண்மைகள் அறிந்து கொண்டான்.

புலஸ்தியர் வம்சத்தில் வந்தவர்கள் இத்தகைய இயற்கையின் உண்மையை அறிந்து கொள்ளும் சக்தி பெற்றனர். புலஸ்தியர் வம்சத்தின் வழி வந்தவன் தான் அகஸ்தியன். இன்று கதைகளில் நாம் சொல்லும் அகஸ்தியர் அல்ல. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர்.

அந்தப் புலஸ்தியர் வம்சத்தில் வந்தவர்கள் காட்டு விலங்குகளில் இருந்தும் மற்ற விஷ ஜந்துகளிடம் இருந்தும் விஷமான காற்றுகளிலிருந்தும் (மணம்) தங்களைப் பாதுகாத்துக் கொளள “பல மூலிகைகளைக் கண்டுணர்ந்தார்கள்…”

ஏனென்றால் சில செடிகள் இருக்கும் பக்கம் மனிதர்கள் சென்றால் அந்த விஷக் காற்று பட்டால்.. மனிதனை மயக்கச் செய்யும். மிருகங்களையும் கூட மயக்கச் செய்யும்.

இது போன்ற நிலைகளில் இருந்து தப்புவதற்கு அன்று மனிதனாக வந்த புலஸ்தியர் வம்சத்தை சேர்ந்த அந்தக் குடும்பம்
1.பல தாவர இனங்களை எடுத்துத் தன் உடலில் அணிகலன்களாக அணிந்து கொண்டனர்.
2.விஷ ஜெந்துகளிலிருந்தும் பூச்சிகளிலிருந்தும் இருந்தும் மின்னல்கள் தாக்குவதிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர்.

பூமியில் மின்னல்கள் ஏற்பட்டால் கடலிலே தாக்கினால் மணலாகின்றது. மரத்தைத் தாக்கினால் மரம் கருகிவிடுகின்றது. மனிதனைத் தாக்கினால் மனிதன் கருகி விடுகின்றான்.

பூமியைத் தாக்கினால் பூமியின் நடு மையம் சென்று அது கொதிகலனாக மாறி
1.இந்த பூமிக்குள் பல பொருள்களை உருவாக்கும் வீரியத்தைக் கொடுக்கின்றது.
2.அதற்குள் பல கலவைகளை மாற்றி… ஆவியாக மாற்றி அது வெளிவரப்படும்போது
3.பல பல உலோகங்களைக் கூட உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதைப் போன்ற மின்னலின் இயக்கத்தை அடக்குவதற்கு என்று மூலிகைகளை அந்தப் புலஸ்தியர் கண்டுணர்ந்தனர். அந்த மூலிகையை அணிகலன்களாக அணிந்திருப்பதனால் மின்னலின் வீரியம் தணிந்து நாம் சாதாரண மின் ஒளி விளக்குகளைக் கண் கொண்டு பார்க்கின்றோமோ இதைப்போல அன்று கண்களால் மின்னலை எளிதில் கண்டார்கள்.

இதைத் தெரியப்படுத்துவதற்காக குருநாதர் என்ன செய்தார்…?

என் கையில் விழுது ஒன்றைக் கொடுத்துவிட்டார். ஆனால் அது எதற்கு என்று எனக்குத் தெரியாது. நீ மின்னலைப் பாருடா…! என்றார்.

மின்னலைப் பார்த்தால் கண் எல்லாம் போய்விடும்.. நான் பார்க்க மாட்டேன் சாமி…! என்று சொல்கிறேன். இரண்டு பேருக்கும் சண்டை வருகிறது.

நான் சொல்வதைச் செய்வேன் என்றாய் அல்லவா.. நீ மின்னலைப் பார்… என்றார் குருநாதர்.

அதைப் பார்க்க மாட்டேன்… நான் பெண்டு பிள்ளைக்காரன்… குடும்பம் எல்லாம் இருக்கிறது..! என்றேன்.

அவர்களை எல்லாம் விட்டுவிட்டுத் தானே இங்கே என்னுடன் வந்தாய்… நான் சொல்வதைக் கேள்… என்றார்.

உன் சம்சாரத்தை நோயிலிருந்து எழுப்பிவிட்டேன். சில உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்குத் தான் காட்டிற்குள் உன்னைக் கூப்பிட்டேன். இப்பொழுது நீ மாட்டேன் என்று சொன்னால் எப்படி…? என்று கட்டாயப்படுத்துகின்றார்.

மின்னல்கள் வருவதைப் பாருடா…! என்கிறார். ஆனால் என் கையில் விழுதைக் கொடுத்தது எனக்குத் தெரியாது. தொடர்ந்து வாதிக்கிறார் குருநாதர்.

கையில் விழுது இருக்கிறது… என்று சொல்லிக் கொடுத்தால் தானே எனக்குத் தெரியும். மின்னலைப் பாருடா… பாருடா…! என்றே சொல்கின்றார்.

அப்புறம் அதைப் பார்த்தபின் என் கண்கள் கூசவில்லை. நம் மெர்குரி லைட் எவ்வாறு இருக்குமோ அது போன்று இருக்கிறது.

ஏனென்றால் அந்த மின்னலின் வீரியத்தை அடக்கக்கூடிய சக்தி அந்த விழுதுக்கு உண்டு. அப்பொழுதுதான் அதை உணர்ந்தேன்

இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று எதிர்நிலையான உணர்வு கொண்ட நிலையில் மோதி மின்னலாக மாறினால் காட்டிலிருக்கும் மரம் செடி கொடிகளில் பட்டால் அது கருகிவிடும்.

மின்னல் தாக்கப்படும்போது அதற்கு எதிர்நிலையான மரங்கள் தான் கருகுமே தவிர அதன் அருகில் வேறு மரங்கள் இருந்தால் அவை கருகுவதில்லை.

பனை மரம் என்றால் பனை மரம் கருகும். தென்னை மரம் என்றால் தென்னை மரம் கருகும். மாமரம் என்றால் மாமரம் மட்டும் தான் கருகும். அதன் அருகிலே இருக்கக்கூடிய மற்ற செடி கொடிகள் எதுவும் கருகுவதில்லை.

இந்த இயற்கையின் சீற்றங்கள் எப்படி இயங்குகின்றது…? என்று குருநாதர் இதையெல்லாம் தெளிவாக உணர்த்தினார். அதைத் தான் உங்களிடமும் சொல்கிறேன்.

Leave a Reply