
குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அருள் உபதேசம் கொடுக்கும் விதம்
பரிணாம வளர்ச்சியில் பல கோடி நிலைகளிலே விஷத்தை வென்றிடும் உணர்வு பெற்று இன்று மனிதனாக வந்த பின்
1.இன்று விஷத்தை வெல்லத் தவறினால் நீ மீண்டும் மிருக நிலை அடைகின்றாய்…
2.விஷ ஜந்துகளின் உருவத்தை நீ பெறுகின்றாய்…
3.உன்னில் எது…? என்ற நிலைகளை எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்குகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
ஆகவே தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பதற்கு நீங்கள் நினைக்கலாம் ஒரு பத்து நிமிடத்தில் அல்லது ஒரு அரை மணி நேரத்தில் சொல்லிவிட்டுச் செல்லலாமே என்று…!
ஆனால் குருநாதர் எம்மைத் தெளிவாக்கும் போது குறைந்தபட்சம் ஏழு நாட்கள் ஆகிவிட்டது. அந்த ஏழு நாட்களாக… இந்த விளக்கவுரைகளையும்
1.உணர்வின் அலைகள் எப்படி பதிகின்றது…? என்பதனையும்
2.பதிந்த உணர்வுகளை நீ எப்படி நுகர வேண்டும் என்பதனையும்
3.அதை நுகர்ந்த பின் நீ எதை மாற்றிக் கொள்ள வேண்டும்…?
4.எதனை நீ பெருக்கிக் கொள்ள வேண்டும்…? என்பதனையும்
5.சற்று சிந்தித்துப் பார்… என்ற உணர்வினைக் கொடுத்தார் குரு.
என் குருநாதர் எனக்குக் கொடுத்த இதே உணர்வைத்தான் இந்த இயற்கையின் நிலைகளில் இருந்து உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். நீங்கள் பெற வேண்டியது எது…? அடுத்த எல்லை எது…? என்று சற்று சிந்தித்து இந்த வாழ்க்கையின் நிலைகளை நமது கடைசி எல்லை எது…? என்ற நிலையை முடிவு செய்து அதனின் நிலைகளைப் பெறுங்கள்.
இதன் வழிகள் பெற்றவர் தான் நம் குருநாதர். வைகுண்ட ஏகாதசி அன்று இந்த உடலை விட்டுக் சென்ற பின் ஏகாந்த நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டல எல்லையை அடைந்தார்.
ஏனென்றால் அவருடைய வாழ்க்கையில் அவர் மனைவியார் தன் கணவன் சொன்னபடி அந்த அருள் உணர்வின் தன்மை பெற்ற பின் அவருடன் இணைந்தே வாழ்ந்தார்.
அதன் வழியில் இவர் உடலை விட்டுச் சென்ற பின்… தன்னுடன் (குருநாதர்) அரவணைத்த உணர்வு கொண்டு விண்ணின் ஆற்றலை தனக்குள் கருவுற்று… உணர்வின் தன்மை ஒளியாகும் நிலைகள் பெற்று… இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இன்றும் ஒளியின் சரீரமாக இருவருமே சப்தரிஷி மண்டலத்தில் நிலை கொண்டுள்ளார்கள்.
அவர் ஒரே நிலையல்ல… பல வழிகளில் அதாவது எத்தனையோ வகைகளில் எத்தனையோ உணர்வுகள் எதனதன் வழிகளில் எவ்வாறு ஆகின்றது என்ற நிலையைத் தான் எமக்குத் தெளிவாக்கிக் காட்டினார்.
அவர் எதாவது ஒன்றைச் சொல்வார். இது சரியா…? என்பார்.
சரி தான்… இதுதான் சரி…! என்று சொன்னால் எப்படி சரி…? என்று கேட்பார்.
1.சரி என்ற நிலைகள் சொன்னாலும்…
2.அவர் சொன்ன முறைப்படி நான் சரி என்றாலும்
3.திரும்ப இதை எப்படிச் சரி…? என்று கேட்டு
4.இதுவல்ல…! இதற்கு இந்தந்த நிலைகள் இப்படி மாற்று…! என்றும்
5.ஒவ்வொரு உணர்வுகளிலும் ஒவ்வொரு இணை சேர்க்கப்படும் போது
6.இந்த உணர்வுகள் எப்படி மாறுபடுகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டே வருவார்.
இவை அனைத்திற்கும் முடிவு… உயிர் ஒளியானது… நம் உணர்வுகளை எல்லாம் அந்த உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
அதற்குத்தான் இந்த உபதேசம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.