மகானாகும் மகத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Super natural man - mahaan

மகானாகும் மகத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்… மனித குணங்களை உருவாக்க முடியும்…! மதி கொண்ட உயர் ஞானத்தால் மனித உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்திக் கொண்ட மனித உணர்வில்… மனிதன் முதலில் வாழ்க்கையில் “எளிமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்…”

வாழ்க்கையில் எளிமையும்… ஆத்மாவில் சுகத்தையும்… அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன் மனிதனாக்கும் முதல் நிலை.

இம்முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு… உயர் ஞானத்தின் மெய் ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை… மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும்.

1.ஆகவே மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகக்கூடிய நிலை என்பது.
2.“உயர்ந்து விட்டோம்…” என்பதை விட்டு
3.“உயர்ந்திடுவோம்…” என்ற எண்ணம் வர வேண்டும்.

பிற ஆத்மாக்கள் மனிதனின் (தன்) உயர்வைக் கண்டு… நாடி வந்து வணங்க வேண்டும்… என்ற எண்ணத்தில் இருளைக் கூட்டிக் கொள்ளும் பொழுது “எம்மனிதனும் மகானாக முடியாது…”

தன் உயர்வை உயர்த்திக் காண வேண்டும் என்றால்…
1.பிறரை உயர்த்தும் பொழுதுதான் தான் உயர முடியும்
2.தன் உயர்வை நாடி எல்லாம் வர வேண்டும் என்று எண்ணுவதல்ல உயரும் நிலை…!

சூரியன் எப்படி மற்றக் கோள்களின் அலையைத் தான் பெற்று… தன்னில் அதைச் சமைத்து மீண்டும் ஒளியைத் தந்து உருளுகின்ற உண்மையில்… சூரியத் தொடர்பில் சுழலக் கூடிய கோள்கள் தானும் ஓர் நாள் வளர்ந்து… தன்னுடைய ஈர்ப்பின் சுழற்சியில் குடும்பம் அமைத்து… அதுவும் சூரியனாக வளர்ச்சி அடையக்கூடிய நிலையை அது அது பெறுகிறது.

அண்ட கோள்களில் உருள்பவை யாவும்… மண்டலக் கோள்களின் ஈர்ப்பில் மோதப் பெறும் சமைப்பு நிலையால்தான் “மறு நிலை… உரு நிலை…” பெறுகின்றது.

இத்தொடரின் சூட்சுமமே ஜீவகாந்த ஒளித் தன்மை உயிர்ப்பு நிலை வந்த பிறகு தான். ஜீவ ஆதி நிலை கொண்டு
1.ஆரம்ப நிலை – புழு நிலை
2.முதிர்வு நிலை ஜீவனின் தொடர் – மனித நிலை
3.மனித நிலையில் மகானாகி – ஒளி பெறும் நிலை
4.என்றென்றும் வளரும் நிலை – வளர்ச்சியின் ஒளி நிலை.
5.மனிதனின் நிலை தான் – தெய்வமாகும் நிலை.

இதை அறிந்து… மனிதனிடம் இருக்கும் “எண்ணத்தின் பகுத்தறிவு தான் உண்மையான சொத்து…” என்பதை உணர்ந்து
1.ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லுணர்வைத் தந்து
2.நல்லொழுக்கத்தை ஆத்ம பலத்தில் வளர்க்கும் உரமிடுபவன் நிச்சயம் மகானாக முடியும்.

“மனிதருக்குள் தெய்வம்” என்று மகான்களைக் சொல்வதைப் போல்… தன் உணர்வின் எண்ணத்தில் சுகத்தைக் காணும் “ஆத்ம பலத்தின் ஒளித் தன்மை பெற” சரீர வாழ்க்கையில் எளிமையைக் காணுங்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply