எப்படிப்பட்ட எண்ணத்துடன் குருவை அணுக வேண்டும்…? என்று அறிந்து கொள்ளுங்கள்

Gnanaguru - papanasam

எப்படிப்பட்ட எண்ணத்துடன் குருவை அணுக வேண்டும்…? என்று அறிந்து கொள்ளுங்கள்

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் எனக்கு (ஞானகுரு) உபதேசித்தார்… ஞானிகள் கண்ட பேருண்மைகளை உணர்த்தி அருளினார். அதே சமயத்தில்
1.ஒவ்வொரு காலத்திலேயும் அவர் என்னை அடிப்பார்…
2.சிந்தனையை மேல் நோக்கிச் (வானை நோக்கி) செலுத்தும்படி உணர்த்துவார்.
3.அவருக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மை இதே தான்.

ஆனால் நான் உங்களை அடிப்பதில்லை சில நேரங்களில் நீங்கள் தவறு செய்வதைக் கண்டுணர்ந்தபின் “அந்த உணர்வை நீக்க…” அதற்கு அதிர்வின் நிலைகளை ஊட்டி… அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று தான் உங்களிடத்தில் நான் கோபிப்பது.

அருள் உணர்வின் தன்மை பதிந்து… அறியாத இருள்கள் பிளந்திட வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நினைவிற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் ஈஸ்வரபட்டர் என்னை அடித்தார்.

அதைப் போன்று உங்களிடம் உள்ள தீமைகளை பிளக்கும்படியாகத்தான் ஒரு சொல்லால்… அந்தச் சொல்லின் வாக்கினைக் கடுமையாகச் சொல்லி யாம் உணர்த்துவது.
1.அதை நீங்கள் வேறு விதமாக… வாழ்க்கையின் நிலைகள் கோண்டு…
2,தவறாக எடுத்துக் கொண்டால்… அது உங்களுடைய பிழைகள் தான்.

ஏனென்றால் உங்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தின் நிலைகளிலிருந்து நீங்கள் மீள்தல் வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செய்கின்றேனே தவிர… இதனால் பல நன்மைகள் உண்டு.

இன்று உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளையும் துன்பங்களையும் குறைகளையும் நீங்கள் கேட்கின்றீர்கள்… பார்க்கின்றீர்கள். அந்தக் கஷ்டங்கள்… வேதனைகள்… அனைத்தும் உங்களில் இணைந்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு ஆற்றில் தண்ணீர் போகிறது என்றால் அந்த ஆற்றுக்கு மீறிய அளவில் அதிலே சாக்கடை கலந்தால் என்ன ஆகும்…? ஆறே சாக்கடை மணமாகத் தான் வீசும்.

அதே போல் நீர் போகும் வாய்க்காலில் ஒரு வீட்டின் கழிவு நீர் சென்றால் அந்த வாய்க்காலின் நீரே கெட்டுப் போய் விடுகின்றது.

அதைப் போல பெரும் வெள்ளமாகச் சென்றாலும் அதில் ஊரிலிருந்து வரும் சாக்கடைகள் சேர்க்கப்படும்போது அது என்ன ஆகும்…? அந்த சாக்கடையின் நாற்றமே அந்த ஆற்றில் கலந்துவிடும்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் சக்தியை எனக்குள் (ஞானகுரு) சதா எடுத்துக் கொண்டாலும் எம்மிடம் வருவோர் அனைவரும்
1.எனக்குக் கஷ்டம்… எனக்குத் துன்பம்… அதிலே குறை… இதிலே குறை… என்ற வகையில் அடிக்கடி என்னிடம் சொல்லி
2.அந்த ஆறாக ஓடும் நிலைகள் கொண்டு இதை இணைத்தால் அது என்னவாகும்…?

இதைப் பிளப்பதற்கு யாம் எத்தனை கஷ்டப்பட வேண்டும்…?

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். குருவை எப்படி அணுக வேண்டும்…? என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் வரும் சிரமங்கள் எதுவாக இருப்பினும் அந்தச் சிரமங்களை எல்லாம்
1.இவைகள் எல்லாம் இன்னது எங்களை இயக்குகின்றது.
2.இதிலிருந்து நாங்கள் மீள வேண்டும்.
3.குரு அருள் எங்களுக்கு வேண்டும்… மகரிஷியின் அருள் எங்களுக்கு வேண்டும்…
4.நாங்கள் பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று இப்படித் தான் கேட்டுப் பழகுதல் வேண்டும்.
5.அப்படி ஏற்றுக் கொள்ள வேண்டிய பருவம் வரும் பொழுதுதான் உங்களுக்கு நல்லதாகின்றது.

ஆனால் ஒரு சிலர் என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லையே…! என்று “ஓ…!’ என்று அழுகின்றார்கள்.

யாம் நல்லாகிப் போகும் என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் எங்கங்கே அது நல்லாகின்றது…? என்று தான் கூறுகின்றார்கள். அந்த நிலையிலிருந்து அவர்கள் விடுபடுவதில்லை

யாம் எவ்வளவு நல்லதைச் சொன்னாலும் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் முன்னணியில் வைத்து விட்டால் நான் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குள் ஜீவன் பெற முடியாது.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் என்னுடைய ஜெபமே உங்கள் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்பது தான்…!

“உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று யாம் தவமிருக்கும் பொழுது நீங்களும் குரு துணையால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

Leave a Reply