
மரணம் அடைவதற்கு முன்னாடி சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்…! – நடந்த நிகழ்ச்சி
ஒரு சமயம் என் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது 95. அப்பொழுது எனக்கு (ஞானகுரு) ஏழு வயது இருக்கும்.
எங்கள் வயலுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் ஒரு சுடுகாட்டைத் தாண்டித் தான் போக வேண்டும். குளம் எல்லாம் இருப்பதால் நான் அங்கே எங்கள் வயலுக்குத் தினமும் போய் வருவேன். அப்படி ஒரு பழக்கம் அந்த வயதில் எனக்கு இருந்தது.
என் சொந்தக்காரர் அந்தப் பெரியவர் 95 வயது என்ன செய்தார் தெரியுமா…? எல்லாச் சொந்தக்காரர்களுக்கும் தகவல் சொல்லிக் கூப்பிடுகின்றார்.
1.எனக்காக வேண்டி இனி என்ன செய்யப் போகிறீர்கள்…?
2.நான் சாவதற்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கிறது…! என்று சொல்கிறார். அப்படியே சொல்கிறார்…!
வந்தவர்களிடம் எல்லாம் நான் பத்து நாளில் போய்விடுவேன் டேய்… நீங்கள் எல்லோரும் நன்றாக இருங்கடா..!
ஒரு நாள் போய் விட்டது… இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கிறது. நீங்கள் என்னென்ன ருசியாக வேண்டுமோ சாப்பிடுங்கள். எல்லோருக்கும் சாப்பிடக் கொடுங்கள்…!
ஒவ்வொரு நாளும் இப்படியே சொல்லிக் கொண்டே இருந்தார்.
பத்தாவது நாளும் வந்தது.
1.இனி ஒரு மணி நேரம் இருக்கிறது…. அரை மணி நேரம் இருக்கிறது
2.கால் மணி நேரம் இருக்கிறது… பத்து நிமிடம் இருக்கிறது
3.இன்னும் ஒரு நிமிடம் இருக்கின்றது… சொல்லிக் கொண்டே போகிறது.
4.சொல்லிக் கொண்டே இருந்தார்… அப்படியே உயிர் பிரிந்தது…!
அவர் எந்த வழியில் எப்படி இருந்திருப்பார் பாருங்கள்…!
கடைசியில் அவரைச் சுடுகாட்டில் வைத்துத் தகனம் செய்கின்றார்கள் நான் அன்றைக்குத்தான் சுடுகாட்டில் எரிப்பதைப் பார்க்கின்றேன். அங்கே அவருடைய உடல் எரிந்து கொண்டிருக்கின்றது.
எரிந்து கொண்டிருந்த உடல் என்ன செய்தது…?
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வினுடைய வேக நினைவுகள் எவ்வளவு வலுவாக இருந்ததோ
2.அந்தச் சரீரம் அப்படியே எழுந்து உட்கார்கிறது…!
தொப்….தொப்..! என்று போட்டு அடித்து மறுபடியும் கட்டையைப் போட்டு எரிக்கின்றார்கள். இதைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனது…?
சுடுகாட்டில் அன்றைக்குத் தான் பேயைப் பார்த்த உணர்வு போல் பயந்து போய் விழுந்தடித்து ஓடத் தொடங்கினேன். ஏழு வயதில் எனக்கு அந்தப் பயம் வருகிறது. நடந்த நிகழ்ச்சி நேரிலேயே இதைப் பார்த்தது. ஆனால் செத்தது அவர்.
இந்த உணர்வுகள் அதை எல்லாம் நீக்கினாலும் கூட அந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அந்த மாதிரி இயக்குகிறது. பார்த்த உண்மை நிலை இது…!
பக்தியின் நிலைகள் அன்று காட்டியிருந்தாலும்…
1.தாய் கருவிலே விளைந்த இந்த உணர்வுகள் மெய் ஒளியைப் பெற்று அங்கே அழைத்துச் செல்லும்.
2.அவர்களுக்குத்தான் இந்த மாதிரியான நினைவுகள் வரும்…!
உங்கள் ஒவ்வொருவருக்கும் (இன்னார் இன்னாருக்கு) இதெல்லாம் நான் செய்தேன். நீங்கள் இப்படிச் செய்து கொள்ளுங்கள்…! நான் உடலை விட்டுப் போகிறேன்…! என்று சொல்லிவிட்டே போகிறார்கள்.
இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.