
வாலியை இராமன் கொல்லாமல் குகையின் வாசலில் கல்லைப் போட்டு ஏன் மூடுகிறான்…?
வாழ்க்கையில் நாம் நல்லது செய்து வந்தாலும் தூசி (தீமைகள்) வெளியில் இருந்து தான் உடலுக்குள் வருகிறது. அதனால் தான் இராமாயணத்தில் வாலியை இராமன் குகைக்குள் போட்டு மூடி விடுவதாகக் காட்டுகிறார்கள்.
அதாவது “தீமைகள் நமக்குள் உட்புகாதபடி தடுக்க வேண்டும்…” என்று உணர்த்துகிறார்கள்.
1.குகைக்குள் வாலி இருக்கின்றான்.
2.இராமன் அம்பை எய்து ஒரு கல்லைப் போட்டு அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான்.
3.ஆனால் அவனைக் கொல்லவில்லை.
4.அவன் வீரியத்தைத் தடைபடுத்துகிறான் என்று காட்டுகின்றார்கள்..
உதாரணமாக பிறர் செய்யும் தீமையான எண்ணங்களும் குற்றச் செயல்களும் நம் உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? அந்தத் தீமையின் உணர்வாக அதனுடைய வலிமை கொண்டு இயக்க ஆரம்பித்துவிடும்.
நம் நல்ல குணம் வேலை செய்யுமோ…? அது செயலற்றுப் போகும். அதற்காகத் தான் தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்…! என்று காட்டுகிறார்கள்,
கோபமாகப் பேசுகிறார்கள்… தவறான செயல்களைச் செய்கிறார்கள் என்றால் அதை நாம் நுகர்ந்த உடனே அவர்கள் மேலே வெறுப்பு வரும்.
அந்த இரண்டு உணர்வும் சேர்ந்து நம் உயிர் என்ற ஈஸ்வர லோகத்தில் உருவாக்கும்.
1.அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஜாடையாக நம்மைப் பேச வைக்கும்.
2.இப்படி எல்லாம் செய்கிறான்… இவன் என்ன யோக்கியமா…? என்போம்.
3.அவர்கள் நல்லது செய்தாலும்… அதை ஏற்க மாட்டோம்…!
4.முதலில் அவர்கள் எப்படியெல்லாம் நம்மைப் பேசினார்கள்…? இப்பொழுது மட்டும் யோக்கியம் மாதிரி நடக்கின்றார்கள்…! என்று நம்மைப் பேச வைக்கும்.
5.இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி வரும் போது வெறுப்பின் தன்மை அதிகமாகி விடுகிறது.
நம்மை அறியாமலேயே இப்படி வெறுப்பின் உணர்வுகள் அதிகமாகி நம் ஈஸ்வரலோகத்தில் அந்தக் கருவின் தன்மை உருவாகி நம் உடலுக்குள் பிரம்மலோகமாக மாறுகிறது.
பிரம்மலோகத்தில் அணுக்களாக உருவாகி விட்டால் அது தன் சாப்பாட்டுக்காக ஏங்கும். அந்தத் தீமையின் உணர்வை எடுத்து வளர்க்கத் தொடங்கும். அப்பொழுது நாம் இதை மாற்றி அமைக்க வேண்டுமா இல்லையா…?
ஆகவே நம்மை எது கோபப்படச் செய்கிறது..? என்று நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.அவர்கள் செய்த தவறு நம் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
2.அதுவே சொல்லாக வருகின்றது என்று உணர்தல் வேண்டும்.
அடுப்பிலே பாத்திரத்தை வைத்து எந்தக் காய்கறியைப் போட்டு வேக வைக்கிறோமோ அதற்குத் தகுந்த மணம் தான் வரும். ஆகையினால் இந்த மணத்தை நல்ல மணமாக மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியானத்தின் மூலம் சக்தியைக் கொடுக்கின்றோம்.
நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில் நம்மை எப்படி அந்தத் தீமைகள் இயக்குகிறது என்று தன்னை அறிதல் வேண்டும். நாம் ஏன் கோப்படுகிறோம்…? எதற்காக அந்தக் கோபம் வருது…? என்ற சிந்தனை வேண்டும்.
ஆகவே கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் ஒரு தவறு நடக்கிறது என்றால் பண்பு அன்பு பரிவு என்ற உயர்ந்த உணர்வுகள் கொண்டு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
கோபத்துடன் பதில் சொல்லப்படும் பொழுது நாம் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அந்த வழியில் அதைப் பயன்படுத்தும் நேரம் சரியில்லை என்றால் பகைமை உணர்வுகளைத் தான் ஊட்டும். அந்தப் பகைமை உணர்வு ஊட்டுவதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.
ஏனென்றால் ஒரு குடும்பத்தில் பகைமை உணர்வு அதிகமாகும் போது சாப அலைகளாகி அதன் தொடர்ச்சியில் அந்தக் குடும்பமே சின்னா பின்னாமாகிறது. அதனுடைய நிலைகளில் பின் வரும் சந்ததிகள் தவறு செய்யவில்லை என்றாலும் அவர்களையும் அது இயக்கி குறைபாடுகளாகி விடுகின்றது.
ஆகவே இதைப் போன்று நாம்
1.மற்றவர்களுடைய குறைகளைக் கண்டாலும் அவருடைய முந்தைய நிலைகள் இயக்கப்பட்டு
2.அதே உணர்வுகள் நம்மை இயக்கி நம்முடைய நல்ல உணர்வுகளையும் மாற்றுகிறது என்பதை
3.அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.
சிந்திக்கின்றோம் என்றால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அவன் வீற்றிருக்கும் ஆலயம் தான் அந்த உடல்…! என்று எண்ணி விட்டால் அவர்கள் செய்யும் தவறும் குறைகளும் நமக்குள் வராது.
உயிரால் உருவாக்கப்பட்ட அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவர்களும் பொறுப்பை உணர்ந்து சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மனத் தூய்மை ஏற்பட வேண்டும் என்று இப்படி நீங்கள் எண்ணிப் பாருங்கள். கோபமோ பழிச் சொல்லோ நமக்குள் எதுவுமே வராது.
இது எல்லாம் நாம் இந்த மனித வாழ்க்கையில் ஞானிகள் காட்டிய வழியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல் நெறிகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.