
இனி… இன்னொரு உடல் நமக்கு வேண்டவே வேண்டாம்…!
வானத்தில் வால் நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். அதே போல் எரிகற்களையும் பார்க்கின்றோம். இது எல்லாம் எங்கிருந்து வருகிறது…?
மற்ற பிரபஞ்சங்களிலிருந்து வரும் கழிவுகள் எதிலேயுமே பிடிப்பில்லாத நிலையில் அப்படி வருகிறது. அத்தகைய நிலைகளைத் தான் நமது சூரியன் இழுக்கின்றது.
சூரியனுக்குப் போகும் பாதையில் நமது பூமி இடைமறிக்கும் பொழுது துருவப் பகுதியின் வழியாக நமது பூமி கவர்ந்து கொண்டபின் காற்று மண்டலம் அழுத்தத்திற்குள் வந்தவுடன் சூடேறிக் கரைந்து விடுகின்றன
அப்படி அது கரையவில்லை என்றால்… அத்தனையும் பூமிக்குள் அப்படியே விழுந்தால்… நாம் யாரும் இங்கே வாழ முடியாது…!
1.நம் பூமியில் தினமும் எரிகற்கள் விழுந்து கொண்டுதான் உள்ளது.
2.நமது பூமியின் காற்றழுத்தத்திற்குள் வரும்போது கரைத்து விடுகின்றது
3.கரைக்க தவறிய ஒரு சில பெரிய பாறைகளும் பூமியில் விழத்தான் செய்கின்றது.
இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளை அதை நமக்குள் ஈர்க்கும் சக்தி அனைத்தும் நீக்கி விட்டால்
1.நமக்கு முன்னாடி வரும் அந்தத் தீமையின் உணர்வுகளை
2.எந்தப் பிடிப்பும் இல்லை எனும் பொழுது
3.காலையில் சூரியன் அதை அழைத்துச் சென்று விடுகின்றது
அதனால்தான் அதிகாலையில் முக்கியமாகத் துருவ தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ளச் சொல்கிறோம்.
துயரமோ சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ இதைப் போன்ற நிலைகள் வரப்படும்போதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரான அந்த ஈஸ்வரலோகத்தை எண்ணுங்கள்.
அந்தத் துருவ நடசத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அவனிடமே கேட்டு ஏங்குங்கள் அப்போது இந்த உணர்வுகள் அதிகரித்து தீமையின் உணர்வுகளை மாற்றி அதை அடக்கும் சக்தியாக வரும்.
ஒரு குழம்பில் காரம் புளி உப்பு மற்ற எல்லாப் பொருள்களையும் போட்டபின் சுவையாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல சுவைமிக்க உணர்வுகளாக ஒளியான அணுக் கருக்கள் நம் இரத்தத்தில் இந்திரலோகமாக மாறுகிறது
இவ்வாறு மாற்றப்படும் போது தீமை என்ற உணர்வின் தன்மையை ஈர்க்கத் தவறுவதால் தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி தவறுகின்றது
துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாக இழுத்துக் கொண்டால் தீமையான அணுக்கள் உணவு இல்லாதபடி அது சோர்வடைகின்றது. அது மட்டுமல்லாது தீய அணுக்கள் உடலுக்குள் உருவாகாதபடி தடுக்கப்படுகின்றது.
மண்ணிற்குள் மறைந்துள்ள விஷ வித்துக்கள் மழை பெய்த பின் உடனே எப்படி முளைத்து வருகின்றதோ இதைப் போல
1.நம் உடலில் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவான தீமையான அணுக்கள்
2.இந்த உடல் இருக்கும் வரை அதனுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்யும்.
ஆனால் அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கி விட்டால் அது விளைந்து அதற்குத் தகுந்த உடலுக்குள் உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும்.
ஆகவே அத்தகைய ஊழ்வினை என்ற நிலைகளை உருவாக்காதபடி உணர்வின் ஒளிக் கற்றைகளாக மாற்றிடல் வேண்டும். இந்த உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து தொக்கிய உணர்வுகளைக் கரைத்து விடலாம்.
2.கரைத்த விஷத் தன்மைகளை எல்லாம் சூரியன் கவர்ந்து என்று விடுகின்றது
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் அறிவு அங்கே துருவ நட்சதிரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் விளைகின்றது
4.துருவ நட்சத்திரம் விளைய வைக்கும் அந்த விஷமற்ற உணர்வை உணவாக உட்கொண்டு அதன் தன்மை கொண்டு நாம் வளர்ச்சி அடைவோம்.
5.இதுவே ஒளியான ஓர் பிரபஞ்சம்…!
நாம் சூரியக் குடும்பம் எப்படி இருக்கின்றதோ இதே போல அதன் அமைப்பிலே நாம் சேர்க்கப்படும்போது துருவ நட்சத்திரமும் வலு அடைகின்றது. அதனின் ஈர்ப்பு வட்டமும் “ஒளி மயமாகின்றது…!”
உலகில் இது பரவப்படும்போது இருள் சூழும் நிலைகளில் இருந்து விடுபட்டு ஒளி மயமாக மாற்றும் சக்தி பெறப்படுகின்றது
ஆகவே நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய வழிகளில் இன்னொரு பிறவிக்குச் செல்ல விரும்பாதீர்கள். இந்த உடலில் பற்றை வைக்காதீர்கள்.
எத்தகைய குறைகளைக் காணினும் அதை அகற்ற முயற்சி எடுங்கள். குறை என்ற உணர்வு தோன்றிய பின் அது நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா என்று அந்த உணர்வை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அதன் உணர்வை உடலான இந்திரலோகத்தில் பெருக்கச் செய்யுங்கள். அதன் உணர்வு பெருகினால் நமக்குள் தீய அணுக்கள் சிறுக்கும். நமக்குள் மன பலமும் மன வலிமையும் வரும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.