
குரு பலம் பெற வேண்டியது மிகவும் அவசியம்
தியானத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு அன்பர் ஞானத்தின் வழியில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தனக்குள் தீமையின் பயன்கள் அதிகமாகப் பெருகுகிறதே…! என்ற நிலையில்
1.அதிலிருந்து நாம் எப்படியாவது விடுபட வேண்டும்
2.இனி நாம் பிறவி இல்லா நிலை தான் அடைய வேண்டும். என்ற ஏக்கத்தில்
3.தன் உயிரை ஈசனாகத் துணிவுடன் மதிக்கத் தொடங்கினார்.
இந்த உயிரான ஈசன் வெளியே சென்று விட்டால் தன் உடலான சிவம் இது சவம் தான்…! அதற்கு எந்த விதமான மதிப்பும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.
இந்த உயிரின் நிலைகளில் தான் நுகர்ந்த உணர்வு கொண்டுதான் இந்த உடலை அமைத்தது. தன் உடலுக்குள் வேதனை பயம் சஞ்சலம் சலிப்பு போன்ற பல உணர்வுகள் வரப்படும் போதுதான் இந்த உடலான சிவத்தில் (தன் உடலில்) கடுமையான நோய்களும் பல இன்னல்களும் வந்தது என்பதை அவரே உணர்ந்தார்.
1.நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்…! உயிரை நாம் எப்படி மதித்தல் வேண்டும் என்றும்
2.தீமை என்ற நிலைகளை எப்படி அகற்ற வேண்டும் என்றும்
3.தன் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும்
4.யாம் (ஞானகுரு) கூறிய வழிப்படி தியானம் இருந்தார்… தன் உயிரை மதித்தார்.
ஆகவே இந்த உடலில் அதாவது சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை அதிகமாக நுகர நேர்ந்தால் அதனால் தன் உடலில் எப்படி நோயின் தன்மை வலிமை பெறுகின்றது என்பதை நாளுக்கு… நாள் நாளுக்கு… நாள் நாளுக்கு… நாள் உணர…உணர… தனது வயதின் நிலைமையையும் உணர்ந்து தன்னுடைய குழந்தைகளை அவர் எண்ணிப் பார்க்கவும் செய்தார்.
அப்போது என்னைத் தேடி வந்து உபதேசம் கேட்பார்…! அதற்கு நான் அவரிடம் சொன்னது..
நான் (ஞானகுரு) இருக்கிறேன் என்றால் ஈஸ்வரபட்டரை நான் சந்திப்பதற்கு முன்னாடி… இந்தத் தியானத்தை நான் செய்வதற்கு முன்னாடி… “என் உடலில் எத்தனையோ விதமான உணர்வுகள் உண்டு…!”
என்னை எத்தனையோ பேர் சந்தித்து அவர்கள் கஷ்டம்… நஷ்டம்… துன்பம்.. வேதனை.. சங்கடம்.. என்று எல்லாவற்றையும் சொல்கிறார்கள். அதை எல்லாம் காதில் கேட்ட உடனே அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?
உடலில் உள்ள அந்த வெறுப்பான அணுக்களும் தீய அணுக்களும் அதனால் ஏற்பட்ட உணர்வுகள் அது உணவாக எடுத்து அது பெருகத் தொடங்கிவிடும்.
அந்த மாதிரி ஆகாதபடி ஈஸ்வரபட்டர் எனக்கு உபதேசித்த வழிப்படி உடனைக்கு உடனே மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து அதை எப்படி குறைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
அப்படிக் குறைத்து நல்லதாக்கிய என்னுடைய அனுபவத்தை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அதே வழியில் நீங்களும் கடைப்பிடியுங்கள்…! என்று சொன்னேன்.
அதன் வழியினை அவரும் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் குரு அருளும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் தெளிந்த மனம் பெறவேண்டும் தெளிவான வாழ்கை வாழ வேண்டும் என்பார்
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். குரு காட்டிய அருள் வழியில் நடந்து அந்த நெறியைத் தவறாது பின்பற்றும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று அடிக்கடி என்னிடம் கேட்பார்.
தன் வாழ்கையில் வந்த கடுமையான நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை அனைவரும் பெற வேண்டும்… பெற வேண்டும் என்றும்
1.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் அவருக்குள் விளைகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் அவருக்குள் பெருகுகின்றது.
3.இந்த உடலில் பற்று வராது அருள் உணர்வுகளை அவர் பற்றுடன் பற்றினார்.
சில நேரங்களில் அவருக்குக் கோபம் வரும்… வெறுப்பான உணர்வு வரும்… வீட்டில் சண்டை வரும்..! ஏதாவது தவறாகச் சொல்லி விட்டால் உடனே கோபம் வரும்.
அப்பொழுது அந்தக் கோபம் வந்துவிட்டதே…! என்று என்னிடம் வந்து சாமி எனக்கு இந்த உடல் பற்று வருகிறது…! அதை மாற்ற வேண்டும்… என்று கேட்பார்.
வெளியிலே யாராவது ஏதாவது தவறுகள் செய்தாலும் உடனே அவருக்குக் கோபம் வரும். உடனே என்னிடம் வந்து சொல்வார் அந்தக் கோபம் என்னை இயக்குகிறது.
1.அதிலிருந்து நான் தப்பிக்க வேண்டும்.
2.அதற்கு குருநாதரின் அருள் சக்தி எனக்கு அதிகமாக வேண்டும்.
3.குரு அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் அதிகமாகப் பெற்று
4.எனக்குள் இருக்கும் அந்த இருள் எல்லாம் நீங்க வேண்டும்.
5.நான் ஒளியின் சரீரம் பெற வேண்டும்.
இது தான் அவர் என்னிடம் பேசும் பேச்சு…!
இந்த உடல் பற்று இருக்கும் போது அதை மாற்றச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு அரை மணி நேரமாவது தியானம் செய்து அதைக் குறைக்க வேண்டும் என்ற அந்த முயற்சி எடுப்பார்.
சாதாரணமாக நம் கையில் ஒரு அழுக்குப் பட்டால் உடனே அதை நாம் துடைக்கின்றோம் அல்லவா…! இதைப் போல தான் அவர் வாழ்கையில் ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் அதீதமான நிலைகள் இருந்தாலும் அதைத் தடைபடுத்தி நல்லதாக்கும் முயற்சிகளை அவர் எடுப்பார்.
1.தன் உடலில் முதலில் உருவான தீமை செய்யும் அணுக்கள் தன் உணவுக்காக உணர்ச்சிகள் உந்தப்படும் போது
2.அந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் இவருடைய நல்ல சிந்தனைகள் குறைவதும்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடியாத நிலை வருவதும்
4.அதை உணர்ந்து கொண்ட நிலையில் அதை எப்படித் தெளிவாக்கி நல்லதாக்கிக் கொள்ள வேண்டும் என்று உடனே என்னிடம் நேரடியாக வருவார்.
5.இப்பொழுது எனக்குள் என்ன நடக்கிறது…? இதை நல்லதாக மாற்ற உடனே நான் என்ன செய்ய வேண்டும்…? என்று கேட்பார்.
நீங்கள் அங்கே இருந்த இடத்திலிருந்தே இந்த அருள் சக்தியை எடுக்கலாம் என்று நான் சொன்னேன்.
இருந்த இடத்திலிருந்து எடுக்கிறேன். ஆனாலும் குருவிடம் (ஞானகுரு) வந்து இன்னொரு தரம் நல்ல வாக்கைக் கேட்டோம் என்றால் எனக்கு அந்த வலிமை கிடைக்கும். “அதற்குத் தான் நான் வந்தேன்…!” என்பார்.
கோபம் வரும்போதெல்லாம் நீங்கள் சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்பேன். அந்த அருள் சக்தி என் உடலில் படர வேண்டும் என்று வலுவேற்றிக் கொண்டு எனக்குள் வரக்கூடிய கோபத்தையோ சலிப்பையோ சஞ்சலத்தையோ நான் குறைப்பேன் என்பார்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.