
சொர்க்க பூமியாக வாழும் மனித உடலில் “உயிரின் துணை கொண்டு” சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்
படிக்காதவன்தான் நான் (ஞானகுரு) இதைச் சொல்கின்றேன். இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அறியும் ஆற்றலையும் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற ஆற்றலையும் பெறும் தகுதியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்தார்.
நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும் யாம் சொல்லும் உணர்வின் தன்மையை ஆழமாகப் பதிவாக்கும்போது
1.உங்கள் நினைவாற்றல் “அண்டத்தையும் அளந்தறிந்த… அகஸ்தியன் பால் செல்லும்…!”
2.அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வை நீங்கள் பெற்று உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்
3.இருளை அகற்றி ஒளியாக மாற்றும் திறன் உங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் சொல்கிறேன்.
மகரிஷிகள் பெற்ற சக்தியைப் பெறுவதற்காகவும் உலக அனுபவம் பெறுவதற்காகவும் ஈஸ்வரபட்டர் இட்ட கட்டளைப்படி காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… தெரிந்தேன்.. அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்…!
அந்தத் துன்பத்தில் இருந்து விடுபடும் உணர்வுகளை குருநாதர் உணர்த்தினார். அந்த உணர்வின் ஆற்றலைக் கவர்ந்தேன்.
துன்பத்தை அகற்றிடும் ஆற்றலை வளர்த்து அதன் வழியில் பெற்ற ஞானத்தைத் தான் இங்கே போதிக்கின்றேன். போதிக்கும் உணர்வுகளைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டு வளர்த்தால் உங்களை அறியாத இருளை போக்க முடியும்.
இந்த உடலில் நாம் நீடித்த நாள் இருப்பதில்லை, உடலில் இருக்கும் போது அந்த அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள். அருளைப் பெருக்கி அதை அனைவரும் பெற வேண்டும்.. எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்திட்டால் மற்றவர்களையும் நலம் பெறச் செய்ய முடியும்.
ஆகவே நீங்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.
1.அருள் ஒளியின் உணர்வை நுகருங்கள்.
2.அருள் ஞான அணுக்களை உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.
நமது எல்லை எது…? என்று அறிந்து அதை அடைந்திட வேண்டும். அதை மையமாக வைத்து வாழ வேண்டும்.
1.இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்
2.ஒளியின் சரீரமாக ஆவதே மனிதனுடைய கடைசி நிலை.
3.ஒளியாகி விட்டால் அகண்ட அண்டத்திலே நாம் என்றுமே ஜோதிச் சுடராக என்றும் பதினாறு என்ற நிலை அடையலாம்.
மனித உடல் பெற்ற நிலையில் ஆறாவது அறிவை (கார்த்திகேயா) வைத்து உயிரின் துணை கொண்டு அந்த நிலையை அடைய முடியும். ஏனென்றால் நம் உயிர் தான் எல்லாவற்றையும் (பார்ப்பது கேட்பது நுகர்வது) உருவாக்குகின்றது.
உயிர் அது எப்படி அறிவாக நமக்குத் தெளிவாக்குகின்றதோ அதே போல் நாம் நுகரும் உணர்வை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவிற்கு உண்டு.
ஆனால் “என்னமோ போகட்டும்… நாளைக்கு நடப்பதை யார் அறிவார்…?” என்று எண்ணினால் இதற்குப் பின் நாம் நரகலோகம் தான்.
இப்பொழுது நாம் இந்த உடலான சொர்க்க பூமியில் இருக்கின்றோம். நம் உயிர் சொர்க்க வாசலாக இருக்கின்றது. இந்த சொர்க்க வாசலை வைத்து நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் விண் செல்ல முடியும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.
சொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையில் அதைச் சொர்க்க லோகமாக மாற்ற வேண்டும். அதற்காகச் சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.
1.சொர்க்கத்தை அடைந்திட்ட உயிருடன் ஒன்ற வேண்டும்.
2.அருள் ஒளிச் சுடரை இங்கே வளர்க்க வேண்டும்.
3.வளர்த்தால் நம் உயிர் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.