விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்… ஏன்…?

Valli marraige

விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்… ஏன்…?

சேனாதிபதி…! பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…! என்றால் தீமைகளை வென்றவன். அந்த அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கும் பொழுது வலிமை பெருகுகின்றது. அது தான் வள்ளி.

நம் உடலிலிருந்து வரக்கூடிய வலிமையான சக்தி வள்ளி (வல்லி). திணைக்காட்டில் காவல் இருக்கின்றாள் வள்ளி.

தான் விளைய வைத்ததை மற்ற பட்சிகள் கொத்தித் தின்றுவிடாமல் கவண் கொண்டு கல்லை வீசிப் பாதுகாக்கின்றாள். அதாவது
1.உடலை வளர்த்த நிலையில்
2.நம் உடலுக்குள் தீமை வராதபடி அதை எதிர்த்துத் தாக்குதல் வேண்டும்.

அந்த வலுவான சக்தியை நமக்குக் காட்டுவதற்காக வேண்டி வள்ளி திருமணத்தைக் காட்டுகின்றார்கள். விநாயகர் வந்து “என் தம்பி முருகனைத் திருமணம் செய்து கொள்…!” என்று வள்ளியைப் பயமுறுத்தி முருகனிடம் கொடுத்து விடுகின்றார்.

விநாயகர் தன் தம்பிக்கு இப்படிக் கல்யாணத்தைப் பண்ணி வைக்கின்றார். ஆக விநாயகர் என்பது யார்…?
1.இந்த உடலைக் காத்திடும் வினையாகச் சேர்த்து அதை இச்சையாகி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…!
2.தன் உடலைக் காக்கும் உணர்வின் தன்மை இச்சைப்பட்டு
3.அந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் கிரியை ஆகி
4.அந்த ஞானப்படித்தான் இந்த உடல் இயங்கும்.

ஆகவே எதை இச்சைப்பட வேண்டும்…? அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வலு சேர்க்க வேண்டும். நம் உடலில் அந்த ஒளியான அணுக்களைப் பெருக்கி உயிராத்மாவை ஒளியாக ஆக்க வேண்டும்.

வள்ளி… அந்த வலிமை மிக்க சக்தியை நாம் நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்ட பின் தெய்வ ஆணை அந்த உணர்வு எதுவோ அது செயல்படும். அதன் வழியே இந்த உடல் இயங்கும்.

இவ்வளவு பெரிய விஷயத்தைக் காவியமாகச் சுருக்கமாக மக்களுக்குப் புரிய வைக்கின்றார்கள் ஞானிகள். நாம் புரிந்திருக்கின்றோமா என்றால் இல்லை, (முருகனுக்கு இரண்டு மனைவி. ஆசைக்கு ஒரு மனைவி அன்புக்கு ஒரு மனைவி என்று அதைத் தான் சொல்லத் தெரியும்.)

அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை உங்களுக்குள் வலு (வள்ளி) ஏற்றுவதற்காக வேண்டித் தான் அதை உபதேசமாக
1.உங்கள் எணணங்களை வேறு பக்கம் திருப்பாதபடி
2.மெய் ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவாக்குவதற்காக
3.மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் எட்டு மணி நேரம் என்று பத்து மணி நேரம் கூடப் (பாபநாசத்தில்) பேசியிருக்கின்றேன் (ஞானகுரு)

உபதேசத்தைக் கேட்பவர்களின் உணர்வை எல்லாம் ஒடுங்கச் செய்து எங்கே இருக்கின்றார்கள்…? என்றால் சொர்க்கலோகத்திலேயே இருக்கின்றார்கள். ஏனென்றால்
1.உங்களிடம் உள்ள மற்ற உணர்வுகளை மறக்கச் செய்து
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளில் வலுவாக (வள்ளி) இருக்கச் செய்வதற்குத்தான் அப்படி மணிக்கணக்கில் பேசுவது.

அப்பொழுது எனக்குள்ளும் அந்த அருள் சக்தி வளர்கின்றது. உங்கள் உடலுக்குள் அந்த அருள் ஒளியைச் சேர்க்கப்படும் பொழுது அருள் ஆனந்தம் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும். தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply