
எனக்குத் தொல்லைகள் கொடுத்தாலும் தவறாகச் சொன்னாலும் அதை நான் எடுத்துக் கொள்வதில்லை…!
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் சொன்னது:-
நீ மனிதனான பின் முழு முதல் கடவுளாகின்றாய். நான் போதித்தபடி உனக்குள் அருள் ஞானத்தை உருவாக்குகின்றாய். ஆகவே அனைவருக்குள்ளும் அருள் ஞானத்தை உருவாக்கும் உயர்ந்த பண்பைப் பெறு.
1.இந்த உலகம் உனக்குச் சொந்தமல்ல.
2.இந்த உடலான உலகமும் உனக்குச் சொந்தமல்ல.
3.அருள் ஞான உணர்வையே உனக்குச் சொந்தமாக்கு.
4,அந்த அருள் ஒளியின் உணர்வையே உனக்குச் சொந்தமாக்க முற்படு.
5.”அனைவரும் அதைப் பெற வேண்டும்…! என்று எண்ணினால் தான் நீ இதைப் பெறுகின்றாய்…!
நான் எல்லாவற்றையும் பெற்றுவிட்டேன் என்று அகம் கொண்டால் அந்த உணர்வின் விஷம் உனக்குள் புகுந்து விடும். உன்னையே அது அழித்து விடும். அப்பொழுது நீ போவது எங்கே…? இருளுக்குள் தான் நீ புக முடியுமே தவிர ஒளிக்குள் நீ வர முடியாது.
இத்தனை விவரங்களையும் சொன்ன பிற்பாடு அப்புறம் நான் (ஞானகுரு) என்ன செய்வேன்…? தவறு செய்யும் எண்ணம் எனக்கு வருமா…! எப்படி வரும்..?
1.எனக்குப் பல பேர் தொல்லையைச் செய்தாலும் நான் அதைப் பற்றி நினைப்பதே இல்லை
2.தொல்லை செய்தார்கள்… என்று நினைத்தால் தானே…! தொல்லை.
ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய சாமியார்கள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் தவறு செய்தே வாழுகின்றார்கள். ஆண்டவனை கைக்குள் வைத்துக் கொள்வது. மக்களை ஏமாற்றப் பழகுவது. ஏனென்றால் அவனுடைய உணர்வு அது.
அவன் எங்கே போகிறான்…? என்று அவனுக்கே தெரியாது. அந்த உணர்வை வைத்துக் கொண்டு எம்மை உற்றுப் பார்க்கும் போது மற்றவர்கள் என்னையும் தவறாகத் தான் எண்ணுவார்கள்.
அப்பொழுது என்னைப் பார்க்கும் பொழுது “அவர்களுக்குத் தெளிவான உணர்வு வர வேண்டும்…!” என்று தான் நான் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேனே தவிர யாரையும் குற்றவாளியாக ஆக்குவதற்கு இல்லை…!
குற்றம் புரிந்த உணர்வு அங்கே இருக்கிறது. குற்றத்தின் உணர்வு கொண்டு பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை இங்கே என்ன செய்கிறது…? கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.அந்த அருள் ஒளியை பெறுகிறோம்
2.எல்லோரும் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அது நம்மை ஒளியாக மாற்றும்.
இல்லை தவறு செய்தான் தவறு செய்தான் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால்
1.நான் எதைச் செய்தாலும் “என்னை ஏமாற்றுகிறான்… ஏமாற்றுகிறான்…!” என்று தான் அந்தச் சொல் வரும்.
2.ஆனால் அது அவன் குற்றம் அல்ல.
3,அதற்காக வேண்டித் தவறு செய்கிறான் என்ற நிலையில்
4.என்னிடம் இருக்கும் கடுமையான ஆயுதத்தை வைத்து அவனை வீழ்த்த எண்ணினால் அந்த உடலைத்தான் வீழ்த்த முடியும்.
5.ஆனால் இந்த உணர்வின் தன்மை கடும் விஷத் தன்மையாக எனக்குள் வளர்ந்து விடும்.
என்னிடம் சக்தி இருக்கின்றது என்ற நிலையில் மற்றவர்கள் தப்பாகப் பேசுவதைக் கேட்டு “ரோசப்பட்டு…!” அவர்களை உருட்டினால் உருட்டி விட்டுப் போகலாம். அப்படிச் செய்தால் இங்கே என்னுடைய வளர்ச்சியே போய்விடும்.
இந்த உடலில் நாம் எத்தனை நாள் இருக்கிறோம்? இந்தப் புகழ் எத்தனை நாளைக்கு இருக்கும்…?
மற்றவர்களை வீழ்த்திடும் உணர்வு வரப்போகும் மற்றவர்கள் என்னைப் போற்றுவார்கள். ஆஹா…! இவர் பெரிய சாமியார்…! என்று பயப்படுவார்கள். ஆனால் எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாமே அஞ்சி ஒடுங்கி விடுமே…!
இத்தகைய உணர்வின் தன்மை வந்தால் நான் எங்கே போவேன்..?
1.ஆகையினால் என்னை ஒருவர் போற்றுவதற்காக நான் வரவில்லை.
2.மற்றவர்கள் என்னைப் போற்ற வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய வில்லை.
3,உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து உங்கள் உணர்வின் தன்மை ஒளியாக வேண்டும் என்று
4.அந்த அருள் ஒளியைப் பெறச் செய்வது தான் “என்னுடைய வேலை…!”
நீங்களும் அதே உணர்வு கொண்டு மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்ற் எண்ணி எடுத்துக் கொண்டால் இருளை அகற்றலாம். ஒளியாக மாறலாம்.
ஆகவே நாம் பார்க்கும் எல்லோரும் அந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற இந்தப் பக்குவத்திற்கு வாருங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.