
பிறரைக் காக்க வேண்டும் என்ற நிலையில்… அவர்கள் கஷ்டங்களையும் துன்பங்களையும் நாம் எடுத்துக் கொண்டால் “நம்மை யார் காப்பது…?”
எப்பொழுதெல்லாம் தீமையின் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று அவனிடம் வேண்டி அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று பல முறை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் உணர்வின் வலுவை உடலுக்குள் இப்படிக் கூட்டினால்
2.இந்த உணர்வின் “மணம்” வரப்படும் பொழுது தீமைகளை உந்தித் தள்ளிவிடும்.
3.தீமைகளை நுகரும் சக்தி இழக்கப்படுகின்றது. உள் புகாமல் தடுக்கப்படுகின்றது.
இதைத் தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான்…! என்று ஞானிகள் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
1.நமக்கு வாசல் படி எது..?
2.மூக்கின் வழியாகச் சுவாசிக்கும் இந்தச் சுவாசத்தின் வழியாகத் தானே உள் செல்கிறது.
3.மூக்கின் வழியாகச் செல்லும் தீமைகளைப் புருவ மத்தியில் அமர்ந்து தடுக்க (வகுந்திட) வேண்டும்.
எல்லாவற்றையும் இரட்சிப்பது யார்…? அவனே தான்…! யார்…? நம் உயிர் தான்…!
1.யாரையும் வேண்டாம் என்று சொல்வதில்லை.
2.வருவோரை அரவணைப்பதும் அவன் வேலை தான்.
3.நம் உடல் வரவழைக்கின்றது.
4.வரம் கொடுத்துவிடுகின்றது நம் உயிர்.
5.ஆனால் நாம் நுகர்ந்த பின் பிரம்மமாகின்றது சிருஷ்டியாகின்றது.
6.உருவான உணர்வுகள் உடலாகின்றது. அப்பொழுது இங்கே அரவணைக்கின்றது.
இதைச் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.
ஆகவே எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…? அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதை நமக்குள் உருவாக்க வேண்டும். நாம் எண்ணியதைத்தான் உயிர் உருவாக்குகின்றது.
அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் உருவாக்கி நாம் பார்க்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…! என்று எண்ண வேண்டும். துன்பமோ துயரமோ கஷ்டமோ நஷ்டமோ கொண்டு மற்றவர்கள் வந்தாலும் நாம் அவர்களிடம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறுவீர்கள்…
2.நிச்சயம் நன்றாக இருப்பீர்கள்…! என்று சொன்னால்
3.இந்த உணர்வுகள் அவர்கள் தீமைகளைத் தள்ளுகின்றது.
4.நமக்குள் அந்தத் தீமைகள் வராது.
தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இப்படிச் சரியான முறையில் எண்ணிப் பாருங்கள். நோயோ கஷ்டமோ துன்பங்களோ “எல்லாமே நீங்கிப் போகும்…!” என்று நீங்கள் சொல்லுங்கள்.
இப்படி உங்கள் எண்ணம் தான் மற்றவர்களின் தீமைகளை நீக்க வேண்டும். அவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது (இது மிகவும் முக்கியம்)
ஆனால் அவர்கள் சொல்லைக் கேட்டு நீங்கள் பலவீனப்படுத்திச் சொன்னால் “என்ன காலமோ…? இந்த மாதிரி வந்துவிட்டது…! என்ற நிலையில் என்று அந்த விஷமான உணர்வுகள் இயக்கிவிடும்.
சாமிக்கு (குருநாதருக்கு) என்ன தெரியும்…? நான் சொல்கிறேன் போகிறது பார்…! என்பார்கள். அப்புறம் ஆணி வேரையே பிடுங்கிவிட்டு விடுகிறார்கள்.
1.பாசத்துடன் பிறருடைய கஷ்டங்களைக் கூர்ந்து கேட்டு
2.இந்த மாதிரிச் சொல்லும் பொழுது இதைக் கடந்து வரப்படும் பொழுது நாளடைவில் அதே கஷ்டம் இங்கேயும் அதிகமாகும்.
அந்த மாதிரி எல்லாம் ஆகாதபடி தடுக்க வேண்டுமா இல்லையா…?
ஏனென்றால் மனிதனுடைய வாழ்க்கையில் பிறருடைய கஷ்டமான உணர்வுகளைப் பண்புடன் அன்புடன் பரிவுடன் கேட்டுணரப்படும் பொழுது அவைகள் எல்லாம் நமக்குள் பிரம்மமாகின்றது. உடலுடன் உடலாக ஆக்கிவிடுகின்றது.
அப்படி ஆகவிடாமல் தடுக்க ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து இணைத்து அந்த வலுவைக் குறைக்க வேண்டும்.
“நீங்கள் ஒவ்வொருவரும் அந்த அருள் மகரிஷியாக வேண்டும்…!” என்பது தான் என்னுடைய ஆசை. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னிடம் (ஞானகுரு) அதைத்தான் சொன்னார். அவர் காட்டிய அதே உணர்வைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம். உபயோகப்படுத்துங்கள்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.