“மண்ணுடன் மண்ணாகும்…” மாய வாழ்க்கையைப் பற்றி ஈஸ்வரப்பட்டர் சொன்னது…!

life cycle

“மண்ணுடன் மண்ணாகும்…” மாய வாழ்க்கையைப் பற்றி ஈஸ்வரப்பட்டர் சொன்னது…!

 

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே…!

இந்த உலகம் என்ற மாயையே எண்ணி மயங்கி வாழும் வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம். அப்படிப்பட்ட
1.இந்த உலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி இருப்பது எதுவப்பா…?
2.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…?
3.சொத்தையும் சுகத்தையும் ஆள்வது யாரப்பா…?
4.இந்த உலகில் பிறந்து வாழ்ந்து இறந்த பின் நிலைத்து இருப்பது என்னப்பா…?
5.நம் உடலா…? சம்பாரித்த பணமா…? சொத்தா…? சுகமா…?

நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது நம்முடைய மக்கள் (பிள்ளைகள்) இருக்கின்றார்களே…! என்ற எண்ணம் பலருக்குண்டு. ஆனால்
1.நம் பெயர் சொல்ல அந்த மக்கள் எத்தனை காலங்களுக்கு…?
2.அடுத்து அந்தக் குழந்தைகளுக்குக் குழந்தை.. குழந்தைகளுக்குக் குழந்தை…! என்று (பேரன்… கொள்ளுப் பேரன்….!)
3.இப்படிச் சுற்றிக் கொண்டேயுள்ள நிலையிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…? என்று இதை எல்லாம் சிந்திக்கின்றோமா…?

நம்முடைய அம்மா…அப்பா… பற்றி சிறிது காலத்திற்கு எண்ணுகிறோம். அவர்கள் அம்மா அப்பா… அதற்கு முன்னாடி வாழ்ந்தவர்கள்…! என்று யாரையாவது நாம் நினைக்கின்றோமா…?

மீறிக் கேட்டால் என்ன சொல்வோம்..? அவர்கள் எல்லாம் போய் விட்டார்கள்… என்று “சாதாரணமாகத்தானே சொல்கிறோம்…!”

அவர்கள் எதையுமே (தன் உடலையோ பொருளையோ) கொண்டு போக முடியவில்லை என்கிற பொழுது நாம் மட்டும் எதைக் கொண்டு போக முடியும்…?

ஆக மொத்தம் பிறப்பு…உடல்…இறப்பு…! மீண்டும் பிறப்பு… உடல்…இறப்பு…! என்று இராட்டினம் மாதிரித் தான் சுற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் அனைவரும் பிறவிப் பயன்… பிறவிப் பயன்… என்பதையே புரிந்து வாழ்ந்திடாமல் இருக்கும் வரை (உடலுடன்) அனுபவிக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் நம்மைப் போன்றே பூமியில் தோன்றிய புண்ணியவான்கள் இன்றும் அவர்கள் பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1.நம்முடைய ஆணிவேரான சுவாச நிலையிலிருந்து
2.நாம் பெறும் பாக்கியங்களை… நாம் பெறும் செல்வங்களை
3.உயிராத்மாவிற்குத் தேவையான அழியாத பொக்கிஷத்தை… அந்தச் செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திட
4.பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றவர்கள் தான் புண்ணியவான்களான அந்த ஞானிகளும் மகரிஷிகளும்…!

அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல பல ஆற்றல்களையும் சக்திகளையும் பெற்று இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் நிலைத்திருக்கவில்லையா…?

அவர்கள் பிறந்த அதே பூமியில் வாழும் நமக்கு நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

அத்தகைய சக்தி (அஷ்டமாசித்து) பெற்றவர்கள் தன் உடலை ஒரு கூடாக வைத்துத்தான் தன் ஆத்மாவை உலகெங்கும் பிற மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்த உலகில் கலந்துள்ள அத்தகைய மெய் ஞானிகள் மகரிஷிகளின் நிலையை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்து உதவி
2.நம் எண்ணத்தையும் செயலையும் நல்லதாக்க
3.நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் அப்படிப்பட்ட பல பெரியோர்கள் உள்ள பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் எண்ணமும் செயலும் பல ஆசை கொண்ட சுகபோகங்களுக்குச் சென்றிடாமல் அதற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையை மாற்றிட வேண்டும். அன்பென்னும் ஆசை தான் நமக்கு வேண்டும்.

ஆகவே
1.அழியாச் செல்வமான நம்முடைய ஆத்மாவை நாம் அழித்தே வாழ்ந்திடாமல்
2.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி
3.அந்த ஆத்மாவிற்கு அடிபணிந்து வாழ்வதற்கு நம்முள் இருக்கும் உயிரான ஈசனின் சக்தியைக் கொண்டு
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே மனிதனின் வாழ்க்கை.

ஞானிகள் மகரிஷிகளின் அருளாசி பெற்று வாழ்ந்திடுங்கள்…
அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்…!

Leave a Reply