“மனிதர்களைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…? அல்லது “மகரிஷிகளைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…?

divine-chracter-of-sages

“மனிதர்களைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…? அல்லது “மகரிஷிகளைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…?

 

இன்றைய சகஜ வாழ்க்கையில் ஒருவரை நாம் எப்படிப் பார்க்கிறோம்…? எப்படி நினைக்கின்றோம்…? எப்படி அறிகிறோம்…? எப்படி விசாரிக்கின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்..!

1.யார் இவர்…? ஆணா பெண்ணா…? என்ன வயது…?
2.படித்தவரா படிக்காதவரா…? திருமணமானவரா ஆகாதவரா…?
3.எந்த ஊர்…? நல்லவரா கெட்டவரா…?
4.வசதியானவரா.., வசதி இல்லாதவரா…?
4.பார்க்க நன்றாகத்தான் இருக்கிறார்… அல்லது பார்க்கவே பிடிக்கவில்லை…! என்று இத்தனையும் பார்ப்போம்.

அதற்கப்புறம் அவருடன் பேசிப் பழகும் பொழுது நம்முடன் ஒத்துப் போனால் நல்லவன் என்போம். இவனை நம்பலாம்… அன்பானவன்… பண்பானவன்… இரக்கமானவன்…! என்று நினைப்போம்.

நம்மிடம் எதிர்த்துப் பேசினால் உடனே அவனை ஆகாதவன் என்போம். மோசமான ஆள்… ஏமாற்றுபவன்… கோபக்காரன்… கிறுக்கன் மாதிரி இருக்கிறான்…! என்றெல்லாம் நினைப்போம்.

நம் மனதிற்குள் இத்தனையும் ஓடும். உதாரணத்திற்கு இதையெல்லாம் சொல்கிறேன்.

இதில் என்னென்ன விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றோமோ அதற்குத்தக்க நம்முடைய அத்தனை செயல்களும் மாறும், சொல்களும் மாறும். அவருடன் பழகுவதும் மாறும். மாறிக் கொண்டேயிருக்கும்

இப்படி நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் நாம் மீண்டும் மீண்டும் பதிவு செய்தால் கடைசியில் அதனால் நமக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
1.அவர்களைப் பற்றிய உணர்ச்சிகள் தான் நமக்குள் வருமே தவிர
2.நம் உணர்வை அங்கே செலுத்தவே முடியாது.
3.அதாவது அவர்களிடமிருந்து நாம் வாங்கத்தான் செய்வோம்.

இதையே மகரிஷிள் உணர்வின் பதிவு கொண்டு ஒருவரைப் பார்க்கிறோம் என்றால் அல்லது நம் பார்வையில் வந்து ஒரு மனிதன் மோதினால்
1.இந்த உயிர் கடவுள்…!
2.ஈசன் வீற்றிருக்கு இந்த உடல் ஒரு ஆலயம்
3.மனிதனை உருவாக்கிய நல்ல குணங்கள் அங்கே தெய்வங்களாக இருக்கிறது…
4.அந்தத் தெய்வ குணங்களுக்கு நல்ல உணர்வை நாம் அபிஷேகம் செய்வோம்…!
5.அந்த உயிருக்கு அபிஷேகம் செய்ய நாம் விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்
6.அருள் மகரிஷிகளின் அருளாற்றலை அங்கே பாய்ச்சுவோம்
7.அவரை நம் பார்வையால் மெய் ஞானியாக ஆக்குவோம் என்று
8.இப்படிப்பட்ட நல் உணர்வுகளை நாம் பெற்று அவருக்குப் பாய்ச்சுவோம்.

இது விண்ணிலிருந்து எடுத்து அந்த உணர்வலைகளை உயிர் வழியாக அவருக்குப் பாய்ச்சும் முறை. அவர்களிடமிருந்து நாம் எதையும் கவரவில்லை அல்லது பெறவில்லை.

நாம் தான் அவருக்குக் கொடுக்கிறோம். கொடுக்கும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம். வாங்கும் நிலையில்லை. இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளிடமிருந்து
2.அவர்கள் பெற்ற சக்தியை நாம் ஏங்கிப் பெறுவதாக இருக்க வேண்டும்
3..அவ்வாறும் பெற்றதை மனிதர்களிடம் கொடுக்கும்படியாக இருக்க வேண்டும்.

மாறாக மனிதர்களைப் பற்றுடன் பற்றி அவர்கள் உணர்வுகளை நாம் வாங்கினால் மகரிஷிகளிடமிருந்து வாங்கும்படி வராது. போதும்… வேண்டாம்…! என்ற நிலை ஆகிவிடும்.

அதனால் தான் இராமலிங்க அடிகள்
1.நான் யாரிடமும் (மனிதர்களிடம்) யாசகம் கேட்க மாட்டேன்…! என்று சொன்னார்.
2.அதே சமயத்தில் நான் யாருக்கும் (எந்த மனிதனுக்கும்) இல்லை என்று சொல்லக் கூடாது என்றும் சொல்லியுள்ளார்.

அதனால் தான் மனிதர்களைப் பற்றிய பதிவுகள் வேண்டாம். மகரிஷிகளைப் பற்றிய பதிவு வேண்டும் என்று சொல்வது.
1.மனிதனாக இருக்க வேண்டும் என்றால்
2.இந்தப் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால்
3.மனிதர்கள் பற்றிய பதிவுகளை எடுத்து வளர்த்துக் கொள்ளலாம்.

இல்லை…! இந்தப் பூமியில் நான் மறுபடி உடல் பெறக் கூடாது. விண்ணுக்குப் போக வேண்டும் என்றால் மகரிஷிகளின் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

இது அவரவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply