தியானம் செய்யும் பொழுது உடல் முழுவதுமே சூடு ஆகின்றது… ஏன்..? நல்லதா… கெட்டதா…!

fire maharishis

தியானம் செய்யும் பொழுது உடல் முழுவதுமே சூடு ஆகின்றது… ஏன்..? நல்லதா… கெட்டதா…!

 

கோவிலில் தீப ஆராதனையாக அந்த நெருப்பைத்தான் சாமிக்கு ஒளியாகக் காட்டுகின்றார்கள். அதே ஆராதனையைத்தான் நம்மிடமும் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள்.
1.அந்த நெருப்பை நம் இரண்டு கைகளாலும் பட்டும் படாமலும் தொட்டு
2.முகத்தில் இரண்டு கையையும் கொண்டு போய் புருவ மத்தியில் விரல் படுகின்ற மாதிரி ஒற்றிக் கொள்கின்றோம்.

இப்படி ஏன் செய்கிறோம்…?

இதை யாரும் யோசிப்பதில்லை. எல்லோரும் இப்படிச் செய்கிறார்கள். அதனால் நாமும் அவ்வாறு செய்கிறோம். அது தான் நமக்குத் தெரியும்.

அதாவது மகரிஷிகள் அனைவருமே நெருப்பின் சக்தியை வளர்த்துக் கொண்டவர்கள். பேரொளியாக மாற்றிக் கொண்டவர்கள். “எம அக்னி” என்று அவர்களைச் சொல்வார்கள்,
1.அவர்கள் தங்களுக்குள் பெற்று வளர்ந்த அந்த நெருப்பின் சக்தியை
2.அதாவது பேரருள் பேரொளியை…
2.சாதாரண மக்களையும் நுகரச் செய்து அவரவர்கள் உயிரிலே அந்த நெருப்பின் சக்தியைச் சேர்க்கச் செய்கின்றார்கள்.

அதைச் சேர்க்கச் சேர்க்க உடலில் அறியாது சேர்ந்த தீமைகள் அனைத்தும் வேக வைக்கப்பட்டு தீமைகள் ஆவியாகப் பிரிந்து செல்கிறது.

அதே சமயத்தில் நாம் எடுக்கும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அதீத சக்தியைப் பெறும் சந்தர்ப்பமாக அது அமைகிறது.
1.அதாவது தீமையை மாற்றி
2.நன்மை செய்யும் சக்தியாக நாம் மாற்றுகின்றோம் என்று அர்த்தம்.

கடையில் வாங்கிய அரிசி பருப்பு காய்கறிகள் எல்லாவற்றையும் பாத்திரத்திலே போட்டு அடுப்பிலே வைத்து வேக வைத்து அதிலுள்ள காரலை நீக்கி சுவையாகச் சமைத்துச் சாப்பிடுகின்றோம் அல்லவா…!

அது போல் புருவ மத்தியின் வழியாக மகரிஷிகளின் அருள் சக்தியை (நெருப்பை) கூட்டினால் நாம் எந்த நல்லதை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதை உருவாக்க முடியும்.

தியானம் இந்த முறைப்படி செய்தால் கடுமையான சூடு உண்டாகும். அது உண்மைதான். சூடு அதிகமானாலும்……!
1.நாம் பெறும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எத்தனை பேருக்குக் கொடுக்க முடியுமோ கொடுக்கலாம்
2.எத்தனை பேர் மேல் பகைமை கொண்டோமோ… எத்தனை பேர் மேல் வெறுப்பு கொண்டோமோ… அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சினால்
3.நம் உடலில் உள்ள சூடு உடனே குறையும்… சாந்தியாகும்…!

தியானம் செய்யும் பொழுதும் சரி… அல்லது செய்த பின்பும் சரி.. புருவ மத்தியிலோ அல்லது உடலிலோ சூடு வருகின்றது என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கின்றது என்று அர்த்தம்

சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இது…!

Leave a Reply