ஓ…ம் என்ற நாதமாக எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குகிறோம்…!

Omm

ஓ…ம் என்ற நாதமாக எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குகிறோம்…!

 

நாம் எந்த உணர்வை எண்ணுகிறோமோ அது “ஓ…” என்று நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகிறது.

அவ்வாறு இயக்கப்படும் போது எந்தக் குணத்தை நாம் இயக்கி நம் உடலில் சேர்க்கின்றோமோ நம் உயிர் அதைத்தான் ஆளுகிறது.
1.அதை வைத்துத் தான் நம்மை செயல்படுத்தச் செய்கிறது.
2.அதை வைத்து தான் நாம் சொல்லைச் சொல்கிறோம்.
3.அதன் வழி தான் நாம் செயலைச் செய்கிறோம்.

சங்கடமாகவும் சலிப்பாகவும் இருக்கும் போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்கி நம்மை ஆள்கிறது.
1.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது சரியான கணக்குப் பார்க்க முடியுமோ…?
2.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது ஒருவர் யோசனை கேட்டால் உங்களால் சொல்ல முடியுமோ…? முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் நம்மை ஆட்சி புரிகிறார். யார்…? நமது உயிர் தான்…! அந்த வழியில் நம்மை இயக்குவதும் நம்மை ஆள்வதும் அவனாகத்தான் இருக்கிறான்.

இருந்தாலும் அதே உணர்வை நம் உடலில் சேர்க்கும் போது அது ஈசனாக இருந்து நாம் எதை நுகர்ந்தோமோ அதை நம் உடலில் சேர்க்கின்றது. நம் உடலுக்குள் புகுந்து விட்டால் அது நம் இரத்தங்களில் கலந்து அது நம் உடலாக ஆகிவிடுகிறது.

நீங்கள் நல்லதோ கெட்டதோ எந்த குணங்களை நுகர்ந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலுள்ள இரத்தங்களில் கலந்து கொண்டே தான் இருக்கும்.

அதில் பலவிதமான வண்ணங்கள் இருக்கும். பலவிதமான உணர்வுகளை உணர்ச்சிகளை ஊட்டிக்கொண்டே இருக்கும். எதன் உணர்வு வலுவாக இருக்கிறதோ அந்த உணர்வு இயக்கமாகி உணர்ச்சிகளை வெளிப்படச் செய்து அது சொல்லாகவும் செயலாகவும் மாறும்.

கோபம் வரும்போதெல்லாம் பார்க்கலாம். ஒருவர் தவறான செயலைச் செய்யும் போது உங்கள் இரத்தங்களில் எப்படி அந்த உணர்ச்சிகள் மாறுகின்றன…? என்று தெரியும்.

இதே மூச்சலைகளை மற்றவர்களும் நம்மைப் பார்த்து நுகரும் போது இந்த உணர்வுகள் அவர்களுக்குள்ளும் இயக்கப்பட்டு அவர்களும் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலைகள் வரும்.
1.அவர்கள் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன…? என்ற வகையில்
2.அடுத்து கலந்து பதில் சொல்லும் நிலையாக வரும்.

உதாரணமாக நம்முடைய நண்பன் அவனுடைய இன்னொரு நண்பருடன் இருக்கிறான். நம்முடைய நண்பனுக்காக அவன் எதையும் செய்யக்கூடியவன்.

இருந்தாலும் நம் நண்பருடன் சேர்ந்தவன் சரியில்லை… தவறு செய்கிறான் என்ற நிலையில் அவன் தப்பு செய்வதை நாம் திருத்தச் சொல்லிச் சொன்னோம் என்றால் நம் நண்பன் இந்தத் தப்பை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

1.ஏனென்றால் நம்முடைய நண்பனின் உணர்வுக்கு முன்னாடி அவனின் நண்பன் உணர்வு இருப்பதால்
2.அதை எண்ணி முன்னாடி வலு சேர்த்துக் கொள்ளும் போது
3.நம் உணர்வுகளை நுகர்ந்த உடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி
4.நம்மைத் தான் குற்றவாளியாகத்தான் சொல்வான்.
5.ஆக நுகர்ந்த உணர்வுகள் பற்று எதனின் உணர்வு கொண்டு வருகிறதோ
6.அதன் உணர்வு வலு சேர்க்கப்படும் போது நல்ல உணர்வுகள் செயல் குறைந்து போகும்.
7.இரத்தங்களில் கலந்த நிலைகள் கொண்டு இத்தகைய நிலை வருகிறது.

நம்முடைய உணர்வை ஏற்கவில்லை என்னும் போது நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுவிற்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து
1.அந்த நல்லது ஒடுங்குகிறது.
2.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தியை அது இழக்கிறது.
3.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் போது அது ஒடுங்குகிறது… ஏற்றுக் கொள்வதில்லை… பார்க்கலாம்…!

ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் நம்முடைய உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகும் போது கூடக் கொஞ்ச நேரம் நிலை நிறுத்தி விட்டோமென்றால் இதற்குச் சாப்பாடு தேவை.

நாம் எப்படி மூச்சு விடுகிறோமோ அதேபோல அந்த இயக்கத் தொடருக்குப் பிரணவம் – ஜீவன் வேண்டுமென்றால் நம் உடலின் உஷ்ணத்தினால் வாயு உண்டாகிறது. அழுத்தமும் ஏற்படுகிறது.

நாம் சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனை வருகிறது…? எந்தெந்தப் பொருள்களை அதற்குள் அதிகமாகப் போட்டிருக்கின்றோமோ அந்த வாசனை தான் அதிலிருந்து வெளியிலே வரும். அதிலிருந்து உருப்பெரும்.

அதைப் போன்று நல்ல அணுக்களுக்கு உண்டான ஆகாரம் இல்லை என்கிற நிலையில் மற்ற உணர்வுகளின் அழுத்தத்தினால் உடலிலே ஒருவிதமான மாற்று உணர்ச்சிகள் தோன்றுவதைப் பார்க்கலாம்.

இதையெல்லாம் எது இயக்குகிறது…? நமது உயிர் தான். அது எலெக்ட்ரிக் ஆக இருக்கிறது. நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக் ஆக எதிர் நிலையான நிலையில் இயங்குகிறது.

இதைப் போன்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் நம் இரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பலவிதமான அணுக்களின் மாற்றம் ஆவதும் நடக்கிறது, நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மற்றவர்களுடன் பழகும் போது எதன் உணர்வைக் கவர நேருகின்றதோ அதனால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்…! இவை எல்லாம்.

நல்லவர்களுடன் நாம் அமைதியான நிலையில் கேட்டு வந்து பேசிக் கொண்டு பழகி வந்திருந்தாலும் அடுத்தாற்போல் திடீரென்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வெறுப்பாகித் தாக்கிப் பேசும் போது என்ன நடக்கிறது…?

அதை நுகர்ந்தவுடன் நமக்கு மிகவும் இக்கட்டான நிலை\யாகி ஆகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஒன்றுக்கொன்று மோதும் போது சலனங்களும் சஞ்சலங்களும் ஆகி நம்முடைய நல்ல அணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது உடல் சோர்வடைகிறது. உணர்ச்சியும் மாறுகிறது.

எந்த உணர்வின் தன்மையை அதிகமாக்குகிறோமோ கண் வழி அதை நுகர்ந்து உயிரிலே பட்டு மீண்டும் அந்த உணர்ச்சிகள் அதிகமாக நம் இரத்த நாளங்களிலே சேர்க்கிறது.
1.இந்த இரண்டு பேருக்குள் சண்டை போட்டுவிடப் போகிறார்களோ…! என்று
2.வேடிக்கை பார்க்கும் நமக்குள் இந்தப் பதட்டம் வருகிறது. (ஆனால் நாம் சண்டை போடவில்லை)

அடுத்து அந்தச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களிடம் சொல்வதற்கு நமக்குத் துணிவு வந்தாலும் சிந்தையான பதில் சொல்லத் தெரியாது.
1.பின்பு நம்மை அறியாமலேயே பகைமை உணர்ச்சிகள் உடலுக்குள் சேரும்.
2.அப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்தங்களில் தான் முதலில் கலக்கிறது.

உயிர் அதை நம் உடல் முழுவதும் பரவச் செய்கிறது என்றும் அதன் வழியே தான் நம்மை வாழச் செய்து ஆளுகின்றது என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஆண்டவன் யார்…? நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும். நம் உடல் முழுவதற்கும் அந்த உணர்வைப் பரவப் செய்யும் போது நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியையும் சாந்தமும் சாந்தமான நிலைகளையும் தருகிறோம்.

நல்ல உணர்வின் உணர்ச்சிகளை நமக்குள் பரப்பச் செய்யும் பொழுது தீமையின் உணர்வுகளை அடக்கி நம்மை அமைதிப் படுத்தச் செய்கிறது

ஆனால் சாதாரண மனிதனின் உணர்வை வைத்து அதை நாம் அமைதி படுத்த முடியாது. அதற்காக வேண்டித்தான் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் நினைவு கொண்டு “ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற (தீமையான) வித்திற்குள் இது கலந்து கொஞ்சம் கொஞ்சமாக இதன் வலு கூடும் போது அதை அடக்கக் கூடிய சக்தி பெற்று விடும்.

அப்பொழுது தீமையை அடக்கி நம் மனதை அமைதிப்படுத்தும் வல்லமையை நாம் பெறுகின்றோம்.

1 thought on “ஓ…ம் என்ற நாதமாக எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குகிறோம்…!

Leave a Reply