
மெய் ஞான சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ “அந்த அத்தனை பேரின் வலுவும் நமக்குக் கிடைக்கின்றது…!
மெய் ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் உடலிலே வந்த தீமைகளை நீக்கி உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண்ணுலகில் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு விண் சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைத்தான் உனக்குள் (ஞானகுரு) பதியச் செய்கிறேன் என்றார் குருநாதர்.
அவ்வாறு பதியச் செய்த நிலைகள் கொண்டு
1.மனித வாழ்க்கையில் உன்னை அறியாது சோர்வடையச் செய்யும்
2.இருளான உணர்வுகளுக்குள் மெய் ஞானியின் உணர்வை இணைத்து
3.மெய் ஞானிகளை நினைவுக்குக் கொண்டு வந்து கவருவேயானால்
4.அந்த மெய் உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை நீ பெறுகின்றாய்.
அந்த உணர்வுகள் உனக்குள் விளைய விளைய உன்னிடமிருந்து வெளிப்படும் அந்த எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் அனைவரது உணர்வுகளில் “ஓ…” என்று ஜீவனாகி “ம்…” என்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.
பிறர் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்…! என்ற ஏக்க உணர்வுடன் வரும் போது
1.அனைத்து உணர்வின் சத்தும் உனக்குள் கிடைத்து நீ வலு பெற்றவனாக ஆகின்றாய்.
2.எத்தனை பேருக்கு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகின்றயோ
3.அத்தனை பேருடைய எண்ண வலுவும் உனக்குள் கிடைக்கின்றது.
அவர்களுக்குள் மெய் உணர்வுகள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் போது அந்த உணர்வுகள் அவர் உடலுடன் இரண்டறக் கலந்து அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் அவருக்குள்ளும் விளைகின்றது.
அந்த ஞானிகளின் உணர்வை அவர்கள் பெற்ற பின் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பதை நீ பார்க்கும் போது அந்த உணர்வின் சத்து கொண்டு உனக்குள் ஒளியாக மாற்றும் நிலை பெறுகின்றாய். அந்த அருள் ஞானிகளின் ஒத்த உணர்வாக அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய்.
ஆகவே கூட்டமைப்பாக எல்லோருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற நிலைக்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வுகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
அந்தத் தெளிந்திடும் நிலை பெற்ற மெய் ஞானியின் நிலைகளை ஒவ்வொருவரும் உடலுக்குள் செலுத்தும் போது அவர்கள் ஒளிச் சரீரம் பெற்றது போல அனைவரது உணர்வும் அது ஒளி பெறும் தகுதியாக விளைகின்றது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.