மகரிஷிகளின் அருள் சக்திகளை ஆத்ம சுத்தி மூலம் பெறும் வழி

Serene cleaning of soul

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஆத்ம சுத்தி மூலம் பெறும் வழி

உலக அனுபவங்கள் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டுக்குள்ளும் பல மலைப் பகுதிகளுக்குள்ளும் அலைந்து திரியச் செய்தார். அப்பொழுது பல வகைகளிலும் யாம் சிரமப்பட நேர்ந்தது.

சிரமங்கள் ஏற்படும் பொழுது துயரப்படும் நிலையே வருகின்றது. பின் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது குருவை நினைக்கின்றேன்.

அவரை நினைத்து அவர் உபதேசித்து அருளிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து உடலுக்குள் விளைய வைக்கும் பொழுது என் வாழ்க்கையில் வந்த தீய வினைகளிலிருந்து நான் விடுபட முடிந்தது.

அதைப் போன்று தான் உங்களுக்குள் வரக்கூடிய துன்ப வினைகளை நீக்குவதற்கு எம்மை நாடி வருகின்றீர்கள்.

நீங்கள் எத்தனையோ நன்மைகள் செய்திருந்தாலும் பிறருடைய துன்பமான உணர்வுகளை நீங்கள் கேட்டறிந்த நிலையில் அந்தத் துன்பத்தை அறிந்த உணர்வுகள் உங்களை இயக்காத வண்ணம் தடுக்க
1.மெய் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட
2.தீமைகளை வென்றிடும் ஆற்றல் மிக்க சக்திகளை ஊழ்வினையாகப் பதியச் செய்து
3.உங்கள் எண்ணத்தால் அதை நுகரச் செய்கின்றோம்.

ஆகவே யாம் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது உங்களை அறியாது உங்களுக்குள் வரும் தீமைகளை மாற்றியமைக்க இது உதவும்.

சாமி (ஞானகுரு) ஏதோ செய்வார்..! என்ற நிலைக்குப் பதில்
1.நான் கண்டுணர்ந்த இந்த மெய் உணர்வின் தன்மையை நீங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில்
2.சாமி சொன்னார்…! என்ற நிலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை
3.நிச்சயம் பெற முடியும்…! என்ற ஏக்கத்துடன் ஆத்ம சுத்தி செய்து கொண்டால் போதும்.

உங்கள் வாழ்க்கையில் நன்மை செய்யும் பொழுது எதிர் நிலையான உணர்வை நீங்கள் சுவாசிக்க நேருகின்றது. அத்தகைய துன்புறுத்தும் உணர்வுகளிலிருந்து மீள
1.நீங்கள் சாமி சொன்னார்…! என்ற இந்த நிலையை எண்ணத்தில் வைத்து
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மையை நீங்கள் நுகர்ந்து அது உங்கள் உடலுக்குள் சென்று
4.உங்களை அறியாது வேதனைப்படச் செய்யும் அந்த நிலையைத் துடைக்கச் செய்கின்றது.

அந்த மெய் ஞானிகளின் உணர்வை எண்ணி வேகமான உணர்வுடன் அதை உங்கள் உடலுக்குள் ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் செலுத்தும் பொழுது உங்கள் உடலுக்குள் இந்த வீரியத் தன்மைகள் பிறக்கின்றது.

எப்படி வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போல உங்கள் வாழ்க்கையில் உங்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும் சாக்கடையான உணர்வைப் பிளந்து அந்த ஞானியின் ஆற்றலை உங்களுக்குள் முழுமையாக வளர்த்துக் கொள்ள இது உதவும்.

மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்கள் நல்ல எண்ணத்தைக் காத்து அந்த மெய் ஒளி காணும் நிலையை ஏற்படுத்தத்தான் இதைச் சொல்கிறோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply