அடுத்தவர்களை முந்திக் கொண்டு நாம் முதலில் போக வேண்டும் என்ற “அவசர உணர்வுகள்…!” நமக்குத் தேவையா…?

patience in meditation

அடுத்தவர்களை முந்திக் கொண்டு நாம் முதலில் போக வேண்டும் என்ற “அவசர உணர்வுகள்…!” நமக்குத் தேவையா…?

 

பஸ்ஸிலே செல்லும் பொழுது மணிக்கணக்கிலே நாம் பயணம் செய்வோம். ஆனால் நாம் இறங்க வேண்டிய இடத்திற்கு பஸ் வந்து நின்றவுடனே “வீட்டிற்குப் போக வேண்டும்…!” என்கிற இந்த அவசரம் முன்னாடி வந்து விடும்.

ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து கொண்டு தலை கை கால் மேலில் இடித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டு படுகின்ற அவஸ்தைகளைப் பார்க்கலாம்.

பத்து மணி நேரம் பஸ்ஸுக்குள் அமைதியாக உட்கார்ந்து இருப்போம். ஆனால் இறங்கும் பொழுது ஒரு நிமிடம் மற்றவர்கள் இறங்கட்டும். நாம் பின்னாடி இறங்குவோம்… என்ற பொறுமை வருவதில்லை. போட்டு பெட்டியையும் பைகளையும் வைத்து முட்டித் தள்ளிக் கொண்டிருப்போம்.

கீழே இறங்கி வண்டிக்காரனைப் பார்ப்போம். சொந்தக்காரர்கள் யாரும் வந்திருக்கின்றார்களா… இல்லையா…! என்று பார்ப்போம்.
1.கீழே இறங்கி அங்கே நின்று கொண்டே தான் இருப்போம்.
2.ஆனால் அந்த வண்டிக்குள் இருந்து இறங்குவதற்கு முன்னாடி அத்தனை அவசரம்.
3.மற்றவர்களைத் தள்ளி விட்டு நாம் முந்திக் கொண்டு போக வேண்டும்… என்ற நிலைகள் தான் வரும்.

இது எதைக் காட்டுகின்றது…? பிறரை ஒதுக்கும் நிலை தான் வருகின்றது. நம் செயலைப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் வெறுக்கும் நிலையும் பகைமையையும் தான் இது உருவாக்கும்.

நாம் ஒரு குழம்பு வைக்கும் போது குழம்பிற்குள் காரம் ஒதுங்கி விட்டால் அந்தச் சுவையின் தன்மை கெட்டுப் போகும். குழம்பிற்குள் உப்பின் தன்மை ஒதுங்கி விட்டால் அந்தச் சுவையின் தன்மை கெட்டு விடும்.

அதே போல வீட்டில் நாம் பலகாரத்தை எல்லாம் அழகாகச் செய்து அருமையாக வைத்திருக்கின்றோம். ஒரு பக்கம் இனிப்பான பதார்த்தத்தைச் செய்து வைத்திருக்கின்றோம், இன்னொரு பக்கம் காரமான பதார்த்தத்தைச் செய்து வைத்து இருக்கின்றோம்.

காரமான பதார்த்தத்தில் கொஞ்சம் அதற்கு உப்பைப் போட வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம். பக்கத்தில் இருக்கின்ற பாட்டிலில் உப்புத் தண்ணீர் அதிகமாக இருக்கின்றது. உப்புத் தண்ணீரை எடுக்கும் போது “டபக்…!” என்று திறந்து விட்டால் இனிப்புப் பதார்த்தத்தில் சிந்திவிடுகிறது. பின் இனிப்புப் பதார்த்தத்தில் ருசி எப்படி இருக்கும்…?

இதைப் போன்று தான் நாம் எடுக்கும் அவசர உணர்வின் தன்மையால் நாம் எவ்வளவு பக்குவப்படுத்திச் செய்திருந்தாலும் தீமையான விளைவுகள் தான் வாழ்க்கையில் வருகின்றது. அந்தப் பொறுமை இல்லாததால் எத்தனையோ வகைகளில் சிக்கித் தவிக்கின்றோம்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஞானிகள் கோவிலைக் கட்டி அருள் சக்திகளை எல்லோரும் பெறும்படி செய்தார்கள்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். என் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணி விட்டு
1.நாங்கள் பார்க்கும் குடும்பங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
2.அந்தக் குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் தொழில் வளம் பெருகி மகிழ்ச்சியான நிலைகள் அந்தக் குடும்பத்தில் ஏற்பட வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் மெய் ஒளி மெய் ஞானம் பெறவேண்டும் என்று
5.இதை எண்ணிக் கொண்டே இருந்தால் நமக்குள் இந்தச் சக்தி கூடுகின்றது.
6.மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணம் வளர வளர நமக்குள் அவசர உணர்வுகள் எதுவும் நம்மை இயக்காது
7.தீமையான விளைவுகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

ஆகவே இதைப் போன்ற நிலையில் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளைத் துடைப்பதற்குத் தான் மெய் ஞானிகளின் சக்திகளை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply