எல்லோரும் பெறக்கூடிய ஞானம் எது…?

Gurudevaa

எல்லோரும் பெறக்கூடிய ஞானம் எது…?

ஆவியான அகண்ட பேரண்டத்தில் (COSMOS) ஒலி ஒளி நீர் இவற்றின் சக்தியுடனே சகல திரவியங்கள் உருவங்கள் பல கோடி நிலைகள் ஏற்படுகின்றன.

இவற்றுடன் மனித உயிராத்மாக்களின் எண்ண நிலையும் கலந்துறவாடி எடுக்கும் சுவாசம் கொண்டு அனைத்து நிலைகளும் நடக்கின்றன.
1.ஆவியான ஒலி ஒளி நீரில் இருந்து தான்
2.எல்லா ஜீவனுமே உருவாகின்றது.

பாலில் நீர் கலந்தாலும் எண்ணையில் நீர் கலந்தாலும் அந்த நீர் தன் நிலையைக் காட்டுவதில்லை. நீர் தனித்து எதிலும் எதுவாகவும் எப்படிக் கலக்கின்றதோ அதைப் போன்று எல்லாவற்றிலும் எல்லாமாக ஆண்டவனின் சக்தி கலந்துள்ளது.

அது போல
1.நம் எண்ணங்கள் எல்லாவற்றிலும் கலந்திருந்தாலும்
2.அந்த எல்லாமில் எல்லாமாக இருந்தே
3.மெய் ஞானத்தை நாம் பெறுதல் வேண்டும்.

ஆனால் ஞானம் பெற்று “நான்…!” என்ற அகந்தை வந்துவிட்டால் அந்த ஞானமும் செயல்படாது. ஏனென்றால் ஞானம் என்பதே நமக்காக மட்டுமல்ல. நாம் பெறும் ஞானத்தைக் கொண்டு பலர் ஞானங்களைப் பெறச் செய்ய நமக்கு ஏற்பட்ட நல் ஞானம் என்றுணர்ந்து
1.நீரைப் போல் நம் ஞான சக்தி இருக்க வேண்டும்.
2.நீர் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
3.நீரைப் போல நாம் பெற்ற ஞானத்தை (அந்த மாமகரிஷிகளின்) வழி நடத்திடல் வேண்டும்.

பக்குவ நிலை – அனுபவங்கள்:-
இரும்பை உலையிலே பழுக்க வைத்தபின் அதைத் தட்டி நமக்கு வேண்டிய உருவமாக அதை உருவாக்கிக் கொள்கின்றோம்.

அது போல்
1.எந்த ஒரு பொருளையும் அதனை உருவாக்க
2.எந்த உருவத்தில் காண உருப்படுத்துகின்றோமோ
3.அதற்குகந்த பக்குவ நிலை ஏற்படுத்த வேண்டும்.
4.அத்தகைய பக்குவ நிலையை ஏற்படுத்தினால் தான் நாம் காண விரும்பும் பொருளை உருவாக்க முடியும்.

அதைப் போன்று அந்த மகரிஷிகள் பெற்ற மெய் ஞானத்தை நாம் பெறவும்
1.நம் எண்ண ஞானத்தைப் பல நிலைகளில் பக்குவம் (அனுபவம்) கொண்டால் தான் நாம் பெற முடியும்.
2.அனுபவம் இல்லை என்றால் வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply