உபதேசம் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் இரகசிய சக்திகள்

Astral divine powers

உபதேசம் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் இரகசிய சக்திகள்  

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் யாம் (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காகக்
1.கஷ்டப்படுபவர்களைப் பார்க்கச் சொன்னார்.
2.பல கஷ்டங்களை எனக்கு உண்டாக்கினார்.

நீ ஒன்றும் செய்யவில்லை. மற்றவருக்கு உதவி தான் செய்கிறாய்…!
1.ஆனால் கஷ்டம் உன்னிடம் எப்படி வருகின்றது..?
2.அது உனக்குள் எப்படிக் கஷ்டத்தை உண்டாக்குகின்றது…?

குருநாதர் சிரமப்படுபவர்களை இரக்கமாகப் பார் என்பார். பார்ப்பேன். அப்பொழுது அவர்கள் கஷ்டம் எல்லாம் எனக்குள் வந்துவிடும். சண்டை போடுபவர்களைப் பார்க்கச் சொல்வார். பார்ப்பேன். இரவுக்கெல்லாம் கெட்ட கனவாக வரும்.

திடீரென்று பல ஆக்ஸிடென்ட்டுகளைப் பார்க்கச் சொல்வார். ஒருவருக்கொருவர் அடிபட்டு இறந்திருப்பார்கள். அந்த ஆன்மாக்களை (ஆவி) குருநாதர் காண்பிப்பார்.

ஆற்றிலே விழுந்து தற்கொலையானது…! அடித்துக் கொன்றது…! பயந்து கொண்டு ஓடியது…! இதையெல்லாம் காண்பிக்கின்றார் குருநாதர். இதையெல்லாம் பார்த்த பின்
1.இரவிலே எங்கேயோ என்னை இழுத்துக் கொண்டு போகிற மாதிரி இருக்கின்றது.
2.அடிக்கிற மாதிரி இருக்கின்றது…
3.உதைக்கிற மாதிரி இருக்கின்றது…
4.அப்புறம் எப்படித் தூக்கம் எனக்கு வரும்..!

அப்பொழுது நீ நுகர்ந்த அந்தந்த உணர்வுகள் உன் உடலுக்குள் வந்து என்னென்ன செய்கிறது என்கிற வகையில் எனக்குத் தெரியச் செய்கிறார். பின்… “இதையெல்லாம் எப்படி மாற்றுவது…? என்று அதற்குண்டான உபயாங்களைக் காண்பிக்கின்றார். பல பல சக்திகளையும் கொடுக்கின்றார்.

அடுத்தாற்போல் அன்றைய மந்திரங்களைப் பற்றி அடுத்துச் சொல்கிறார்.
1.மந்திர ஒலிகளை அந்தக் காலங்களில் எப்படி உண்டாக்கினார்கள்…?
2.மந்திரங்களை எப்படி எடுத்து இயக்கினார்கள்…?
3.மந்திர சக்திகளை அரசர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்..?
4.அரசர்களால் செய்யப்பட்ட சில வினைகள் ஏவல் பில்லி சூனியம் இந்த உணர்வுகள் அது எப்படிச் சேர்கிறது…?
5.அதெல்லாம் எதிலிருந்து வருகின்றது…? அந்த உணர்வின் சக்தி எப்படி இருக்கின்றது..?
6.கூடு விட்டுக் கூடு எப்படிப் பாய்ந்தார்கள் என்று பூராவற்றையும் அப்படியே எடுத்துக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் அந்தந்த நினைவைக் கொடுத்து என்னைக் குருநாதர் எண்ணச் செய்யும் பொழுது “எல்லாம் குவித்து வருகிறது…! அப்பொழுது என் உடலில் பல நிலைகளைச் செய்கிறது.

குருநாதரிடமிருந்து மிகவும் சிரமப்பட்டுத்தான் அறிந்து கொண்டேன். இப்படி மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து தான் முழு அனுபவங்களையும் கொடுத்தார் (கஷ்டத்தைக் கொடுத்துத்தான்).

ஆகையினால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் யாம் கொடுக்கும் வாக்கு என்பது சாதாரணமானதல்ல.
1.ஒரு வார்த்தையைச் சொல்கிறோம் என்றால்
2.எத்தனையோ கஷ்டப்பட்டு அதை நல்லதாக விளைய வைத்துத்தான்
3.வாக்காக உங்களிடம் சொல்கிறோம்.
4.சும்மா வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை.

வாக்கு என்பது நல்ல வித்து. அதைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலைக்கு நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தவறு யாரும் செய்யவில்லை.

நல்லதை எண்ணிச் செயல்படுகின்றீர்கள். ஆனால் வேதனைப்படுகின்றீர்க்ள். சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களிடம் வந்துவிடுகின்றது.

இதையெல்லாம் நிவர்த்திக்க மக்களுக்கு நீ வழி காட்ட வேண்டும் என்று தான் குருநாதர் கட்டளையிட்டார்.

அதனால் தான் ஓய்வில்லாமல் உபதேசிக்கின்றேன். எது எனக்கு ஓய்வு…?
1.நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்… சந்தோஷமாக இருக்க வேண்டும்…! என்று
2.நான் நினைக்கும் பொழுது தான் எனக்கு ஓய்வு.
3.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
4.எப்படியும் உங்கள் துன்பம் நீங்க வேண்டும்.
5.துன்பங்கள் நீங்கி நீங்கள் விடும் மூச்செல்லாம் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்.
6.நல்லதை எண்ணி ஏங்குவோருக்கு அந்த நல்லது நடக்க வேண்டும்.
7.இந்த வகையிலே நான் எண்ணிக் கொண்டேயிருக்கின்றேன்.
8.இந்தச் சொத்தைப் பெறுகின்றேன். வேறு ஒன்றும் இல்லை.

அதே போல் நீங்களும் உங்களுக்குள் நல்லதாக வேண்டும் என்று…. “கொஞ்சம் மனது வைத்து…. எண்ணினீர்கள்…..!” என்றால் நன்றாக இருக்கும்.

Leave a Reply