ஞான வழியில் நாம் சென்று கொண்டிருந்தாலும்… சந்தர்ப்பத்தால் வரும் இடர்பாடுகளை “எப்படிக் கையாள வேண்டும்…?”

Spiritual wisdom

ஞான வழியில் நாம் சென்று கொண்டிருந்தாலும்… சந்தர்ப்பத்தால் வரும் இடர்பாடுகளை “எப்படிக் கையாள வேண்டும்…?”

காட்சி:-
ஒருவர் சாதம் உண்ணும் பொழுது அதிலே ஒரு கல் பட்டு உடம்பே சிலிர்க்கின்றது.

விளக்கம்:-
நாம் நல்ல நிலையில் நல்ல உணர்வும் எண்ணங்களும் கொண்டு வாழ்ந்து வந்து ஞானத்தின் வழித்தொடரைப் பெற்றாலும் அறுசுவையான உணவை உட்கொள்ளும் பொழுது அதனுடன் சேர்ந்து வந்த சிறு கல்லைப் போல அருள் வழியில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது சில இடர்கள் வரத்தான் செய்யும்.

1.அந்த நிலையில் உணவுடன் வரும் கல்லுக்காக
2.நாம் சாப்பாடு சாப்பிடாமல் இருப்பதில்லை.
3.நம்மை எதிர்த்து வரும் அந்த ஏதிர் நிலையான உணர்வுக்கு நம்மையே நாம் அடிமைப்படுத்தாமல்
4.ஞானிகள் காட்டிய மெய் வழியிலேயே நாம் செயல்படுதல் வேண்டும்.

உதாரணமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் பலமான அஸ்திவாரம் வேண்டும். அதே போலத்தான் சுவரை எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அந்தந்த அளவிலே சேர்த்துக் கட்டினால் தான் அந்தச் சுவர் உறுதியாக நிற்கும்.

சுவர் எழுப்பும் பொழுது அதன் கலவையில் போடும் பொருள்களில் அளவு மாறுபட்டால் அந்தச் சுவருக்குப் பலமில்லை.
1.மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும்
2.சிமெண்ட் அதிகமானால் வெடிக்கும் தன்மையும்
3.நீர் அதிகமானால் அதன் பக்குவ நிலை செயல்படாத நிலையும்
4.மனிதனால் உருவாக்கப்பட்ட சுவருக்கே அதன் கலவை மாறும் பொழுது அது நிற்பதில்லை.

ஆகவே நம் உடலிலுள்ள உணர்வின் எண்ணங்கள் சீராகவும் சமமாகவும் இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும். உடல் நலமாக இருந்தால் அது எண்ணத்தின் “மையக் கோலாகி (வலுவாகி)” ஆத்ம சக்தியைப் பெற முடியும்.

சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் வேதனை பேராசை அதிகமான உடல் இச்சைகள் லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலைகளில் அடிமைப்பட்டு வாழும் பொழுது
1.நாம் எடுக்கும் சுவாசமானது “கடினமாகி…!”
2.நம் உடலில் சேரும் (உணர்வின் எண்ணங்கள்) அமிலத் தன்மை கூடியும் குறைந்தும் விடுகின்றது

அதனால் உடலில் உள்ள சுரப்பிகளில் சுரக்கக்கூடிய அமிலங்களில் வித்தியாசமாகி (உப்புக்கள் சர்க்கரை கொழுப்பு) நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அதனால் பல நோய்களுக்கும் ஆளாகி விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளைச் சமப்படுத்தும் நிலைக்குத்தான் உங்களுக்குச் சரியான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து உடல் உறுப்புகளுக்குள் பாய்ச்சி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து கொண்டே வந்தால் நம்முடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே ஒன்றி வாழும் தகுதி பெறுகின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply