
இரவிலே தூக்கம் கெடுவதன் காரணம் என்ன…?
மனித வாழ்க்கையிலே நீங்கள் தவறு செய்யாமலேயே எத்தனையோ தீமைகள் உங்களுக்குள் வருகின்றது. நீங்கள் சண்டையே போட வேண்டாம்.
எதிர்த்த வீட்டுக்காரர் அவர் எரிச்சலான நிலைகளில் மற்றொருவரிடன் சண்டை போடுவதை உற்றுப் பார்த்தவுடனே சண்டையிடும் உணர்வுகள் உங்கள் நல்ல குணங்களுக்குள் இணைந்து உங்களைச் சோர்வடையச் செய்துவிடுகின்றது.
நல்ல குணங்களுக்குள் எரிச்சலும் வேதனையும் கலந்து விடுகின்றது. இது பகலில் நடக்கின்றது. அப்புறம் இரவிலே என்ன நடக்கின்றது…?
இரவிலே படுக்கும் பொழுது இடுப்பு வலிக்கிறது… மேல் வலிக்கிறது… கண் வலிக்கிறது… என்னென்னவோ செய்கிறது…! இரவில் எனக்குச் சரியான தூக்கமே இல்லை…! என்பார்கள். இதற்குக் காரணம் என்ன…?
நாம் பல பொருள்களைப் போட்டு அடுப்பிலே சமையல் செய்யும் பொழுது அது “தத…புதா…!” என்று கொதிக்கின்றது.
அதைப் போல் நாம் பகலில் பார்த்த அந்த இருவர் சண்டையிட்ட உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுக்குள் இரண்டறக் கலந்து நம் உயிரின் ஓட்டத்திற்குள் கலக்கப்படுகின்றது.
அந்த உணர்வின் வேகங்கள் காரமும் எரிச்சலும் வேதனையும் இந்த மூன்றும் கலந்தவுடனே “போர் முறைகள்…!” ஆகின்றது.
ஏனென்றால் பகலிலே எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் சுழற்சிகள் நாம் ஈர்த்துக் கொண்டது அப்போது மட்டுமல்ல. பகலிலே அதை இழுத்துத் தனது ஆத்மாவாக மாற்றினாலும்
1.புலனடங்கித் தூங்கும் பொழுதும்…
2.அந்த உணர்வின் நிலைகள் அது உடலுக்குள் ஜீவன் பெறும் வரையிலும்
3.அதனின் உணர்வின் இயக்கங்கள் அன்றைய நினைவில் இருக்கும்.
காரம் எரிச்சல் வேதனை என்ற அந்த உணர்வின் துடிப்புகள் முழுமை ஆனபின் அந்த உணர்வின் சத்தாக மாறி நம் நல்ல குணத்துடன் இரண்டறக் கலந்து விடுகிறது.
அவ்வாறு கலந்த பின் காலையில் எழும் பொழுதே உடலெல்லாம் வலிக்கின்றது…! என்ற வேதனையுடன் தான் எழுந்திருப்போம்.
பாலுக்குள் காரத்தை இணைத்து இரண்டறக் கலந்துவிட்டால் எப்படி அதைக் குடிக்கும் பொழுது அந்தச் சுவை எரிச்சலைத் தருகின்றதோ இதைப் போல
1.நாம் சுவாசிக்கும் நிலைகளுக்குள் கலந்து வரும்
2.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு
3.அந்தந்த இயக்கத்தின் சக்தியாக நம்மை இயக்கி விடுகின்றது.
மனிதனுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் சத்துக்கள் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு குணத்திலேயும் இந்த உணர்வுகள் மோதப்பட்டு ஒன்றோடு ஒன்று கலந்து கலந்து நம் உடலுக்குள் (சிவமாக) உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இதைத் தான் நாம் சதாசிவம் என்று சொல்வது.
சந்தர்ப்பத்தில் நாம் நல்ல உணர்வுகளை நுகர்ந்திருந்தால் உடலும் உள்ளமும் மகிழ்ச்சி அடைகின்றது.
ஆனால் தீமையான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால் முதலில் உள்ளத்தால் சோர்வும் எரிச்சலும் அடைகின்றோம். உடலுக்குள் சென்ற பின் உடலிலும் வேதனையாகின்றது.
இதிலிருந்து விடுபடும் நிலையாக அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். அந்தச் சக்தியை உங்களுக்குள் பெறச் செய்வதற்காகத்தான்
1.“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்று சொல்லிச் சுவாசிக்கச் சொல்கிறோம்.
2.“ஓ…ம் என்பது நம் உயிரின் இயக்கச் சக்தி.
3.நம் புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் ஒன்றி “ஈஸ்வரா…!” என்று எண்ணும் பொழுது
4.மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் உற்பத்தி செய்யும் நிலைகள் தான் அது.
யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் செலுத்தி அந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் உருவாக்கச் செய்வதற்குத்தான் அவ்வாறு சொல்வது.
1.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து
2.அதற்குள் பல சரக்குகளைப் போட்டு வேக வைப்பது போல்
3.உங்களுக்குள் அந்த ஞானிகளின் உணர்வுகளைத் தூண்டச் செய்து
4.நீங்கள் சுவாசிக்கும் அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் படைக்கும் நிலையாகச் சேர்ப்பிப்பதற்குத் தான்
5.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொல்லச் சொல்வது.
அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும் பொழுது உங்கள் ஆன்மா தூய்மை அடைகின்றது. உள்ளமும் மகிழ்கின்றது. உடலும் ஆரோக்கியமாகின்றது. மகிழ்ந்து வாழும் சக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.