என் உடலுக்காகத்தான் இத்தனை பாடும் படுகிறேன் என்று சொல்கிறோம் – “உயிருக்காக நாம் என்ன செய்கிறோம்… என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்…!
1.நம் உடலில் எத்தனையோ கௌரவங்களை எதிர்பார்க்கிறோம்.
2.எவ்வளவோ துணி மணிகளைப் போடுகின்றோம்,
3.பலவிதமான பொருளைகளை உபயோகித்து உடலை அழகுபடுத்துகின்றோம்.
எல்லாம் இருந்துவிட்டாலும் யாராவது ஒருவர் நம்மை ஒரு சொல் லேசாகக் குறைத்துச் சொல்லிவிட்டால் “இப்படிச் சொல்லிவிட்டாயே இரு உன்னை நான் பார்க்கிறேன் என்ற நிலைதான் வருகின்றது.
நம்மையறியாமலேயே இந்த நிலையைச் செய்கின்றோம். ஒருவர் சொன்னால் தாங்க முடியவில்லை.
அதே சமயத்தில் இந்த உடலிலிருந்து உயிரான ஈசன் போய்விட்டால் என்ன செய்கிறோம்? அடுத்து அம்மா அப்பா கணவன் மனைவி குழந்தை என்று பார்த்து வீட்டிற்குள்ளேயா வைத்துக் கொள்கிறோம்?
கிடையாது…! தூக்கி ரோட்டில் போட்டு விடுகின்றோம். பின் கட்டைகளைப் போட்டு நெருப்பை வைத்து எரித்து விடுகின்றோம். அல்லது மண்ணைப் போட்டு மூடிவிடுகின்றோம்.
வாழும் காலத்தில் எத்தனையோ பெரிய கௌரவத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் உயிரான ஈசன் போய்விட்டால் இந்த நீசமான உடலுக்கு என்ன வேலை?
ஆகவே நீசமாகப் போகும் இந்த உடலுக்காக நாம் ரோஷப்பட வேண்டியதில்லை. கௌரவத்தை எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை.
நம்மைப் பிறர் குறையாகச் சொல்வதைக் கேட்டு ரோஷப்படுவதற்குப் பதிலாக உயிரான ஈசனை மதித்து அருள் ஒளியைச் சுவாசித்தால் உடலில் விளைந்த ஒளியான உணர்வுகள் உயிராத்மாவுடன் ஒன்றி அவனுடன் சேர்ந்து ஒளியாக அடையலாம்.
உடலுக்காக வாழாமல் உயிருக்காக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.