மகரிஷிகளின் இயக்கச் செயல்கள் – நம் எல்லோருடனும் இணைந்து தான் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்

மகரிஷிகளின் இயக்கச் செயல்கள் – நம் எல்லோருடனும் இணைந்து தான் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்

 

ஞானகுரு அவர்கள் தன் மனைவி உடல் நலம் இன்றோ நாளையோ என மருத்துவர்களால் கைவிடப்பட்ட அந்த நேரத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவரைக் குணப்படுத்தினார்.

 

அதன் பின் என்னை நம்புகிறாயா நான் சொல்வதைச் செய்வதிலிருந்து மாற மாட்டாய் அல்லவா என்று வாக்கு வாங்கினார் குருநாதர் என்று சாமிகள் சொல்லியிருக்கிறார்.

 

அது வரை பைத்தியமாகத் தெரிந்த குருநாதரை அதற்கப்புறம் அவர் பைத்தியமல்ல ஒரு பெரிய மகான் என்று தெரிந்தது என்றும் சொல்லியிருக்கின்றார்.

 

அதே சமயத்தில் குருநாதர் தன்னை அறியாமலே சிறு வயதில் நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்லுகிறார் என்றும் சொல்லியிருக்கிறார்.

 

1947ல் ஞானகுரு தன் வயல் வெளியில் நடந்து சென்ற பொழுது மண்ணுளிப் பாம்பு கடித்தத அந்த நேரத்தில் குருநாதர் வந்து பச்சிலை கொடுத்துத் தன்னைக் காத்ததாகவும் சொல்கிறார்.

 

அப்பொழுது அவரை நான் நம்பவில்லை. யார் என்றே தெரியாது. கட்டாயப்படுத்தி அந்த மருந்தைக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்.

 

இது போக ஞானகுரு தன் தாயின் கருவிலிருக்கும் போது தாய் தான் குடும்பத்தில் ஏற்பட்ட பல வேதனைகளிலிருந்து விடுபட ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்று வணங்கும் பொழுது முன்னோர்களையும் மகரிஷிகளையும் எண்ணி ஏங்கினார் என்று சொல்கிறார்.

 

அந்தச் சமயத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கருவிலிருந்த குழந்தைக்கு (சாமிகளுக்கு) ஆசீர்வதித்தாகவும் நான் உனக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தால் தான் தக்க சமயத்தில் உன்னைத் தேடி வந்தேன் என்று குருநாதர் பின்னாட்களில் என்னிடம் சொன்னார் என்றும் சொல்கிறார் சாமிகள்.

 

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பின்னாட்களில் சொன்னதால் தான் எனக்குத் தெரிந்தது என்று சாமிகள் உபதேச வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

 

எந்த மகரிஷியாக இருந்தாலும் சரி ஞானியாக இருந்தாலும் சரி தொடர்பு இல்லாதவர்கள் யாரும் இல்லை.

 

நாம் பேரை வேண்டுமானால் மாற்றி மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம். வியாழன் கோளிலிருந்தே நான் உங்கள் அனைவருடன் தொடர்பு கொண்டவன் என்று மிக மிகத் தெளிவாக நம் சாமிகளும் சொல்லியிருக்கின்றார்.

 

இதே உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே ஆதிமுதலாமவனே

முக்கடலை ஆட்டுவிக்கும் மூலவனே ஆதிமுதலாமவனே

முக்கனியின் சுவையை எனக்கருள்வாய் மூலவனே ஆதிமுதலாமவனே

முடிவில்லா உலகில் கலந்திருப்பாய் மூலவனே ஆதிமுதலாமவனே

மூச்சின் மூச்சாய் இருந்திடுவாய் மூலவனே ஆதிமுதலாமவனே

மூம்மூர்த்தியானவனே முருகா என்பவனும் நீயே

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே ஆதிமுதலாமவனே

 

பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண் சென்ற குருநாதரின் ஒளியான அணுக்கள் வெளிப்பட்டதைச் சுவாசித்து தனக்குள் வளர்த்துக் கொண்ட எண்ணிலடங்காத உயிராத்மாக்கள் என்று சப்தரிஷிகளாக சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் ஈஸ்வரபட்டராகக் கர்நாடகா ஈஸ்வரமங்கலத்தில் தோன்றி தன்னை ஆட்கொண்டார் என்றும் சொல்லியிருக்கின்றார்.

 

1.தான் எடுக்காத உடல் இல்லை

2.இயக்காத சரீரம் இல்லை

3.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனிதர்களை மெய்ஞானிகளாக உருவாக்க நான் வந்து கொண்டே தான் இருப்பேன்.

4.என்னுடைய பேராசை அது என்று ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.

 

ஈஸ்வரப்பட்டராக இருந்த நான் ஞான குரு மூலம் சில செயல்களைச் செய்து கொண்டுள்ளேன் என்று அவரும் சொல்யிருக்கின்றார். (சாமிகள் உடலுடன் இருக்கும்போது)

 

இந்த உலகில் மனித இனம் கல்கியாக மாறும் போதும் அப்பொழுதும் நான் தான் (ஈஸ்வராய குருதேவர்) வருவேன் என்றும் சொல்லியிருக்கின்றார்.

 

அகஸ்தியர் வியாசகர் வான்மீகி போகர் காளிங்கநாதர் கோலமாமகரிஷி அத்திரி பிருகு கொங்கணவர் இப்படிப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு போனாலும் மூலவன் ஆதிமுதலானவன் ஈஸ்வராய குருதேவர்.

 

நமக்குப் பிரியமிருந்தால் தனிப்பட்ட மகரிஷியின் பேரையும் முன் மொழியலாம். அல்லது அவர் தான் இவர் என்று அவரை இணைத்துக் கொள்ளலாம்.

 

தனித்த சக்தி என்று எங்கும் எதுவும் இல்லை. தனித்த சக்திக்கு இயக்கமும் இல்லை.

 

ஈஸ்வராய குருதேவருக்கு நாம் தேவை. நமக்கு ஈஸ்வராய குருதேவர் தேவை.

 

(அல்லது)

 

மகரிஷிகளுக்கு நாம் தேவை நமக்கு மகரிஷிகள் தேவை.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply