என்னைக் கேவலமாகப் பேசுகிறார்கள் குறையாகப் பேசுகிறார்கள் குற்றமாகச் சொல்கிறார்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று எண்ணுகிறோம் – ஆனால் “உடலைத்தான்” அவ்வாறு சொல்கிறார்கள்

Soul lights

என்னைக் கேவலமாகப் பேசுகிறார்கள் குறையாகப் பேசுகிறார்கள் குற்றமாகச் சொல்கிறார்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று எண்ணுகிறோம் – ஆனால் “உடலைத்தான்” அவ்வாறு சொல்கிறார்கள்

 

இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.

 

ஆனால் கோபமோ ஆத்திரமோ வந்து

1.என்னை அவர்கள் இப்படிப் பேசினார்கள்

2.இவர்கள் குறையாகப் பேசினார்கள்

3.கேவலமாகப் பேசினார்கள் அவமதித்துப் பேசினார்கள் என்கிற

4.இந்த உணர்வுகளைத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

 

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிறபோது இந்த உடலைத்தானே அப்படிப் பேசுகின்றார்கள்.

 

இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே போய்விட்டால் இதை யாராவது மதிக்கின்றார்களா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உடலை யாரும் மதிப்பதில்லை.

 

எவ்வளவு அழகான உடலாக இருந்தாலும் திடீரென்று ஒரு ஹார்ட் அட்டாக்கோ மற்ற ஏதோ வந்தால் எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…? என்னென்னவோ செய்து முட்டி மோதுகிறோம்…!

 

இருந்தாலும் இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா போய்விட்டது என்றால் இந்தச் சரீரத்தை யார் மதிக்கின்றார்கள்?

 

கூடக் கொஞ்சம் நேரம் வைத்திருக்கலாம் என்றால் “இல்லை… நாற்றமாகிவிட்டது… சீக்கிரம் கொண்டு போக வேண்டும்…” என்று தான் சொல்கின்றோம்.

 

ஏனென்றால் வைத்திருக்கலாம் என்றால் அதற்குள் உடல் அழுகிப் போய்விடும் வீடே நாற்றமாகிக் கெட்டுப் போய்விடும் “கொண்டு போய்ச் சேருங்கள்…” என்று தான் சொல்கின்றோம்.

 

ஆக இவை அனைத்திற்கும் எங்கே இருக்கின்றது?

 

உயிர் தான் மூலமாக இருக்கின்றது. அந்த உயிர் இருக்கும் வரை தான் “இந்த மரியாதை”.

 

ஆனால் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வை இந்த உயிருடன் ஒன்றிச் சேர்த்துவிட்டால்

1.இந்த உடல் என்ற மரியாதை போய்

2.உயிர் என்ற நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய

3.அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் “அந்த மரியாதை” நமக்குள் வந்துவிடும்.

 

இதை நாம் பழகிக் கொண்டால் இந்த உடலின் தன்மையைப் பற்றி அதிகமாக நாம் நினைக்க வேண்டியது இல்லை. நினைப்பு வராது.

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குத் துடுப்பாகக் கொடுக்கின்றோம். அதை வைத்து இந்த வாழ்க்கையின் கடைசி எல்லையான

1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் சென்றடைய முடியும்.

2.அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றி வாழ வேண்டும்.

 

இவ்வாறு தீமைகள் அகற்றும் நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெற்றால் இது தான் “நரசிம்மா”.

 

ஒவ்வொரு நிலைகளிலும் தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் வளரும் பொழுது என்றுமே அது தீமைகளை நாடாது நம்மைப் பாதுகாக்கின்றது.

 

அதனின் தன்மை கொண்டு நாம் “ஒளியாக…” மாறுகின்றோம். அவ்வளவு தான்.

Leave a Reply