
எதிரிகள் அழிய வேண்டும்… நாசமாகப் போக வேண்டும்… என்று தெய்வத்திடம் வேண்டலாமா…?
அடிக்கடி இடைஞ்சல் செய்கிறார்கள். அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் நாசமாகப் போக வேண்டும், உங்கள் குடும்பம் மண்ணில் போகும் என்ற இந்த நிலைக்கு எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.
இந்த உணர்வுகளை அவர்கள் எடுக்கப்படும் போது இதே உணர்வு அவர் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் பெருக்கப்படுகின்றது.
இவ்வாறு எடுத்த உணர்வையே உயிர் உடலாக உருவாக்கி அவர்களுக்கேதான் அது பாதகமாக்கும்.
ஏனென்றால் ஒரு வித்தினை உருவாக்கினால் மீண்டும் அதை நிலத்தில் ஊன்றும்போது அதனின் வித்துக்களாக விளையத் தொடங்குகின்றது.
கெடுதல் செய்தவர் “நாசமாகப்போக வேண்டும்…” என்ற உணர்வினை முதலில் இவர்கள் எண்ணுகின்றனர்.
அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இவருக்குள் உருவாகின்றது. அதைக் கெடுதல் செய்தவரிடம் சொல்லாகச் சொல்லப்படும் போது இங்கே விளைந்த சொல்கள்
1.அந்த ஆகாத எதிரியின் செவிகளில் படுகிறது.
2.அந்த உணர்ச்சிகள் கண் வழி கவருகின்றது.
ஆகா… என்னை இவ்வாறு சொல்லத் தொடங்கிவிட்டாயா…? என்று எதிர் பதிலாக இரண்டு பேருமே இந்த உணர்வுகளைப் பேசுகின்றனர்.
இப்படிப் பேசும் உணர்வுகள் என்ன செய்கின்றது?
இருவரையுமே அது கொல்லுகின்றதே தவிர அவர்களுக்குள் நல்ல குணங்களை எண்ணுவதற்கு வழியில்லை. இருவரிடத்திலும் உள்ள நல்ல குணங்கள் அனைத்தும் மடிகின்றது.
மனிதனுக்கு மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறியாது ஆலயங்களுக்குச் சென்று
1.என் எதிரி வீழ வேண்டும்
2.என் வாழ்க்கை நல்லதாக அமைய வேண்டும் என்று
3.தவறான வழியில் வரம் கேட்கின்றார்கள்.
இப்படிச் சந்தர்ப்பத்தால் மோதிய உணர்வுகள் அந்த வெறுப்பின் அலைகளுக்குத்தான் செல்லச் செய்கின்றது என்று குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
கருப்பணச்சாமி – இதைப் போலக் கொடூர தெய்வங்களைக் காட்டும் போது ஆடையோ கோழியோ பலி கொடுக்கின்றோம் என்று வேண்டுகிறார்கள்.
ஆக சிந்திக்கும் தன்மை இழந்தால் அப்பொழுது அதற்குத் தக்க பிறிதொன்றைக் கொல்லும் உணர்ச்சிகளைத் தான் நமக்குள் ஊட்டுகின்றது.
நல்ல சிந்திக்கும் தன்மையை நமக்குள் மாற்றும் அத்தகைய நிலைகளில் இருந்து மீள்வதற்குத்தான் கருப்பணச்சாமி போன்ற உருவங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.
நம்மை மறைக்கும் தீமைகளிலிருந்து மீள…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா பெற வேண்டும்.
4.எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
5.எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
6.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்…?
கருப்பணச்சாமியை எண்ணி
1.என் எதிரி வீழ்ந்தால் என் தொழில் விருத்தியானால்
2.உனக்கு ஆட்டைக் கொடுக்கிறேன் பலி கொடுக்கிறேன் என்ற உணர்வுகளில் தான்
3.நாம் பக்தியில் செல்லுகின்றோம்.
நமக்குள் தீமை வருகிறது என்று அறியவில்லை.
நாம் வேதனைப்படும் உணர்வினை நுகர்ந்தால் வேதனைப்படுவோர் உணர்வினை நுகர்ந்தால் பாசத்துடன் இருக்கும்போது குழந்தைக்கு நோய் என்று உணர்வானால் நாம் சிந்திக்கும் தன்மை இழந்துவிடுகின்றோம்.
அவனைப் பாதுகாப்பதற்கு மாறாக அவசரத்தில் இந்த வைத்தியரிடம் போவோமா அந்த வைத்தியரிடம் போவோமா என்று அதில் முழுமை பெறாதபடி இந்த “ஆவேச உணர்வுகள் தான்” வருகின்றது.
தீமையின் உணர்வை நமக்குள் வளர்த்து அந்த ஆவேசத்தால் காக்கும் உணர்வை இழந்து அவனையும் காக்க முடியாது. கடைசியில் அவனால் எடுத்துக் கொண்ட வேதனைகள் கடும் நோயாகவும் மாறுகின்றது.
சாதாரணமாக மனிதனானவன் தீமையை அதிகமாக அவன் செயல் படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான். ஆனால்
1.நன்மை செய்ய முற்பட்டாலும்
2.பிறருடைய துயரப்படுத்தும் நிலையோ வேதனைப்படுத்தும் உணர்வோ அவன் நுகர்ந்து விட்டால்
3.அவன் நல்ல குணங்களை மறைத்து செயலற்றவனாக மாறி
4.இவனும் தீயவனாகதான் மாறுகின்றான்.
ஒருவர் நம்மை அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொண்டால் அவன் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடுகின்றோம்.
அப்படி ஓடினாலும் ஒரு சமயம்… “ஏன் இப்படி…?” என்று திரும்பினால் அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறுகின்றோம். இப்படித் தான் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு அறியாத நிலைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்க “மெய் ஞானிகளின் உணர்வினை நீ பதிவு செய்…” என்றார் குருநாதர்.
ஒவ்வொரு உயிரும் கடவுள். உயிரால் உருவாக்கப்பட்ட அந்த உடல் ஆலயம். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து அதைப் பாதுகாக்கும் உணர்வுடன் நீ செயல்பட வேண்டும் என்றார்.
தீமைகளை நீ பார்க்க நேர்ந்தால் கேட்க நேர்ந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று நீ எடுத்துக் கொள்.
அவர்கள் நலம் பெற வேண்டும் என்றும் அந்த ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரி்சுத்தம் ஆக வேண்டும் என்றும் நீ அந்த உயிரைக் கடவுளாக மதி. அவர் உடலை நீ கோயிலாக மதி. மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் அங்கே வளர வேண்டும் என்று நீ எண்ணு.
அதன் வழி நீ செயல்படவேண்டும், அதற்கேதான் துருவ நட்சத்திரத்துடன் உன்னை ஆயுள் கால மெம்பராக இணைக்கிறேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
1.நான் அதிலே இணைந்தேன்.
2.நான் அங்கே செல்கின்றேன்.
3.நான் சென்ற பின்பும் இதன் உணர்வை நீ தொடர்பு கொண்டால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நீ பெற முடியும்.
5.அதை நீ எளிதில் பெற்று அனைவருக்கும் கொடுக்க முடியும்.
6.இருளிலிருந்து அனைவரையும் மீட்க முடியும் என்று உணர்த்தினார் குருநாதர்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.