தீமை வரும் நேரத்தில் அதை உடனுக்குடன் மாற்றியமைக்கும் “ஆயுதம் (சக்தி)” கொடுக்கின்றோம்

தீமையை நீக்கும் ஆயுதம்

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்.., நாம் வேடிக்கை பார்க்கின்றோம். அதைப் பார்த்தவுடன் நமக்கும் கோபம் வருகின்றது.

ஒருவன் வலுவான நிலைகளில் அடிக்கின்றான். அடி வாங்கியவன் “ஐய்யய்யோ..,” என்று அலறிக் கொண்டு செல்கிறான். “இருடா.., நான் உன்னைப் பார்க்கின்றான்..,” என்று கோபமாகத் தாக்குகின்றான்.

“இரண்டையும் பார்த்தவுடன்..,” சும்மா போகின்றவனை இப்படி அடிக்கின்றானே என்று நம்மையறியாமலே அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

அடிபடுபவனைப் பார்த்தவுடன் பாசம் வருகின்றது. அடிப்பவனைப் பார்த்தவுடன் கடுமையாகின்றது.

இந்த இரண்டையும் சேர்த்து அவன் மேல் குறி வைத்து ஓடுபவனை நாம் பார்க்கப்படும் பொழுது துணிந்து போய்.., “சும்மா போகிறவனை ஏனப்பா அடிக்கின்றாய்..?” என்று கேட்போம்.

ஆனால், அதே சமயத்தில் அடிப்பவன் முரட்டு ஆளாகத் தெரிந்தால்.., “கேட்டால்.., நம்மையும் உதைத்துவிடுவான்” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது பயமான உணர்வுகளும் வரும்.

இப்படி இரண்டு நிலையும் வரும்.

ஆனால், பய உணர்வு வந்துவிட்டால் என்ன ஆகும்? அடுத்தாற்போல் யாராவது கோபமாகப் பேசினால் “கிடு.., கிடு.., என்று நடுக்கமாகும்.

ஆக, ஏன் பேசுகிறார்கள் எதற்காகப் பேசுகின்றார்கள் என்ற உணர்வு வராது. பய உணர்வுகள் வந்த பின்.., ஒரு பொருளே கீழே விழுந்துவிட்டால் அந்தச் சப்தத்தால் “அதிர்வின் தன்மை ஆகி..,” நம்முடைய சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடும்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் பிறிதொரு உணர்வின் இயக்கங்களாக (இன்னொரு உடலில் ஏற்கனவே விளைந்த உணர்வுகள்) “சிவ தனுசாக” நம்மைத் தாக்குகின்றது.

அதை நாம் மாற்ற வேண்டுமல்லவா..,?

அதற்குத்தான் சக்திவாய்ந்த நிலையை நமது குருநாதர் எமக்குக் கொடுத்ததை உங்களிடம் உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

எப்படித் தீமைகள் வருகின்றது என்ற நிலைகளை குருநாதர் உணரச் செய்து.., ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை மாற்றியமைக்கும் சக்தியைக் கொடுத்தார்.

அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள்ளும் பதியச் செய்து உங்களை எல்லாம் “ஆயுள் கால மெம்பராக.., அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே இருக்கின்றேன்”.

ஆக, நீங்கள் எதிலே அதில் மெம்பராகச் சேர்கின்றீர்களோ அதன் வழி கொண்டு பிறவியில்லா நிலை அடைய முடியும். இது.., “விஷ்ணு தனுசு”.

எப்படிப் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த உயிர் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்ற மனிதனாக நம்மை உருவாக்கியதோ மனிதனான பின் நம் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.

உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை “அந்த ஆயுதத்தை” அடிக்கடி நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

சண்டை போடுபவர்களை பார்த்தவுடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா.., அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் பார்த்த சண்டை போடுபவரின் உணர்வை கண்ணின் கருவிழி இங்கே பதிவாக்குகின்றது. அடுத்து அதே கண்ணின் நினைவை நாம் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு செல்லும் பொழுது அதை அடக்கி “இது மேலே வந்துவிடுகின்றது”.

வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம். “அடடா.., இப்படி ஆகிவிட்டதே..,” என்று “வேகமாக” அந்தப் பாசம் இயக்குகின்றது.

அடுத்த கணம் “ஈஸ்வரா..,” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று இந்த நினைவினைக் கூட்டி “அந்த வேகத்தின் தன்மையைத் தணித்து” தீமையை நீக்கிடும் வீரியத்தின் தன்மையைக் கொண்டு வருதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று நுகரும்பொழுது அந்த வேதனைப்படும் உணர்வுகள் உடலுக்குள் பரவுவதற்கு முன் இதை மாற்றிவிடுகின்றோம்.

அந்த நோயாளி உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படரவேண்டும், அவர் உடல் நலம் பெறவேண்டும் அவர் மகிழ்ச்சிக்குரிய நிலைகளாகப் பெறவேண்டும் என்று இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

சண்டை போடுபவர்களைப் பார்த்தபின் நமக்குள் வெறுப்பின் உணர்வுகள் வரும்.

அந்த வெறுப்பின் உணர்வுகள் வந்தபின் நாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் பொழுது சிறிது தடைபட்டால் போதும். என்ன செய்வோம்?

உடனே அந்தப் பொருளைத் “தூக்கியெறி..,” என்ற இந்த உணர்வு தான் வரும்.

அதே மாதிரி வெறுப்பான உணர்வுகள் வரும் பொழுது வீட்டில் மனைவி சாப்பாடு எடுத்து வரச் சிறிது நேரமானால்..,போதும். நீ எப்பொழுது பார்த்தாலும் “இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றாய்..,” என்ற நிலையில் வெறுத்துப் பேசும் நிலை வந்துவிடும்.

பொறுமை என்ற நிலையை மாற்றி அதை இழக்கச் செய்துவிடும். இதையெல்லாம் மாற்றவேண்டும் அல்லவா..,?

“பத்தாவது நிலை.., கல்கி” என்ற ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் முழுமையாகப் பெற்று இந்த இருண்ட உலகிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும்.

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து நம்மைக் காத்து அனைவரும் நலம் பெறவேண்டும் என்பதற்காக “விஷ்ணு தனுசு” என்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

Leave a Reply