இறந்தவர்களுக்குப் பிண்டம் செய்து வைத்து அமாவாசை நாள் அன்று அழைக்காதீர்கள்…!

அழியா ஒளிசரீரம்

இறந்தவர்களுக்குப் பிண்டம் செய்து வைத்து அமாவாசை நாள் அன்று அழைக்காதீர்கள்…!

நம் முன்னோர்கள் (குலதெய்வங்கள்) குடும்பத்தில் எத்தனையோ இன்னல்களைத் தாங்கி நம்மை வளர்த்திட வாழ்ந்திட அவர்கள் எத்தனையோ வேதனைகள் பட்டுள்ளார்கள்.

அந்த வேதனையான உணர்வுகள் அவர்களுக்குள் உடலில் நோயாகி உடலை விட்டு வந்த பின் மீண்டும் புழுவிலிருந்து மனிதனாக வந்து கீழ் இறங்கி (மறு பிறவியில்) வேறொரு சரீரங்களைப் பெறுகின்றனர்.

1.அவர்கள் இன்னோரு உடல் பெறாத வண்ணம்
2.நாம் அனைவரும் கூட்டுத் தியானம் செய்து
3.முன்னோர்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளி விண்ணிலே செலுத்தி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் அங்கே உடல் பெறும் உணர்வுகள் அழிந்து ஒளி பெறும் உணர்வுகள் உயிருடன் ஒன்றி மகரிஷிகள் உமிழ்த்தும் ஒளியான உணர்வை உணவாக எடுத்து ஒளியாக அங்கே வாழத் தொடங்குகின்றனர்.

அவர்கள் முன் சென்றால் பின் அதே வலுக்கொண்டு நாமும் அங்கே அழியாச் சரீரமாக விண் செல்லலாம்.

ஆனால் அமாவாசை அன்று இப்பொழுது வழக்கப்படி சாங்கியங்கள் செய்து மந்திரங்களைச் சொல்லி பெரியவர்களுக்கு வைத்துப் படைத்து நாம் இழுத்தோம் என்றால் அவர்களைப் பூமிக்குள் இழுப்பதாகத்தான் அர்த்தம்.  அதே போல்
1.இறந்தவர்கள் கனவில் வந்து விட்டார்கள் என்றால்
2“நாமும் சீக்கிரம் போய்விடுவோம்…” போலத் தெரிகின்றது என்று
3.இப்படிப் பேசுவோரும் உண்டு.

இவைகளை எல்லாம் மறந்து மெய்ஞானியின் அருள் வழியில் நாம் சென்று நம்முடைய மூதாதயர்களை அங்கே பிறவா நிலை என்ற நிலை அடையச் செய்ய வேண்டும்.

இங்கே கேட்டுணர்ந்தோர் இனிமேல் அமாவாசை நாள் கொண்டாடும் போது அங்கு பிண்டம் வைத்து உணவு வைத்து உங்கம் முன்னோர்களை அழைக்காதீர்கள்.

அதற்குப் பதில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் செருகேற்றி முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தோடு இணையச் செய்யுங்கள்.

1.ஒரு உயிரான்மா உடலை விட்டு வெளியே சென்றால்
2.யார் மேல் பற்று இருக்கின்றதோ
3.48 நாட்களுக்குள் அந்த உடலின் ஈர்ப்பு வட்டத்திலே செல்லும்.
4.உணர்வின் தன்மை சிறுகச் சிறுக சேர்ந்து அந்த உடலுக்குள் செல்லும்.

ஆகவே அதற்கு முன் நாம் விண் செலுத்து தல் அவசியம். தற்சமயத்தில் இறந்தவர்களை அந்த 48 நாட்களுக்குள் சுலபமாக விண் செலுத்த முடியும்.

இதற்கு முன் அறியாத நிலைகள் இருந்து மூதாதையர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால் அவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இருளுக்குள் தான் அமிழ்ந்துள்ளார்கள்.

அவர்கள் உணர்வுகள் தான் நம் உடலாக உருவாகியுள்ளோம். அவர்கள் எண்ணங்கள் நமக்குள் ஆழப் பதிந்து இருக்கும் நிலை கொண்டு நாம் அடிக்கடி “அவர்கள் விண் செல்ல வேண்டும்…” என்று உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இன்னொரு உடலை விட்டு எப்பொழுது வெளியே வந்தாலும் இதைப் போல நாம் சொல்லிக் கொண்டிருந்தால் இன்னொரு பிறவிக்குப் போகாதவாறு நம் முன்னோர்களை விண் உலகம் சேர்த்து  ஒளியின் சரீரம் பெறச் செய்ய முடியும்.

கடந்த காலத்தில் நாம் இந்த முறைப்படி செய்யவில்லை. அந்த உயிரான்மாக்கள் மாறிய நிலையில் இருந்து இப்பொழுதாவது நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செய்வோம்.

இதற்காக வேண்டித்தான் பௌர்ணமி தியானத்தையே அமைத்துள்ளோம். 48 நாளுக்குள் உங்கள் வீட்டில் குடும்ப சகிதமாக கூட்டு தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களை விண் செலுத்துங்கள்.

அவர்கள் 100 வருடத்திற்குள் உடலை விட்டுப் பிரிந்திருந்தார்கள் என்றால் அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்த முடியும்.

100ஐக் கடந்து விட்டால் இன்னொரு உடலுக்குள் சென்று விடுவார்கள். உணர்வின் தன்மை கொண்டு மாறுபட்ட நிலைகள் மற்ற உடலுக்குள் புகுந்து உடல் பெறும் நிலையைப் பெற்று விடுவார்கள்.

இதைப் போன்ற நிலைகள் இல்லாது பௌர்ணமி நாளன்று நம் மூதாதையர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும்.
1.அவர்கள் முதலில் விண் சென்றால் பின் நாம் அங்கே செல்கின்றோம்.
2.அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை பெறுகின்றோம்.

நம் மூதாதையர்கள் முதலில் மனிதர்கள் ஆனார்கள். அவர்கள் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள்.

ஒரு மரம் கெடாது இருப்பதற்கு அதனின் விழுதுகள் மிகவும் முக்கியம். மூதாதையர்களின் விழுதுகளாகத்தான் நாம் இருக்கின்றோம்.

நம் முன்னோர்கள் உடலை விட்டு பிரிந்து சென்றாலும் விழுதாக இருக்கும் நாம் அருள் ஞானிகள் காட்டிய உணர்வை சத்தாக நாம் எடுத்து ஞானிகளின் உணர்வின் துணை கொண்டு விண் செலுத்துதல் நம் தலையாயக் கடமையாகும்.

பின் நாமும் அவர்கள் சென்றடைந்த சப்தரிஷி மண்டல வட்டத்தில் இணைந்திட முடியும். அதைச் செய்வதற்கே குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் இதை செய்கின்றோம்.

இது தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய “விண் செல்லும் மார்க்கம்.”


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply