எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

 

1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
2.என் பையன் ஞானியாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
3.என் குழந்தைகள் உடல் நலமாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
4.என் தொழில் வளமாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று
5.இதைத் தான் நீங்கள் என்னிடம் வாக்காகக் கேட்டுப் பெற வேண்டும்…. கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

ஆனால் இப்படிக் கேட்பதற்குப் பதில் கஷ்டம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் முதலில் இருளாகிவிடும். அப்போது நான் சொல்லும் உயர்ந்த வாக்குகள் உங்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.

இதை எதிர்த்துத் தள்ளி விடுகின்றது. கஷ்டம் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நல்ல வாக்குகளை அது உள்ளே விடுவதில்லை. ஏனென்றால் அது வாலியாக மாறி விடுகின்றது.
1.உங்கள் எண்ணமே நல்லதைப் பெற முடியாதபடி தடுக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.
2.இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு நல்லதை வேண்டிக் கேட்டுப் பெறும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வீக குணம் பெற வேண்டும் கொவிலுக்கு வரும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். கோயிலை அவமதிக்காதீர்கள்.

நம்மைத் திரிந்து வாழச் செய்யும் நிலையில் நமக்குள் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும் பகைமையிலிருந்து மாறவும் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் தான் கோவில் என்ற நிலையில் அதை மதித்து நடங்கள்.

ஆகவே நான் சொல்வதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.உங்களுடைய நினைவு கொண்டு தான் மீண்டும் அதை எண்ணி எடுக்க வேண்டும்.

திட்டியவனை நினைத்தவுடன் அவனுடைய உணர்வுகள் உடனடியாக உங்களுக்கு வருகிறது அல்லவா. கோபம் வருகிறது காரியமெல்லாம் கெடுகிறது… அங்கேயும் புரையோடுகிறது காரியங்கள் கெடுகிறது.

பிள்ளை மீது பாசமாக இருந்து என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்ற துன்பப்பட்டால் அந்த வேதனையால் உங்கள் செயல்கள் தடுமாற்றம் ஆகின்றது.

நீங்கள் அந்த வேதனையுடன் சமையல் செய்தீர்கள் என்றால் சூடாக இருக்கும் பாத்திரம் பொங்கி வரும் போது சரியான முறையில் ஆதைக் கையாளாதபடி உடுத்தியிருக்கும் துணியில் தீ கூடப் பிடித்து விடும்.

காரணம்…
1.சிந்தனை இல்லாத உணர்வு கொண்டு அவசரப்பட்டு இயக்கப்படும் பொழுது நமக்கே அது தீங்கு விளைவிக்கும் சக்தியாக வந்து விடுகிறது.
2.ஏனென்றால் வேதனை என்பது விஷம்… சிந்திக்கும் தன்மையை அது இழக்கச் செய்து விடும்.

ஆகவே அடுத்தடுத்து அடுத்தடுத்து “கஷ்டம் என்ற நிலையினை உள்ளே விடாதபடி” மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நான் பார்ப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் எங்களுக்குள் அருள் ஞானம் வளர வேண்டும்… என்று அதிகாலையில் இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள்.

பகைமைகள் அகலும்… மனம் ஒன்றாகும். இருளைப் போக்கும் அருளைப் பெருக்கும். பேரருள் பேரொளியாக வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகைய ஆனந்தத்தை நீங்கள் பெறுங்கள்.

நான் பதிவு செய்த நிலைகள் கொண்டு எண்ணி எடுத்துப் பாருங்கள்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் எப்படிக் கரைகின்றதோ அதைப் போல் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்த்தால் அது உங்கள் கவலையையும் வேதனைகளையும் கரைத்து உங்களைச் சிந்திக்கச் செய்து ஆற்றல் மிக்க வலிமையைக் கொடுக்கும்.

அந்த வலிமை பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு கோவில்
2.அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் வெளிப்படுத்துகின்றேன்.
3.அதே ஆசையுடன் நீங்கள் அருள் சக்திகளை நுகர்ந்தால் அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.
4.சிந்திக்கும் தன்மை வருகின்றது… அருளைப் பெருக்க முடிகின்றது… அருள் வாழ்க்கை வாழ முடிகின்றது…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply