மெய் உலகை உருவாக்குவோம்

மெய் உலகை உருவாக்குவோம்

 

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள்… நேரமாகிவிட்டது வீட்டுக்குச் செல்ல வேண்டும்… தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று சிலருடைய எண்ணங்கள் இருந்தால்… உங்கள் எண்ணங்களைப் பல நிலை கொண்டு அலைய விட்டால்… இந்த அருள் உணர்வுகளைப் பெறுவது கடினமாகி விடுகின்றது.

ஆலயங்களுக்குச் செல்கிறோம் என்றால் மலர் பூஜை விளக்கு பூஜை என்று எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள். அதைச் செய்ய நாள் கணக்கில் மணிக்கணக்கில் கூட உட்கார்ந்து இருக்கின்றோம்.

யாகங்கள் வேள்விகளைச் செய்தால் அங்கேயும் அமர்ந்து… தான் எந்த ஆசையில் போனோமோ “அவன் அதைக் கொடுப்பான்” என்று ஆர்வத்தில் உட்கார்ந்து இருக்கின்றோம்.

ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் தெய்வத்தையே பழித்திடும் நிலைகள் வருகின்றது. ஆக ஆசைக்கொப்பத் தான் நாம் அங்கெல்லாம் செல்கின்றோம்.

அவ்வாறு இல்லாதபடி
1.நமது ஆசை அனைவரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும் என்றும்
3.என் பார்வை சொல் செயல் எல்லாம் அனைவரும் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று
4.உயிரான நெருப்பில் இந்த உணர்வின் அலைகளைப் பரப்பினால்
5.உண்மையான யாகம்… உயிரின் நிலைகள் கொண்டு அவ்வாறு உருவாக்கும் சக்திகள் தான்.

அதாவது எண்ணத்தின் உணர்வு கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்ச்சிகளைப் பரப்புவதும்… அந்த உணர்வின் அணுக்களாக மாற்றுவதும்… சொல்லின் உணர்வுகள் அனைவருக்கும் பரவச் செய்து…
1.கண்ணின் நினைவாற்றல் கொண்டு யாரை எண்ணுகின்றோமோ அந்தச் சொல்லின் ஆற்றல் அங்கே ஊடுருவி
2.அவர்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் ஒன்றி வாழ வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் போது
3.நம் எண்ணத்தின் உணர்வுகள் கண்ணின் நினைவு கொண்டு அவர்கள் மேல் பாய்ச்சப்படுகின்றது.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “அவருடைய தீமை நமக்குள் வராதபடி தடுக்க இது உதவும்…”

ஆகவே ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம். உலக மக்கள் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம். நமது பார்வையும் சொல்லும் செயலும் புனிதம் பெறுவோம். அனைவரையும் புனிதமாக்கும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

உலக மக்கள் நலம் பெறத் தியானிப்போம். விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழும் அனைவரும் அந்த அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய்ஞான வாழ்க்கை பெற வேண்டும் என்று தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் இந்த மனித வாழ்க்கையிலேயே ஒளி என்ற உணர்வை உருவாக்கும் பிறவி இல்லாத நிலை என்ற நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று தியானிப்போம்.

1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்றும்
2.அவரவர்கள் குடும்பத்தில் பற்றுடன் வாழ வேண்டும் என்றும்
3.எதிர்காலக் குழந்தைகள் மெய்ஞானத்தை வளர்க்க வேண்டும்… மெய் உலகை உருவாக்க வேண்டும் என்றும்
4.எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply