
ஒவ்வொரு உயிரணுவும் “அது எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே”
எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.ஏன்…! எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்றுச் செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத்தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே செயலும் அவனே…! எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.“அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…?” என்ற எண்ணமும் நமக்குள்ளே.
அனைத்துமே பரம்பொருள்தான். அப்பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…?
1.அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.
2.வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.
எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப்பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?
பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கிறான். அப்பரம்பொருளின் சக்தியில் சக்தி பெற்று வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள் அப்பரம்பொருளிடமே ஐக்கியப்பட்டு அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.
உயிரணுவாய் உதித்துப் பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்து உயிர் ஜீவிதம் பெற்று… இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலை பெற்று…
1.ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் “ஏழு சந்தர்ப்பங்களில்தான்”
2.அவ்ஆத்மாவினால் நற் சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித் தொடரை அடைய முடியும்.
உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித் தொடர் கொள்ளும் அமில சக்தியை இவ் ஏழு தொடரில் ஞானத்தொடர் வழியை அறிந்து… அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால்… அந்நிலையில் சித்துநிலை பெற்று…
1.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு…
2.ஒவ்வோர் உயிர் ஆத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
3.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
4.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.
இவ்வுலகில் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம்பொருளினால் படர விட்டவைதான்.
கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம் தான். ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்.
அப்பரம்பொருளான அவ் ஆதிசக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் “அவையவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டுதான்” அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும் செயல்முறையும் வந்திடும்.
விருந்தில் போஜனம் படைக்கிறார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப் படுத்துகின்றதோ அவ்வுணவைத் தான் நம் எண்ணம் விரும்பிகிறது.
அதைப் போல்
1.நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டு தான்
2.ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம்பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.
மண்டலமாயும் சுழல்வது உயிராத்மா தான்; புழுவாய் நெளிதுவும் இவ்வுயிராத்மா தான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.