ஓம் ஈஸ்வரா குருதேவா…! – “என்னை நீ ஏற்றுக் கொள்…!”

ஓம் ஈஸ்வரா குருதேவா…! – “என்னை நீ ஏற்றுக் கொள்…!”

 

ஓம் ஈஸ்வரா என்றால் நமது உயிர் ‘ஓ’ என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் நுகர்வது அனைத்தையும் ‘ஓ’ என்று ஜீவ அணுவாகக் “கருவாக” உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆகவே நாம் எதைக் கேட்கின்றோமோ… எதைப் பார்க்கின்றோமோ… எதை நுகர்கின்றோமோ… இவை அனைத்தையும் நாம் நுகரப் படும்போது நாம் அந்தந்தக் குணங்களை அறிய முடிகின்றது.

அதை எல்லாம்
1.நமது உயிரோ ஓ… என்று ஜீவ அணுவாக கருவாக மாற்றி விடுகின்றது.
2.அவ்வாறு கருவாக மாற்றி விட்டால் நம் ரத்த நாளங்களில் அது கலந்து விடுகின்றது
3.இதற்கு இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் இந்திரலோகம் என்றால் இந்திரீகம்… “ஒரு அணுவின் கருவாக” உருவாக்கும் தன்மை பெற்றது ஆகவே இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

அதே சமயம் நம் உடலுக்குள் அது இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
1.கோழி எவ்வாறு முட்டையை அடைகாத்துக் குஞ்சினை வெளிப்படுத்துகின்றதோ இதைப் போல
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை நம் உடலுக்குள் நமது உயிர் அடைகாக்கின்றது.
3.அதனுடைய பருவம் வரும் பொழுது அந்த முட்டையை விட்டு வெளி வருகின்றது.

நாம் எந்தக் குணத்தின் தன்மையை நுகர்ந்தறிந்தோமோ அந்த அணுவின் தன்மை வெளிப்படும்போது நமது உயிர் ஈசனாக இருந்து இயக்குவதனால் உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்… இயக்கத்தால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்றும்… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும்… அதனதன் சந்தர்ப்பத்திற்க்கொப்ப நாம் அறிந்துணர்வதற்கு இவ்வாறு காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் நுகரும் உணர்வுகள் கருத்தன்மை அடைவதனால் அதை இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

1.அந்தக் கருமுட்டைக்குள் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு கருவானதோ அது அணுவாக மாறுகின்றது.
2.எந்த குணத்தின் தன்மையோ அதனுடைய அணுவாக உருவாக்கப்படும் போது அதனுடைய இயக்கம் ஈசனே.
3.அதில் துடிப்பின் நிலை வரும் பொழுது வெப்பம் விஷ்ணுவே
4.அதே சமயத்தில் ஈர்க்கும் காந்தம் வரும் பொழுது லட்சுமி.
5.எக் குணத்தின் தன்மை கொண்டு அந்த அணுவின் தன்மை பெற்றதோ அது பிரம்மம்.
6.அதனின்று வரக்கூடிய உணர்வின் மணங்கள் ஞானம் சரஸ்வதி.

ஆகவே எந்தக் குணத்தின் தன்மையால் அந்த அணு உருவானதோ ஆக அது பிரம்மமாக இருந்து தன் இனத்தை அது உருவாக்கும் என்று பொருள். பிரம்மா உருவாக்குகின்றான், விஷ்ணு வரம் கொடுக்கின்றான், சிவன் அரவணைக்கின்றான்.

ஆக நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இந்த உடலுக்குள் அது அணுவின் மலமாகும் போது சிவலோகம் ஆகின்றது.

உயிர் உருவாக்கப்படும் பொழுது ஈஸ்வரலோகம். அணு கருவாகும் பொழுது இந்திரலோகம் அணுவாகும் போது பிரம்மலோகம் அது தன் இனத்தை உருவாக்கும் என்று பொருள்படும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள். அதன் உணர்வின் மலம் உடலாகும் போது சிவலோகம்.

இதுதான் “ஓம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் குருதேவா…!”

நீ எப்படி ஒளியாக நின்று உணர்வின் தன்மை அணுவாக மாற்றுகின்றாயோ இதைப் போன்று
1.நீ உயிராக நின்று ஒளியாக இருப்பது போல் என் உணர்வின் தன்மை தெளிவான ஒளியான நிலைகளில் எனக்குள் உருவாக வேண்டும்.
2அந்தக் கருணை உன்னில் வர வேண்டும் என்பதைத்தான் நமது உயிரான ஈசனிடம் வேண்டிப் பாடுவது.

அது தான் “ஓம் ஈஸ்வரா…” எடுப்பது (சுவாசிப்பது) எல்லாவற்றையும் உருவாக்குகின்றாய் “கருணைஸ்வரூபா…”
1.என்னை கருணை கொண்டு ஏற்றுக் கொண்டு
2.நான் எடுக்கும் நல்ல எண்ணங்களை அந்த அணுவின் தன்மையாக உருவாக்குகின்றாய்
3.ஆகவே நீ என்னை ஏற்றுக் கொள்…! என்று தான் பொருள்.

ஓம் ஈஸ்வரா குருதேவா… கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டு அருள்வாய் குருதேவா.

அப்படி என்றால் இந்த உடலுக்குள் அது உருவாக்கிவிட்டால், எந்தக் குணத்தின் தன்மை உருவாக்கியதோ இவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது…. ஈசனாகவும் இருக்கின்றது. குருவாகவும் இருக்கின்றது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply