மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இயக்கம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இயக்கம்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகளை யாம் (ஞானகுரு) மீண்டும் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
1.அதுவே அந்த உணர்வின் இயக்கமாக இங்கே என்னைப் பேச வைப்பதும்… பேசுவதும்…!
2.உணர்வலைகளை ஒலி பரப்புவதும்… அதை நீங்கள் கேட்டு உணர்வதும்
3.அந்த குரு அருள் உங்களுக்குள் பதிந்து கொண்டிருப்பதும்…!

நஞ்சு பரவிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் யார் எதுவாக இருப்பினும் இந்த உடல் எவ்வாறு ஆனாலும் உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்தப் பூமியும் சொந்தமல்ல.

குரு காட்டிய வழியில் நாம் நடக்கும் போது விண்ணுலக ஆற்றல் நமக்குச் சொந்தம் ஆகின்றது… இந்தப் பூமியும் சொந்தமாகிறது… இந்த உடலும் நமக்கு இன்று சொந்தமாக இருக்கின்றது.

மனிதனான பின் சொந்தமாக்க வேண்டியது எது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குச் சொந்தமாக்கி அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி அவர் விண்ணுலகம் சென்றது போன்று நாமும் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்று ஒளியின் உணர்வாக மாற்றுவதே நமக்குச் சொந்தம்.

பேரின்பப் பெரு வாழ்வாக என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவதே நமது கடைசி நிலை. அதன் வழிகளில் குரு காட்டிய பேரன்பை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இது அனைத்தும் நான் பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் உரு செய்து பதிவாக்கினார். அவர் தனக்குள் எதைப் பெற்றாரோ அதைப் பெறும் பாக்கியத்தை எனக்கும் ஏற்படுத்தினார்.

அவர் காட்டிய உணர்வு வழி செல்லப்படும் பொழுது அந்த அருள் உணர்வினை உணர முடிகின்றது.
1.அதே உணர்வின் ஒலிகள் தான் இங்கே எழுப்பப்படுகின்றது
2.உணர்வின் அலைகள் உங்களுக்குள் படுகின்றது
3.அந்த அலையின் தன்மையை நீங்கள் ஈர்க்கின்றீர்கள்
4.குரு அருளின் உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது
5.அந்தப் பதிவின் நிலைகள் உங்களுக்குள் குருவாகின்றது
6.குருவின் தன்மை நினைவாக்கப்படும் பொழுது அந்த அலையின் தொடர் கொண்டு
7.பேரின்பப் பெரு வாழ்வு வாழும் நிலையை நீங்களும் அடைகிறீர்கள்.

நீங்கள் அதை அடைய வேண்டும் என்று தான் எனது பிரார்த்தனையே. அந்த எண்ணத்துடன் தான் குருவை வேண்டுகின்றேன். அவரை வேண்டி அந்த உணர்வுகளை எடுக்கப்படும் போது நீங்களும் அதைப் பெற்றால் உங்களுக்குள் மகிழ்ச்சி தோன்றும்.

நீங்கள் மகிழ்ச்சியானால் எனக்கும் அந்தப் பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

ஆகவே குருநாதர் பெற்ற நிலைகளைத் தியானித்து அந்த அருள் உணர்வுகளை எனக்குள் சேமித்து நீங்கள் எல்லாம் அதைப் பெற வேண்டும் என்பதற்காக நான் (ஞானகுரு) சதா தவமிருக்கின்றேன்.

அந்த தவத்தின் பலனை நீங்கள் பெற்று
1.மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது
2.அது எனக்கும் சொந்தம் ஆகின்றது உங்களுக்கும் சொந்தமாகிறது.
3.நாம் அனைவரும் அந்த மகரிஷிகள் வாழும் அருள் வட்டத்திற்குள் செல்வோம்.

அவர்களின் அருள் வட்டத்திற்குள் நாம் செல்ல வேண்டுமென்றால் நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண்ணில் செலுத்த வேண்டும்… செலுத்துவோம்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply