இன்று “மதம்” என்று சொல்லும் அந்த மதத்தின் முந்தைய நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Risaba devar

இன்று “மதம்” என்று சொல்லும் அந்த மதத்தின் முந்தைய நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“மதம்…” என்ற சொல்லின் முந்தைய நிலை மனித இனம் வாழ ஏற்படுத்தப்பட்ட “சமூக அமைப்பு” என்ற உலக வாழ்க்கை நிலை. ஆனால் இன்றோ மதம் என்ற சமூக அமைப்பே… “கடவுள்” என்ற பெயரால் ஒன்றுக்கொன்று ஏற்காது போர் முறையாகி ஆகிவிட்டது.

1.மனிதர்கள் உலகோதய ஆசைப் பிடிப்பில் சிக்குண்டு
2.இந்த உடல் வாழ்க்கையையே பிரதானமாகக் கருதி
3.ஆன்மாவை உயர்த்தும் அறிவின் ஆற்றல் குறைவுபட்டு
4.மனிதனின் எண்ணமே மீளாப் பிடிக்குள் ஆட்பட்டு
5.மீளும் வழி அறியும் செயலையே அறிய முடியாத காலங்களில்
6.மனித குலம் காக்கப்பட அவதார புருஷர்கள் அவதரித்த பூமி தான் நாம் வாழும் இந்தப் பூமி.

அன்று காட்டப்பட்ட நெறி முறைகளில் மனிதன் தன்னிலை உயர்த்த சுட்டிக் காட்டப்பட்ட அறிவின் ஆற்றல் அந்த மகான்களுக்குப் பின் வழி வந்த சீடர்களால் மதம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு விட்டார்கள்.

1.நாபிமனு முதல் வர்த்தமான மகாவீரர் வரை என்று சொல்லும் வரைமுறைகள் (பாரம்பரியம்) எல்லாம் எதற்கப்பா..?
2.வரையறையின்றிக் காட்டுவதே மதங்களின் பிடியில் அகப்படச் செய்வதற்குத்தானா…?
3.அந்த வரைமுறையை இன்று காட்டுபவன் அன்றைய நிலையைச் சிந்தித்தானா..?
மனித வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று சிந்தித்த நாபிமனு அதைச் செயல்படுத்த முனைந்து
1.ஞானப் பாதையை காட்டிய ரிஷப தேவர் (ஆதிநாதர்) வழியில் வந்த எத்தனையோ மகான்கள்
2.(தம் ஆன்மாவைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்கள்)
3.ஜீவ காருண்யம் நல்லொழுக்கம் நற்செயல் என்று போதித்த வழி முறைகள் எல்லாம் “மதம் கொண்ட…!” மதத்தினை வளர்க்கத்தானா…?

“ஜீன தீர்த்தங்கரர்கள் இத்தனை பேர் தான்…!” என்ற பட்டியல் கொடுத்து விட்டால் அதைக் கண்டு என்ன செய்யப் போகிறான்..? மீண்டும் மதத்தின் பிடியில் அகப்பட்டுத் தத்தளிக்கப் போகின்றான்.

வர்த்தமானர் பெற்றதும் ஓர் நல் நிலை தான்…! அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட கடமை.. விதி… சரீரம் தொட்டுச் செயல்படுத்த முனையும் வாய்ப்பு இன்றைய பரபரப்பான உலகியல் வாழ்க்கை நெறியில் இல்லையப்பா…!

1.சன்னியாசிக்கு என்று ஒரு வழி முறையும்
2.சம்சாரிக்கு என்று ஒரு வழி முறையும் அன்று காட்டியவற்றில்
3.உணர்ந்து கொண்டார்களா அனைத்தையும்…? அவைகளிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.

வர்த்தமானன் கடவுளையா சொன்னான்..? இல்லையே…! மதம் என்ற பெயர்படுத்த மனித ஆத்மாவின் வளர்ச்சியை அல்லவோ கூறினான்.

நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியானத்தின் வழி முறையில் காக்கப்பட வேண்டியது ஆன்மா தான் என்று கூறிட்டாலும் காக்கப்பட வேண்டியது சரீரமும் தான்,

அன்று சமுதாய அமைப்பில் மனித இனத்தின் எண்ணிக்கை குறைவு பட்ட காலச் சூழலில் மகான்கள் நடைமுறைக்குக் காட்டிய செயல்களைச் செயல்முறைக்குக் கொண்டு வரும் வழி வகைகள் இருந்தன.

ஆனால் இந்தக் கலியில் உடலை வருத்திடும் செயல்கள் தேவை தானா…?

உன் கண்ணிலிருந்து நீர் வழிகின்றது. மனம் வேதனைச் சூழலில் ஆட்படுகின்றது, மனம் சங்கட அலைகளில் சிக்குண்டிருக்கும் பொழுது ஆத்மா வேதனையுறாவிட்டால் உடல் வருந்திட நீர் வரக் காரணம் என்ன..? துக்கம் சந்தோஷம் அனைத்துமே ஆன்மாவில் பதிவு நிலைகள் தான்.

1.மனித மன நடை முறைச் செயலுக்கு
2.நல் வாழ்வு நற்கதிக்கு இதை விட வேறு ஆக்கமில்லை என்ற நிலையில்
3.இந்தத் தியான வழி கொண்டு உண்மையை உன்னுள்ளே ஊன்றிப் பார்.

வாழ்க்கையில் நேரும் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதற்காகப் பயன்படுத்தப்படும் பொழுது அதிலே நிறைவு காணும் மனம் பெற்று விட்டால் தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply