ஏட்டுப் படிப்பின் மோகத்தால் தன்னை உணர முடியாத கல்வியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Education and Gnana

ஏட்டுப் படிப்பின் மோகத்தால் தன்னை உணர முடியாத கல்வியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அறியாதவர்கள் அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலேயே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்கிறார்கள்.

கற்றவர்… கல்லாதவர்… அறிந்தவர்… அறியாதவர்… எழை… செல்வந்தன்… இப்படிப் பல பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இந்த உலகமே சுழல்கின்றது.

1.கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும்
2.கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு மனப்பான்மையும்
3.தன் மனதிலுள்ளே ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த
4.மாய ரூபத்தையே மனதினில் கலக்கவிட்டு உலக மக்கள் இன்று வாழ்கிறார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு…! என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தியுள்ளார். இன்றுள்ள மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணம் தான் அதிகமாக உள்ளது. அதையே பெரிய படிப்பாக எண்ணி வாழ்கின்றார்கள்.

1.ஏட்டுப் படிப்பிற்குப் பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தியுள்ளதால்
2.அந்த நிலைக்காக ஏங்குவோர் பலர் உள்ளனர்.
3.படிப்பும் பட்டமும் அளித்த மாய ரூபங்கள் தாம் இவை.

தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
1.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா…?
2,அன்று கம்பர் எழுதிய கவிதையெல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்றுப் படிக்கப்பட்டதப்பா..?

கம்பரும் திருவள்ளுவரும் வியாசகரும் வான்மீகியும் இப்படி எண்ணிலடங்கா ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?

அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டுதான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளிகளிலும் கல்லூரியிலும் கல்வி என்ற பெயரில் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்.

அந்தப் படிப்பைப் படித்தற்கு இன்றுள்ள உபாத்தியாயர்கள் மதிப்பெண்களும் தருகிறார்கள். மதிப்பெண் பெறுவதில் தான் இருக்கின்றார்கள்.
1.ஆக இன்றுள்ள இக்கலியுகமே
2.தானாக உணர்ந்து செயல்படும் நிலையை முழுவதுமாக மாற்றி வருகிறது.

உலகின் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மனிதனின் எண்ணத்தில் மட்டும்
1.தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு
2.பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழ்கின்றான் இன்றுள்ள மனிதன்.
3.மனிதர்களின் எண்ணமெல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
4.பிறர் சொல்லிய உண்மைகளையே ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
5.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது. இந்தச் செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இனியாவது இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா…!

ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அந்தச் சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும்.

தானும் ஒரு திருவள்ளுவராகவும்.. கம்பராகவும்… வால்மீகியாகவும்… வியாசகராகவும்… அந்த ரிஷிகளைப் போல ஆகலாம்…! என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து இன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.

வீண் விவாதத்திற்கு இடம் தராமல் கற்கும் கல்வியால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
1.இந்த உலக நன்மைக்காக
2.இந்த உயிரணுக்களின் நன்மைக்காக
3.இந்த விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
4.கல்கி என்னும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கையின் சக்தியைப் பெற்றிடுங்கள்…!

நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக (இயற்கைக்கு) அடிபணிந்து வாழ்ந்திடலாம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.