
மகரிஷிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சக்கரம் போல் சுழலச் செய்ய வேண்டும்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
புருவ மத்தி வழியாகத் தியானித்து நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பாலும் சப்தரிஷி மண்டலங்களின் பாலும் செலுத்தினால் அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நுகர்ந்து அறிய இது உதவும்.
இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலம் சென்றிருக்கும்.
1.ஒரு மத்தாப்பைக் கொளுத்திய பின் அதிலே பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ
2.இதே போல வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது
3.உங்கள் உணர்வுகளில் தோற்றமடைந்திருக்கும்… இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் படர்கிறது.
துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுவது அனைத்தும் வைரத்தைப் போல இளம் நீல நிறமாக இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது அனைத்தும் பல வித வர்ணங்களில் இருக்கும்.
ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல வண்ணங்களில் இருக்கும். அந்த மத்தாப்பூ போல சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வுகள் உங்களுக்குள் தெரிந்திருக்கும்.
தெரியவில்லை என்றாலும் கூட…
1.அந்த உணர்வின் அலைகள் சுழன்று கொண்டு வந்து உடலுக்குள் பாய்ந்து
2.உடலில் ஒரு சக்கரம் போல சுழன்று கொண்டு வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம்
3.ஏனென்றால் சுவாசித்தது உடல் முழுவதும் ஒரு ரவுண்டு அப்படி வரும்.
இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் உரம் போட்டது போல் ஆகிறது.
உதாரணமாக நாம் செடிகளுக்கு எப்படி உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிறோமோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.உடலில் உள்ள அணுக்களின் முகப்புகளில் பூராவும் போய்ச் சேரும்.
நமது வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களை எடுத்துக் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்களும் உண்டு.
அதிலே நல்ல குணங்கள் கொண்ட அணுக்கள் இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து அதைக் கேள்விப்பட்டு என்ன… ஏது…? என்று அதை நுகர்ந்திருந்தோம் என்றால்
1.அந்த நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டிருக்கும்
2.அப்பொழுது அந்த நல்ல குணங்கள் சீராகச் செயல்படாது.
3.அந்த நல்ல அணுக்கள் நலிந்து கொண்டே இருக்கும்.
4.அதே சமயத்தில் நல்ல குணங்கள் வளர்வதற்குண்டான அந்த ஈர்ப்பு சக்தியும் குறைந்தே இருக்கும்.
நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வுத் தன்மை உண்டாகும்.
ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் நல்லதை எண்ணி அதைச் செய்ய முற்படும் பொழுது பிறருடைய தீமைகளைக் கேட்டு அறிகின்றோம்.
நம் உயிரில் பட்ட பின் தீமை என்று அதை உணர்ந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ அதிலே முன்னோட்டமாக அடைபட்டு விடும். பின் அது நமக்குத் தீமை என்று அறிவித்தாலும் நல்லதை அடைத்துக் கொள்கிறது.
உதாரணமாக நாம் சமையல் செய்யும் போது மாவை எடுத்துப் பிசைகின்றோம். அது சுவை உள்ளது தான்.
இருந்தாலும் அதிலே மற்ற ஒரு பொருளைப் போட்டால்… காரமோ இனிப்போ அதில் எதைக் கலக்கின்றோமோ அதன் சுவை தான் முன்னணியில் இருக்கும்.
அதைப் போலத் தான் நம்முடைய நல்ல குணங்கள் கொண்ட அணுக்களில் தீமை செய்யும் உணர்வுகள் இணைந்து விட்டால் அது செயலற்றதாகிறது… நல்லதை எண்ண முடிவதில்லை.
அவ்வாறு ஆகாதபடி மாற்றுவதற்குத்தான்…
1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் சுழன்று வரப்படும் பொழுது செடிகளுக்கு உரம் போடுவது போன்று இந்த உணர்வின் தன்மை ஊடுருவிப் பாயும் தன்மை கொண்டு உடலில் ஊடுருவுகின்றது.
நல்ல குணங்களுக்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவி அதனின் வலு பெறும் பொழுது நாம் கேட்டறிந்த தீமையின் நிலைகளைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.
தியானிக்க வேண்டிய முறையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.