
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி
அகஸ்தியன் தனது தாய் கருவில் இருக்கப்படும் பொழுது
1.விஷத்தினை வென்று
2.மெய் என்ற உணர்வை அறிந்து
3.தனது வாழ்க்கையில் இருளை அகற்றி
4.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற்ற
5.”அந்த அகஸ்தியன் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள்” நம் பூமியில் படர்ந்துள்ளது.
அகஸ்தியன் பெற்ற… அவனில் விளைந்த அந்த அருள் சக்தி கொண்டு துருவனாக ஆனான்.
1.துருவனாகும் பொழுது அணுவின் இயக்கத்தை உணர்ந்து
2.துருவத்தை உற்று நோக்கி
3.துருவத்தின் வழியாக நம் பூமிக்கு வரும் அந்த அரும் பெரும் சக்தியை நுகர்ந்து
4.அதன் உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.
அவ்வாறு அகஸ்தியன் பெற்ற சக்திகளை எல்லாம் அவனுக்குத் திருமணம் ஆகும் போது தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான்.
கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து அந்த உணர்வின் தன்மை தங்கள் உடலுக்குள் அதை உருவாக்கப்படும் பொழுது துருவ மகரிஷியாகின்றார்கள்.
ஆண் பெண் என்ற நிலைகள் வரும் பொழுதுதான் தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் இங்கே கரு என்ற நிலைகள் உருவாகின்றது.
கணவன் மனைவி இருவருமே… அந்த அருள் ஒளி தன் கணவன் பெற வேண்டும் என்று மனைவியும்… தன் மனைவி அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று கணவனும் அந்த உணர்வினை இருவரும் ஒன்றப்படும் பொழுது அது ஜீவன் பெறும் அணுவாக மாறுகின்றது.
வேதனைப்படும் ஒரு மனிதனின் உணர்வை எடுத்தால் அது முனியாகின்றது. அதன் உணர்வின் தன்மை தான் அது செயலாக்குகின்றது. வேதனையை நீக்கிடும் அருள் ஒளி என்ற உணர்வினை…
1.தன் மனைவி பெற வேண்டுமென்று கணவனும்
2.தன் கணவன் பெற வேண்டுமென்று மனைவியும்
3.இருவரும் இவ்வாறு எண்ணி எடுத்தால் ஞானத்தைச் சிருஷ்டிக்கும் “ரிஷியாகின்றது..”
27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் பூமியின் துருவப் பாதையின் வழியாக இந்தப் பூமிக்குள் வருகின்றது. அதை உற்று நோக்கி… அதையே எல்லையாக வைத்து… அகஸ்தியனும் அவர் மனைவியும் நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அந்த உணர்வின் தன்மைகளை
1.உயிரைப் போல தங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும்
2.ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றனர்
3.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக நிலைத்து வாழ்கின்றனர்.
இருளை அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின்று வரும் உணர்வினைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் நினைத்து
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.உங்கள் நினைவு அனைத்தையும் இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.
6.உங்களுள் அந்த பேரருளை உருவாக்குங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி
1.உங்கள் உடல் முழுவதும் ஊடுருவிப் பாய்வதையும்
2.அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் பரவுவதை நீங்கள் உணரலாம்.
3.நீங்கள் நுகர்வது அணுவாக உருவாக்கும் அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் பெறுவதையும் உணரலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெண்கள் தங்கள் கணவர் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற ஏங்கித் தியானியுங்கள்.
ஆண்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தங்கள் மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
கணவன் மனைவிக்குப் பெற வேண்டுமென்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டுமென்றும் ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியனும் அவர் மனைவவியும் பெற்ற உணர்வை நீங்களும் (கணவன் மனைவி) பெற்று… இருளை அகற்றும் வல்லமை பெற்று… இந்த பிறவியில்… பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியை நீங்களும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி… கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து… இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி… நஞ்சினை வென்று… பேரருள் என்ற நிலைகளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்கே… “ஊழ்வினை என்ற ஞானவித்தாக” பதிவு செய்கின்றேன்.
அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.