
அன்னை தந்தையர் என்பவர்கள் சூரிய சந்திரர் போன்றவர்கள்…! சூரியனையும் சந்திரனையும் ஒதுக்கித் தள்ளி விட்டால் அங்கே சூனியம் தான்…!
நீ என்ன சொல்வது…? நீ சொல்லி நான் என்ன கேட்பது…? அவனுக்கு அப்படிச் செய்கிறார்கள்… இவனுக்கு இப்படிச் செய்கிறார்கள்…! என்று வீட்டிற்குள் ஒருவருக்கொருவர் பேசும் நிலையில் குடும்ப ஒற்றுமையே இன்று சிதறிக் கொண்டிருக்கிறது.
அன்னை தந்தையர் பல சிரமங்கள் பட்டுக் குழந்தைகளை வளர்த்தாலும் அந்தக் குழந்தைகள் அன்னை தந்தையை மதிக்கும் நிலையை இழந்து விட்டது.
சூரியனையும் பூமியையும் மறந்து விட்டால் அந்த உணர்வின் சக்தியில்லாமல் எப்படிப் பிறக்க முடியும்…?
1.இந்த இரண்டையும் மறந்து விட்டால் தற்கொலை தான் ஆகும்.
2.தற்கொலை ஆனால்…. எதை அழித்திடும் உணர்வு கொண்டோமோ
3.அந்த உணர்வின் தன்மை தான் நமக்குள்ளும் இங்கே விளையும்.
ஆகவே நம் அன்னை தந்தையரை நாம் மதித்து நடக்க வேண்டும். அவர்கள் நம்மை உருவாக்கியவர்கள். அவர்களே நமக்குக் கடவுள். நம் குருவும் அவர்கள் தான்… தெய்வமும் அவர்கள் தான்…! என்ற இந்த எண்ணத்தை நமக்குள் பொங்கச் செய்ய வேண்டும்.
உயர்ந்த எண்ணங்கள் நமக்குள் பொங்கி வழியும் நிலையாக அந்த மகிழ்ச்சியின் தன்மையாக அன்னை தந்தையரை மதிக்கும் நிலையாக நாம் இருக்க வேண்டும்.
அதே போன்று தொழிலும் சரி… வாழ்க்கையின் எந்த நிலையாக இருந்தாலும் சரி… இந்தக் குறைகள் நமக்குள் நிலைக்கவே கூடாது. அதை நீக்கிட வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கி அதை நமக்குள் வலுப்படுத்திக் கொண்டபின்
1.நாம் யார் யாரிடமெல்லாம் பகைமை கொண்டோமோ
2.எந்தப் பகைமையான உணர்வு நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றதோ
3.அது நம் உடலிலிருந்து… நம் நினைவின் பதிவிலிருந்து… அகற்றிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
குடும்பத்திலும் தொழிலிலும் மற்ற இடங்களில் இவ்வாறு வரக்கூடிய பகைமையை அகற்றுவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உபதேச வாயிலாக ஓர் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
நினைவு கூர்ந்து நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் ஒவ்வொரு எண்ணமும் ஒரு வித்தாகின்றது. ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் அது முழுமை பெற்றால் அது ஒரு வித்தாகின்றது.
ஒரு வித்தைப் பூமியில் விதைத்தால் தனக்குள் இருக்கக்கூடிய உணர்வின் சத்தைக் கவர்ந்து அது செடியாக வளர்ந்து தன் இனமான வித்தை மீண்டும் உருவாக்குகின்றது. அதைப் போன்றது தான் இந்த உபதேச வாயிலாக யாம் (ஞானகுரு) கூறும் உணர்வுகள்,
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படி அவர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் சக்தியை அருள் வித்தாக எனக்கு உபதேசித்து அருளினார்.
அந்த உணர்வின் நினைவலைகள் கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பருகும் நிலையாகப் பெறும் நிலையாகப் பெருகும் நிலையாக
1.எமக்குள் உருவாக்கிய அந்தச் சக்தியை நீங்களும் பெற முடியும்.
2..உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்க முடியும்
3.அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழலாம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.