செல்வத்தின் அதிபதியான ஏழுமலையானப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

thirupathi elumalaiyaan

செல்வத்தின் அதிபதியான ஏழுமலையானப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை.
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கி விடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.

இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.

ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.

அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.

ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகா தேவன்.

இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழு மலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களப்பா.

நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழு மலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்கு தெரிந்து விடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.

இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்சொங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித் தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்…? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்… கண்ணில்லையா…? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.

கடவுள் எங்குள்ளான் என்று இப்பொழுது புரிந்ததா…? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள். கடவுள் என்பது யார் என்று புரிந்ததா…?

 

Leave a Reply