மனிதன் மனிதனாக இல்லாமல் மிருகத்தனமாகச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Godman

மனிதன் மனிதனாக இல்லாமல் மிருகத்தனமாகச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

மனித நிலையில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த பகைமை நிலையிலெல்லாம் மனதைச் செலுத்தி வாழும் மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்

அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்றுச் சப்த அலைகளை வெளியிட்டார்களோ அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றியே அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டேயிருக்கும்.

அதே நிலையில் (கோப குரோத) இருக்கும் ஒரு மிருகத்தின் நிலையும்
1.அந்த மிருகத்தைச் சுற்றிக் கொண்டுள்ள மிருகத்தின் சப்த அலையும்
2.உடலை விட்டுப் பிரிந்த மனிதனின் சப்த அலையும் ஒன்று போல் உள்ள பொழுது
3.ஒன்றை ஒன்று எதிர்படும் தன்மையில் இரு சப்த அலையும் ஒன்றுபட்டு
4.இந்த மனிதனின் உயிரணு (உயிராத்மா) அந்த மிருகத்தின் உடலுக்குள் செல்கிறது.

இந்நிலையில் அந்த மிருகத்தின் இரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜெனனத்திற்கு அந்த மனிதன் வருகின்றான்.
1.மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து
2.மனிதன் மிருக நிலைக்கும் வருகிறான்…! என்பதன் பொருளும் இதுவே.

சில மனிதர்களின் ஆவிகள் மிருக உடலுக்குள் வந்த பிறகு அந்த மிருகத்தின் ஆயுள் காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அந்த உடலிலிருந்து பின் வெளிப்படும் நிலையில் மனிதனல்லாத பிற ஜென்மத்திற்குத்தான் வர முடிகின்றது.

மிருக உடலுக்குள் சென்ற உயிரணு (மனித ஆன்மா) ஏன் அந்த உடலிலிருந்து வெளிப்பட முடிந்திடாதா..? என்று எண்ணிடலாம்.

மிருக உடலுக்குச் சென்ற பிறகு அந்த மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் இந்த அணு வெளி வர முடியும். மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது இந்த மனித உயிரணு எப்படி மீண்டு வெளி வந்திட முடியும்..?
1.ஆக்ரோஷம் கொண்ட மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான்
2.மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது.

மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அந்த மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அந்த மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இந்த உயிரணுக்கள் எல்லாம் புழுவாகின்றன.

சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அந்த மிருகத்தின் உடலுடன் கூடிய நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜெனனத்திற்கு வருகின்றது.

மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல…! மிருகத்தின் உயிரணுவும் (மிருகத்தின் ஆவியும்) மனிதனின் சரீரத்தில் வந்து சேரும் நிலை உண்டு.

மனிதன் சுவாசிக்கும் நிலையில் அவன் எண்ணும் நிலைகளில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்றான் என்றால்
1.மனித உடலின் அந்தச் சுவாச நிலைக்கும்
2.மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்றுபடும் பொழுது
3.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலுக்குள் சென்று
4.அந்த மனிதனையே அந்த உயிரணு மிருகமாக்கும் தன்மையில்
5.மிருகத்தின் குண நிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால் மிருக நிலையிலிருந்து மாறுபட முடியாமல்
6.மென்மேலும் விரோதத்தைதையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத் தான் மனிதனின் தன்மையும் வருகின்றது.

அத்தகைய இறந்தான் என்றால் மீண்டும் மனித உடலுக்குள் வராதபடி மிருக உடலுக்குள் சென்று மிருகமாகத் தான் பிறக்க நேரிடும். இன்று நல்ல மனித உடலில் இருந்தாலும் சந்தர்ப்பத்தால் எடுக்கும் அதீத தீமையான உணர்வுகளால் சுவாசம் மாறுபட்டு மனிதன் மிருகமாகத்தான் மாற முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்றால்
1.மனிதன் மனிதனாகவே வாழும் தன்மைக்கு வர
2.அன்பு பாசம் என்ற சாந்தமான நிலையில்
3.கோபம் துவேஷம் வஞ்சம் இப்படிப் பல கெட்ட குணங்களைத் தன்னை விட்டகற்றி
4.என்றும் அன்பையே தெய்வமாக அன்பென்னும் தெய்வ சக்தியைத் தனக்குள் பெற்று
5.அவ்வாறு வாழ்ந்திடும் தன்மையில் தான் மீண்டு வந்திட முடியும்.

ஆகவே இன்று இந்த மனிதச் சரீரத்திலிருக்கும் பொழுதே நாம் ஈசனின் சக்தியைப் பெறும் அன்பு பண்பு என்ற பாச அலைகளைப் பாய்ச்சி அந்த அலைகளிடையே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அப்படி வாழ்ந்தால் நம் உயிரணு நல் ஊட்டம் பெறுகிறது
2.நம் நிலை என்றும் மாறாத நிலையாகிறது
3.நம் ஆத்மா அரும் பெரும் சக்தி பெறுகிறது
4.ஞானிகளும் மகரிஷிகளும் வாழும் சூட்சம உலகிற்குச் செல்லும் திறன் பெறுகின்றது.

மனிதனின் கடைசி எல்லை அதுவே…!

Leave a Reply