மழை பெய்ய வைக்கும் சக்தி எது…?

raining-003

மழை பெய்ய வைக்கும் சக்தி எது…?

இன்று நாம் வாழும் இடங்களில் மழை எப்படிப் பெய்கின்றது…? ஒரு இடத்தில் பெய்து இன்னொரு இடத்தில் மழை பெய்யாமல் போவதன் காரணம் என்ன…?

எந்தெந்த அளவுக்கு மக்களின் நல்ல எண்ணங்கள் இருக்கின்றதோ அதற்கொப்பதான் அங்கே மழை பெய்யும்.
1.நாம் நல்ல உணர்வுகளை எடுத்தோம் என்றால்
2.அந்த இடத்தில் “நிச்சயம்” மழை பெய்யும்.

வெறுப்பும் சண்டையும் குரோதமும் இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எண்ணினார்கள் என்றால் அந்த அந்த உணர்வுகள் பரவி அங்கே மழை மேகங்களைக் கலைத்து மழை பெய்வதைத் தடுத்துவிடும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளின் மோதல் ஏற்படுகின்றது என்றால் அந்தப் பக்கத்தில் மழை இல்லாது போகும்.

அன்பு கலந்த உணர்வுடன் நாம் ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷியின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளைப் பரவச் செய்து மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தினால் அப்பகுதியில் உங்களால் நிச்சயம் மழை பெய்ய வைக்க முடியும்.
1.உங்களை நம்புங்கள்.
2.ஒரு மனிதனுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு.

ஒரு பாடலை இனிமையாகப் பாடி இந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பி அக்காலங்களில் மழை பெய்ய வைத்திருக்கின்றார்கள்.

மழை இல்லை என்றால் பெண்கள் தண்ணீர் குடத்தைத் தூக்கிக் கொண்டு போவார்கள். காட்டுப் பக்கம் போய் பக்தி கொண்டு இரண்டு பாடலைப் பாடியவுடனே கொஞ்ச நேரத்தில் மேகம் கூடும்.

மழையை நேராக வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வருவார்கள். அப்படியே மழை பெய்யும். அந்தக் காலத்தில அதைச் செய்தார்கள்.

இன்றைக்கு அதெல்லாம் போய்விட்டது. நம்முடைய அந்த நாகரீகம் எல்லாம் போய்விட்டது. நமது பண்பாடு எல்லாம் போனது. அநாகரிகம் தான் வந்து விட்டது.

இன்றைக்குப் பெண்கள் நாகரீகமான உடைகள் எல்லாவற்றையும் போட்டு வித்தியாசமாக நம்முடைய பண்புகளை இழக்கச் செய்து எங்கேயோ இருந்த நாகரீகத்தை இங்கே கொண்டு வந்து விட்டோம்.

மேலை நாட்டு நாகரீகத்தினால் அநாகரீகத்தை நாம் வளர்த்துக் கொண்டு இருக்கின்றோமே தவிர நாகரீகம் என்ற பெயரில் “அநாகரீகத்தை” வளர்க்கின்றோம். இதன் உணர்வு கொண்டு வெறுப்பின் உணர்வை நாம் பரப்புகின்றோம்.
1.வெறுப்பு உணர்வுகள் இருந்தால்
2.இந்தப் பெண்கள் மழையை எங்கே கூட்டிக் கொண்டு வரப்போகின்றார்கள்…?

முந்தி எல்லாம் மழையைக் கூட்டிக் கொண்டு வருவார்கள். நான் (ஞானகுரு) சிறு பிள்ளையாக இருக்கும் போது தண்ணீருக்காக வேண்டி எல்லாரும் குடத்தை எடுத்துக் கொண்டு போவோம். வரும் போது நனைந்து கொண்டு தான் வருவோம்.

இன்னும் கூட சில பகுதிகளில் இது உண்டு….! “பழமைவாதிகள்” அங்கே இருந்தார்கள் என்றால் மழையைக் கூட்டிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இப்பொழுது நாம் மழை இல்லை என்றால் வறண்டு போய்விட்டது வறண்டு போய்விட்டது என்று எல்லோரும் பேசுவது போல நாமும் பேசுவோம்.

ஆனால் தப்பித் தவறி மழை பெய்யும் போது என்ன சொல்வோம்…? தொலைந்து போன மழை இந்த நேரத்திற்குத்தான் வர வேண்டுமா…? என்று இப்படித்தான் நாம் பேசுகின்றோம்.

இதை எல்லாம் நாம் மாற்றி அமைத்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி வான மண்டலம் முழுவதும் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்

இந்த உணர்வுகளுடன் நம் பார்வையும் அதிலே சேருகின்றது. அந்த மழை நீருடன் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் போது அங்கே மழை பெய்யும். அப்போது நல்ல நிலைகள் ஏற்படும்.

Leave a Reply