உலகம் மாற்றம் அடைந்து கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

உலகம் மாற்றம் அடைந்து கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகினில் தோன்றிய உயிர் அணுக்களுக்கும்… உயிரணுவாய் ஜீவ ஆத்மா கொண்ட உடல் பிம்பம் கொண்ட அனைத்திற்கும்… எப்படி மறு ஜென்மம் ஒன்றுள்ளதோ அந்த நிலை போன்றே
1.இவ்வுலகிற்கும் இவ்வுலகைப் போன்ற வளர்ச்சி நிலை பெற்ற ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஜென்ம நிலை உள்ளது.
2.ஜீவன் கொண்டு தனி ஒரு சக்தி நிலை பெற்ற பெரிய மண்டலங்கள் அனைத்திற்குமே ஜென்ம நிலையுண்டு.

இவ்வுலகம் மாறு கொண்ட நிலையில் கல்கியில் தோன்றிய நாளில் உதித்திட்ட உயிரணுக்களின் செயல் சக்தியினை விளக்கியுள்ளோம்.

கல்கியில் தோன்றிய உயிரணுக்கள்… அன்றிருந்த நிலை ஜீவன் கொண்டு பிம்பக் கூடுகள் பெறும் நிலையில் அதிகச் சதை நிலை கொண்ட எலும்புகளின் வளர்ச்சி நிலையில்லா நிலையில்தான் பிம்ப உருவங்கள் இருந்தன.

கல்கியில் இருந்து தொடர்ந்த நிலை கொண்ட… மாறி மாறி வந்திட்ட ஜென்மத் தொடரில் ஈர்த்த சக்தி நிலைதான் இன்றுள்ள மனிதர்களும்… மற்ற இன வர்க்கங்களின் வளர்ச்சி நிலையும். இந்நிலை போன்றே இவ்வுலக நிலையும்.

1.அதிசக்தி நிறைந்த வளர்ச்சியில் வந்த நிலைதனை
2.இன்றைய வளர்ச்சி கொண்ட இக்கலியின் “செயற்கையின் நிலையினால்”
3.இப்பூமியின் சக்தியையே சிதறும் நிலைப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் நம் பூமியின் தொடர்பு நிலை கொண்ட இச் சூரியனைச் சுற்றியுள்ள மற்ற மண்டலங்களில்… நம்மை ஒத்த மனித பிம்பங்களும் இச்செயற்கையின் நிலையும் அந்நிலையில் இல்லாததினால் அம் மண்டலங்களின் சக்தி நம் பூமியையும் விட மென்மேலும் வளரும் நிலையில் அதிக சக்தி கொண்டதாக உள்ளது.

நம் பூமியும் வளர்ந்து கொண்டு தான் உள்ளது “பலன் இல்லாத நிலையில்…!”

அறிவு வளர்ச்சி கொண்ட… செயலாற்றும் திறமையும் அதற்குகந்த அங்கங்களும் பெற்ற… பிறவியிலேயே உன்னதப் பிறவி பெற்ற இம்மனிதனால் “தன் சக்தியை உணர்ந்திடாமல் வந்ததின் வினைதான்… இன்றுள்ள நம் பூமியின் நிலை…!”

தனக்குகந்த அறிவின் செல்வத்தைப் பேராசைக்கு அடிமை கொண்டு வாழ்வதின் நிலை இன்றைய மனிதனின் நிலையும் இம் மனிதனை வளர்க்கும் பூமிக்கும் உள்ளது.

இன்றைய பாட நிலையிலிருந்து ஜென்ம நிலையை உணர்த்தியதின் நிலை புரிந்ததா…?

இப்பூமியின் பொக்கிஷத்தைத்தான் இக்கலியின் மனிதனின் பேராசைக்காக எடுத்து விட்டீர்கள். இவ்வுலகனைத்தும் உள்ள எண்ண நிலையே இப்பேராசைப் பிடியில் சிக்குண்டு தவிக்கும் நிலையில் உள்ள பொழுது…
1.இந்நிலையில் இருந்து விடுபடும் எண்ணத்தை
2.இவ் உலகனைத்திற்கும் போதிக்கும் சக்தி நிலை இவ் உலகைக் காக்கும் சக்திக்கே இல்லை.
3.உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது.

அழிவு என்னும் நிலையே எதற்கும் இல்லை. எதுவுமே அழிவதில்லை…! மாறு கொண்ட நிலைதான் ஏற்பட்டிடும். மாறு கொண்ட நிலையில் இவ் உடல் என்னும் கூட்டிலிருந்தும் அனைத்து ஜீவராசிகளும் மாறு கொள்ளத்தான் போகின்றன.

எவ்வாத்மாவும் அழிந்திடாது. இவ்வுலகம் மாறு கொண்டு சுழலும் நிலையில் இவ் உடல் கூட்டை விட்டு வெளிப்படும் உயிராத்மாக்களின் நிலைக்காகவே இந்நிலையில் அளித்திடும் பாட நிலைகள் எல்லாம்…!

இப்பூமியில் வாழ்ந்திடும் இன வர்க்கங்களைப் போன்ற நிலை மற்ற மண்டலங்களில் மாறு கொள்கின்றது. இவ்வுலக நிலை மாறுபட்டு உயிராத்மாக்கள் இப்பால் வெளி மண்டலத்தில் உள்ள நிலையில் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் இருந்த நிலை கொண்டு மற்ற மண்டலங்களின் நிலைக்குச் சென்று உடல் பெறலாம்.

அந்த நிலைக்காகத்தான் இப்போதனை நிலையும்… இப்பாட நிலையும்…!

இவ்வுலக நிலை மாறு கொள்ளும் நிலை நெருங்குவதினால் இந்த நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் ஆத்மீக நெறிக்கு வந்து அந்நிலையின் மூலமாக மீட்சி பெறுங்கள்…!

Leave a Reply