மெய் உலகிற்கு வாருங்கள் – ஈஸ்வரபட்டர்

மெய் உலகிற்கு வாருங்கள் – ஈஸ்வரபட்டர்

 

இக்கலி மாறி கல்கிக்கு வரும் பொழுது இவ்வுலகம் சுழலும் தன்மையில் சிறு அசைவின் மாறுதல் பட்டு மறுபடியும் அதே நிலைகொண்டு சுழற்சி சுற்றிக்கொண்டு இவ்வுலகம் இருக்கும் என்கின்றோம்.

இவ்வுலகின் நிலை மாறுவதைப்போல் இவ்வுலகுடன் தொடர்புடைய ஒவ்வொரு மண்டலங்களின் நிலையும் மாறுபடுகிறது.

அந்நிலையில் மாறுபடும் பொழுது இப்பொழுது இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகொண்ட சக்திகளெல்லாம் இப்பூமி ஈர்த்ததோ அதைப் போல் இப்பூமியிலிருந்து இப்பூமி வெளியிட்ட சக்தியை மற்ற மண்டலங்களின் நிலையுமே அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மாறுபடுகின்றது.

இப்பொழுதுள்ள இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளின் நிலையுமே அதை ஈர்த்து வெளியிட்ட தன்மையில்… பிறகும் சுழலும் சுழற்சியில் இதே நிலையில் அதன் நிலை வந்திடாமல் அதன் சக்தி நிலையுமே மாறுபட்ட தன்மையில்தான் சுற்றிக்கொண்டு வரும் அடுத்த சுற்றலின்போது இருந்திடும்.

இப்பொழுது வாழும் ஜீவராசிகளுக்கு மட்டும்தான் இந்நிலையா…? ஆவி உலகில் உள்ளவர்களின் நிலையெல்லாம் என்ன என்பீர். அடுத்த சுழற்சியில் அவ்வாவி நிலையில் உள்ளவர்கள் எந்நிலையில் வந்து பிறப்பார்கள் என்பீர்.

அவர்கள் இப்பூமியில் வாழும் காலத்தில் எவ்வெண்ணத்தில் எந்நிலைகொண்ட சுவாசம் எடுத்தார்களோ அந்நிலையிலே தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

1.இவ்வுலகம் இக்கலி முடிந்து கல்கியில் மாறுபடும் பொழுது
2.மற்ற மண்டலங்களில் இருந்து இப்பொழுது நாம் பெறும் சக்தி நிலையும் மாறுபடுவதினால்
3.ஆவி நிலையில் உள்ளவர்களின் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த தன்மை இப்பூமியில் கிடைக்காததினால்
4.அடுத்த சுழற்சியில் பல ஆயிரம் காலங்கள் ஆனாலும் ஆகலாம்.
5.அவர்களுக்கு உகந்த பிறப்பிடம் பெற்றுப் பிறவி எடுத்திட…!

இப்பொழுது மனிதர்களாக வாழ்பவர்களுக்காவது சூட்சும நிலை பெற்று எம்மண்டலத்திலும் எவ்வுடலையும் ஏற்கும் தன்மை வருகின்றது.

ஆகவே.. இப்பொழுது நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை “பாக்கியம் பெற்ற வாழ்க்கை…” என்று கருத்தில் கொண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை உன்னத வாழ்க்கை…!

1.இவ்வாழ்க்கையை நிலைக்கச் செய்து ஒவ்வொருவரும் வந்திடுவீர் சூட்சும நிலைக்கே.
2.ஆவி உலகின் சிக்கலில் எவரும் சிக்கிக் கொள்ளாதீர்…!

Leave a Reply